ADDED : ஜன 15, 2024 02:31 AM

பழநி: பொங்கல் விடுமுறை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பழநி முருகன் கோயிலில் நேற்று பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. அலகு குத்தி,கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஐயப்ப பக்தர்களும் வந்தனர். கூட்டம் அதிகம் இருந்ததால் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் செல்போன் அலைபேசி கொண்டு செல்ல அனுமதி இல்லாத போதும் சில பக்தர்கள் அலைபேசிகளை எடுத்து செல்கின்றனர். பொது அறிவிப்பு மையங்களை அதிகரித்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமேஸ்வரம்
பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல் வரை வாகனங்கள் வரிசையில் நின்றன.
நேற்று மீனவர்களும் மீன்பிடித்து கரை திரும்பியதால் மீன்களை ஏற்றிய கனரக லாரிகள் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வெகு நேரம் மக்கள் காத்திருந்து அவதிப்பட்டனர்.
ராமநாதபுரம் முதல் தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை அமைத்தால் ராமேஸ்வரம் நகருக்குள் செல்லாத புதிய சுற்றுச்சாலை உருவாகும். இதன் மூலம் கனரக வாகனங்கள், சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனங்களை இச்சாலையில் திருப்பி விடலாம்.
எனவே தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.