585 ரயில் நிலையங்களில் பார்சல்கள், சரக்குகள் தேக்கம்
585 ரயில் நிலையங்களில் பார்சல்கள், சரக்குகள் தேக்கம்
ADDED : ஆக 27, 2025 12:16 AM
சென்னை:தமிழகத்தில் உள்ள, 20 ரயில் நிலையங்கள் உட்பட, நாடு முழுதும், 585 ரயில் நிலையங்களில் தேங்கியுள்ள, பார்சல்கள் மற்றும் சரக்குகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த, ரயில்வே மண்டலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின், 'கதி சக்தி' திட்டத்தின் கீழ், ரயில்வே சார்பில், முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு, ரயில் இணைப்பு வசதி, சரக்குகளை கையாளுவதை அதிகரிக்க, 'ஷெட்' அமைக்கும் பணி போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன.
சரக்குகள் கையாள்வது, ஆண்டுதோறும் 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆனால், ரயில் நிலையங்களில் சரக்குகளை, உடனுக்குடன் வெளியில் அனுப்புவதில் சிக்கல் நீடிக்கிறது.
சரக்குகள் தேக்கம் காரணமாக, ரயில் நிலையங்களில் இடநெருக்கடி ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, ரயில்வே வாரியம், அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
நாடு முழுதும், 585 ரயில் நிலையங்களில், மாத கணக்கில் சரக்குகள், பார்சல்கள் தேங்கி இருப்பது கவனத்துக்கு வந்துள்ளது.
அந்த ரயில் நிலையங்களில், இன்று முதல் அடுத்த ஆறு மாதங்களுக்குள், தேங்கியுள்ள சரக்குகள் மற்றும் பார்சல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சரக்குகள் தேங்கியுள்ள ரயில் நிலையங்கள் பட்டியலில், தமிழகத்தில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், கோவை, காட்பாடி, மதுரை, நாகர்கோவில், சேலம், திருச்சி, ஈரோடு, திருநெல்வேலி உட்பட, 20 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில் நிலையங்களில், பார்சல்கள் தேங்கி இருப்பதற்கு, ரயில்வே நிர்வாகம் காரணம் அல்ல. அதிகபட்சமாக ரயில் நிலையங்களில், சரக்குகள், பார்சல் பொருட்களை, 45 நாட்கள் வரை வைத்திருக்கலாம் என்ற விதி உள்ளது.
'ஆனால், வியாபாரிகள் மற்றும் பயணியர், தங்கள் பொருட்களை எடுத்துச் செல்ல தாமதம் செய்கின்றனர். மக்கள் விரைவாக பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும்' என்றனர்.

