பழனி - ஈரோடு ரயில் பாதை திட்டம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இல்லை
பழனி - ஈரோடு ரயில் பாதை திட்டம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இல்லை
ADDED : செப் 12, 2026 04:01 AM
சென்னை: பழனி - ஈரோடு புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, நடப்பு மத்திய பட்ஜெட்டில், 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருப்பது பின்னடைவை ஏற்படுத்து உள்ளது.
தமிழகத்தில் நடக்கும் புதிய ரயில் பாதை திட்டங்களில், பழனி - ஈரோடு திட்டம் முக்கியமானது. பழனியில் இருந்து தொப்பம்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாராபுரம், நல்லிமடம், ஊதியூர், காங்கயம், சென்னிமலை, ஈங்கூர் வழியாக ஈரோடை இணைக்க, 91.5 கி.மீ., புதிய ரயில் பாதை அமைக்க, 50 ஆண்டுகள் முன் ஆலோசிக்கப்பட்டது.
கடந்த 2002க்கு பின், மத்திய அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியது. 'சர்வே' பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டு, திட்ட மதிப்பீடு, 640 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. தற்போது, இதன் மதிப்பு 1,140 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. ஆறு பெரிய பாலம், 42 சிறிய பாலம், 23 ரயில்வே கதவு அமையும் என, அறிவிக்கப்பட்டது.
மத்திய பட்ஜெட்டில், ஈரோடு -- பழநி ரயில்வே திட்டத்துக்கென சிறு தொகை ஒவ்வொரு முறையும் ஒதுக்கப்படுகிறது. நிதி ஒதுக்கீடு ஒருபுறம் இருந்தாலும், இந்த திட்டப் பணியில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.
இதற்கிடையே, நடப்பு மத்திய பட்ஜெட்டில் பழனி - ஈரோடு புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் இருந்தது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.
இதனால், இந்த புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதை தெற்கு ரயில்வே மறுத்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு, படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே நடந்து வரும் இரட்டை பாதை திட்டங்களுக்கு கூடுதல் நிதி செய்து, பணிகள் நடந்து வருகின்றன.
பழனி - ஈரோடு புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, 1,000 ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கி உயிருப்புடன் இருக்கிறது. இந்த திட்டத்தை ரயில்வே கைவிடவில்லை. எனவே, வரும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***
