எதிர்பார்த்த வெற்றியை இழந்த 'பராசக்தி' திரைப்படம்; என்ன செய்வது என புரியாமல் தி.மு.க., தடுமாற்றம்
எதிர்பார்த்த வெற்றியை இழந்த 'பராசக்தி' திரைப்படம்; என்ன செய்வது என புரியாமல் தி.மு.க., தடுமாற்றம்
UPDATED : ஜன 13, 2026 01:29 AM
ADDED : ஜன 13, 2026 01:24 AM

சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான, பராசக்தி படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், படக்குழுவினர் மட்டுமின்றி ஆளும் கட்சியினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
படத்தின் மொத்த பட்ஜெட், 150 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஆனால், திரையிட்ட அரங்குகளில், முதல் இரண்டு நாட்களில் 50 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளதாக தெரிகிறது. அதன்பின், தியேட்டர்கள் வெறிச்சோடத் துவங்கி விட்டன.
இப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால், 150 கோடி ரூபாய் வசூலை தாண்ட வேண்டும். தாண்டுமா என்பது சந்தேகம் என்கிறது, கோலிவுட் வட்டாரம்.
மாணவர் போராட்டம்
இப்படத்தின் கதை, ஹிந்திக்கு எதிராக கடந்த 1960 - 64ம் ஆண்டுகளில் நடந்த மாணவர் போராட்டத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ் உணர்வு, தேசிய உணர்வு இரண்டையும் இப்படம் பிரதிபலிக்கிறது.
மத்திய அரசு அதிகாரியாக நடிக்கும் வில்லன் கதாபாத்திரம் தேசிய உணர்வையும், கதாநாயகன் பாத்திரம் தமிழ் உணர்வையும் பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு அதிகாரியின் கடமை உணர்ச்சியை தான் தமிழ் ரசிகர்கள் ரசித்துள்ளனர்.
பொதுவாக ஒரு படத்தில் கதாநாயகனை ரசிப்பது தான் வழக்கம். இந்த படத்தில், வில்லன் நடிப்பையும் கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். காரணம், ஹிந்தி எதிர்ப்பு என்பதை இன்றைய இளைஞர்கள், மாணவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஹிந்தி மொழி படிப்பதும் பேசுவதும் அவசியம் என்பதை, இன்றைய தமிழ் மாணவர்களும் இளைஞர்களும் பெண்களும் உணர்ந்துள்ளனர். இளம் பருவத்திலேயே ஹிந்தி மொழியை பள்ளிகளில் கற்று வருகின்றனர். எனவே ஹிந்தி எதிர்ப்பு, திணிப்பு குறித்து, சிவகார்த்திகேயன் பேசும் வசனமும் காட்சியும் ரசிகர்களை கவரவில்லை. படத்திற்கு, நேர்மறை - எதிர்மறை என இருதரப்பு விமர்சனங்களும் எழுந்துள்ளன.
திராவிட சிந்தனை கொண்டவர்கள் படத்தை ரசித்துள்ளனர். தேசிய உணர்வு கொண்டவர்கள் படத்தை கொண்டாடவில்லை. படத்திற்கு ஏன் சென்றோம் என்ற வேதனையோடு பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியில் ஹிந்தி மொழியையும் சேர்த்து, தமிழகத்தில் மும்மொழி திட்டத்தை அமல்படுத்த முயற்சித்தபோது, திராவிட இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மறைந்த தி.மு.க., தலைவர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் போன்றவர்கள், மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கும் காட்சிகள் பராசக்தி படத்தில் உள்ளன.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடக்க உத்தரவிட்ட அப்போதைய காங்கிரஸ் முதல்வர் பக்தவத்சலம் பற்றிய காட்சி இருப்பதை, தமிழக காங்கிரசார் ஏற்கவில்லை.
பிரசார ஆயுதம்
'இந்த படத்தை யாரும் பார்க்க வேண்டாம்; பணத்தை வீணாக செலவு செய்ய வேண்டாம்' என, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளார். அதன்படி, காங்கிரஸ் தொண்டர்களும், பராசக்தி படத்தை புறக்கணிக்கப் போவதாக பதிவிட்டுள்ளனர்.
ஹிந்தி திணிப்பை எதிர்த்து, தி.மு.க., குரல் கொடுப்பதையும், காங்கிரஸ் ஆட்சியில் திராவிட இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்ததையும், துப்பாக்கிச் சூட்டில் பலியானதையும், இன்றைய இளைஞர்களுக்கு நினைவூட்ட இப்படம் முயற்சிக்கிறது. அது, ரசிக்கும்படியாகவும் ஏற்கும்படியாகவும் இல்லை என்பதால், எதிர்பார்த்த வெற்றியை இப்படத்தால் பெற முடியவில்லை.
ஹிந்தியை எதிர்ப்பது தி.மு.க.,வின் அடிநாதமான கொள்கை என்பதால், அந்த தீயை பரவ செய்து, தமிழ் உணர்வை துாண்டி, தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு எதிரான பிரசார ஆயுதமாக பயன்படுத்த, இப்படத்தின் வெற்றியை தி.மு.க., பெரிதும் நம்பியது. ஆனால், அது எடுபடாமல் போய்விட்டதால், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அக்கட்சியினர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

