மறைந்த ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது: பாரம்பரிய ஓவியக்கலைக்கு மத்திய அரசு கவுரவம்
மறைந்த ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது: பாரம்பரிய ஓவியக்கலைக்கு மத்திய அரசு கவுரவம்
UPDATED : ஜன 25, 2026 05:57 PM
ADDED : ஜன 25, 2026 05:55 PM

பந்தலுார்: கடந்தாண்டு காலமான கோத்தகிரியை சேர்ந்த பாரம்பரிய ஓவியர் ஆர். கிருஷ்ணன் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வெள்ளரிகோம்பை கிராமத்தைச் சேர்ந்த, ஆலுகுரும்பா பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த ஓவியர் ஆர். கிருஷ்ணனுக்கு(52) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவர் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இவர் குறும்பா ஓவியங்களை, வரைவதில் சிறப்பு பெற்றவர். 30 ஆண்டுகளாக இவர் ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டிருந்தார். தம் மக்களின் சமூக வாழ்க்கை, சடங்குகள், தேன் எடுத்தல், திருமணம், காட்டின் வாழ்வியல் போன்றவற்றை இயற்கை நிறங்களையும், ஆலம் வேர் தூரிகைகளை கொண்டு வரைந்துள்ளார்.'
மூவாயிரம் ஆண்டுகள் பழமையான, 'எழுத்துப் பாறை' ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு, அத்தகைய ஓவியங்களையும் இவர் வரைந்துள்ளார்.

குறும்பா ஓவியங்களை வரைந்ததற்காக, பல்வேறு தேசிய விருதுகளை பெற்றவர். இவர் கடந்த மார்ச் 14ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மனைவி சுசீலா, மேட்டுப்பாளையம் பாக்கு தோப்பில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். அவரது மூத்த மகள் வாசுகி தந்தை இறந்தவுடன் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். மகன் ராகுல் 9ம் வகுப்பு, மகள்கள் கீதா 7ம் வகுப்பு, கீர்த்திகா 4ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
விருது பெற்றது குறித்து சுசீலா கூறுகையில், எனது கணவர் குறும்பா ஓவியங்களை வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அவர் உயிரோடு இருந்தவரை என்னை வேலைக்கு அனுப்பியதில்லை. ஓவியங்களை வரைந்ததற்காக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து, பரிசுகள் வழங்கி உள்ளனர். இறப்பதற்கு முன் இன்னும் சில மாதங்களில் எனக்கு பெரிய விருது ஒன்று கிடைக்கும், அதனை குடும்பத்தோடு சென்று வாங்கி வர வேண்டுமென மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஆனால் உடல் நலக் குறைவால் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். தற்போது விருது வழங்கியுள்ள நிலையில், எனது குழந்தைகள் படிப்பதற்கு உதவி செய்தால் மனதிற்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கும்' என்றார்.

