துாத்துக்குடியில் கொலையான மாணவியின் பெற்றோருக்கு போனில் பழனிசாமி ஆறுதல்
துாத்துக்குடியில் கொலையான மாணவியின் பெற்றோருக்கு போனில் பழனிசாமி ஆறுதல்
ADDED : மார் 18, 2026 07:12 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில், சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், துாத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு, வேடநத்தம் கிராமத்திற்கு நேற்று சென்று, மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, மொபைல்போன் வாயிலாக பேசி, மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆறுதல் கூறினார்.
அப்போது, 'நெஞ்சை பதற வைத்த இந்த கொலை சம்பவத்தில், தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கிறதா என பார்ப்போம். இல்லை என்றால், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும் உரிய நடவடிக்கை எடுப்போம். தைரியமாக இருங்கள்' என பழனிசாமி தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை, மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், தமிழிசை கூறுகையில், “சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு கூட, அனுசரணையாக இருந்த தி.மு.க., அரசு, மாணவி கொலை சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
''கொடூர மரண ஓலம் ஒலித்து கொண்டிருக்கும் போது, முதல்வர் ஸ்டாலின் அதைப்பற்றி கவலைப்படாமல், சென்னையில் 'ரீல்ஸ்' மோகத்தில் இருக்கிறார்,” என்றார்.

