பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை முடிவுரையை அவரே எழுதுகிறார்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை முடிவுரையை அவரே எழுதுகிறார்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
ADDED : டிச 24, 2025 07:00 AM

சென்னை: 'மத்திய பா.ஜ., அரசுக்கு வக்காலத்து வாங்கி, உங்கள் அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை, நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை: தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் முடக்கப்பட்டதை எதிர்த்து, குரல் கொடுக்க துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சை பொய்யை அவிழ்த்து விடுகிறார், பழனிசாமி. ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே, அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல், அலைக்கழித்தது பா.ஜ., அரசு.
இப்போது, 1,008 நிபந்தனைகளுடன் கூடிய புதிய திட்டத்தில், 125 நாட்கள் வேலை தரப்போகிறதா? உண்மையை சொன்னால் ஒருநாள் வேலைக்கு கூட, மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையை கைகழுவி உள்ளது.
பழனிசாமி அவர்களே, 'காந்தியின் பெயரை நீக்கக் கூடாது' என்று, உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே? உங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே? மாநில அரசின் மீது, 40 சதவீத நிதிச்சுமையை ஏற்றும் ஏதேச்சதிகாரம் கைவிடப்படவில்லையே?
டில்லியை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்கும் என்று, யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, பா.ஜ., அரசு குழி தோண்டி புதைப்பதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை, நீங்களே எழுதி கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

