காஷ்மீர் பயணத்திட்டத்தை மாற்றும் சுற்றுலா பயணிகள்: 90% முன்பதிவு ரத்து
காஷ்மீர் பயணத்திட்டத்தை மாற்றும் சுற்றுலா பயணிகள்: 90% முன்பதிவு ரத்து
ADDED : ஏப் 23, 2025 07:18 PM

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக ஜம்மு காஷ்மீருக்கு செல்ல முன்பதிவு செய்திருந்தவர்களில் 90 சதவீதம் பேர் தங்கள் சுற்றுலா பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலின் தாக்கம் ஜம்முகாஷ்மீரில் சுற்றுலாத் தொழிலை அசைத்து பார்த்திருக்கிறது. அங்கு செல்வதற்காக முன்பே திட்டமிட்டு, அதற்கான பயண ஏற்பாடுகளை செய்திருந்த சுற்றுலா பயணிகள் அதை ரத்து செய்து வருகின்றனர். குறிப்பாக, குல்மார்க், ஹஜன் பள்ளத்தாக்கு, துலிப் கார்டன்ஸ் பகுதிகளுக்கான முன்பதிவை ரத்து செய்துள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் அச்சம் காரணமாக தங்கள் பயணத்திட்டத்தை அவர்கள் ரத்து செய்து இருப்பதாக சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் கூறி உள்ளனர். இதுகுறித்து டில்லி கன்னட் ப்ளேசில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டாளர் ஒருவர் கூறியதாவது;
எங்களுக்கு ஒருசில குடும்பங்களில் இருந்து மட்டுமே டிக்கெட் புக் செய்யப்பட்டு உள்ளது. பஸ், விமானம் போன்றவற்றில் பயணம் செய்ய முன்பே ஏராளமானோர் டிக்கெட் புக் செய்வது வழக்கம். ஆனால், இப்போது பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர், அதை ரத்து செய்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

