தயாரிப்பு குறைபாடு உடைய 'ஏசி' விற்பனை: 'பானசோனிக்' நிறுவனம் இழப்பீடு தர உத்தரவு
தயாரிப்பு குறைபாடு உடைய 'ஏசி' விற்பனை: 'பானசோனிக்' நிறுவனம் இழப்பீடு தர உத்தரவு
ADDED : டிச 16, 2024 01:01 AM

சென்னை: 'தயாரிப்பு குறைபாடு உடைய, 'ஏசி'யை விற்று, சேவை குறைபாடுடன் நடந்து கொண்டதால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, 35,000 ரூபாயை, 9 சதவீத வட்டியுடன், 'பானசோனிக்' நிறுவனம் வழங்க வேண்டும்' என, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த, ரவி ராகுல் தாக்கல் செய்த மனு:
பெரம்பூரில், 'கோல்ட் பாயின்ட் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் செயல்படுகிறது. இங்கு, 2022 பிப்ரவரி, 5ல், 35,000 ரூபாய் மதிப்பில், ஒரு டன், 'ஏசி' வாங்கினேன்.
அதாவது, கடை ஊழியர்கள் கவர்ச்சிகரமாக பேசி, பானசோனிக், 'ஏசி'யை வாங்க வைத்தனர். வீட்டில் அதை நிறுவியது முதல் சரியாக இயங்கவில்லை.
தொடர் பழுதால் கோடை காலத்தில், 'ஏசி'யை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்ததும், பானசோனிக் நிறுவன அதிகாரப்பூர்வ ஊழியர்கள், வீட்டுக்கு வந்து பழுதை சரி செய்தனர்.
இருப்பினும், மீண்டும் பழுதானது. தயாரிப்பு குறைபாடு உடைய, 'ஏசி' என்பதால், துவக்கம் முதல் பழுது ஏற்பட்டது.
மன உளைச்சல்
சந்தையில் பொருளை விற்கும் முன், உரிய ஆய்வு செய்திருக்க வேண்டும். உற்பத்தி குறைபாடுடைய பொருளை விற்றதுடன், சேவை குறைபாடுடன் நிறுவனம் நடந்துள்ளது.
எனவே, நியாயமற்ற வணிகத்தில் ஈடுபட்டு, சேவை குறைபாடுடன் நடந்த நிறுவனம், அந்த பொருளை விற்ற கடை ஆகியோர், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், பொருளுக்கு நான் செலுத்திய, 35,000 ரூபாயை, 12 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும். பழுதான, 'ஏசி' யால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, ஒரு லட்சம், வழக்கு செலவாக 10,000 ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர், 'ஏசி' வாங்கியது முதல் சரிவர இயங்கவில்லை. பொருளுக்கான உத்தரவாதம் காலத்தில், அடிக்கடி ஏற்பட்ட பழுது குறித்து புகார் அளித்து உள்ளார்.
அதிகாரப்பூர்வ பழுது நீக்கும் ஊழியர்கள் சரி செய்து கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் பழுதை சரி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
பழுதான பொருளுக்கு பதில் புதிய பொருள் வந்ததாக கூறி, மனுதாரரை அழைத்த போது, அவர் பெற மறுத்தார் என, நிறுவனம் தரப்பு அளித்த விளக்கம் ஏற்புடையதல்ல.
சேவை குறைபாடு
தொடர் பழுதால் ஒரு கட்டத்தில், பொருளை உற்பத்தி செய்த நிறுவனம் மற்றும் விற்றவர் மீதான நம்பிக்கையை புகார்தாரர் இழந்து விட்டார். தயாரிப்பு குறைபாடுள்ள, 'ஏசி' வழங்கியதன் வாயிலாக, சேவையில் குறைபாடு உள்ளது தெளிவாகிறது.
எனவே, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, பொருளுக்கான தொகையான, 35,000 ரூபாயை, 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். அத்துடன், சேவை குறைபாடுக்கு 10,000; வழக்கு செலவாக 5,000 ரூபாயையும் பானசோனிக் நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.