ADDED : ஜூலை 09, 2025 01:04 AM

சென்னை:தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், 4,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் நெறி உள்ளிட்ட பாடங்களை நடத்த, 2012ல் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு தற்போது, 12,500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சியின் போது, பணி நிரந்தரம் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
அப்போது, தி.மு.க., ஆதரவளித்ததுடன், தேர்தல் அறிக்கையில், பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதியும் அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், சென்னை சிவானந்தா சாலையில், 4,000க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், சமூக நலக்கூடங்களில் தங்க வைத்தனர்.
பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறுகையில், 'எங்கள் கோரிக்கையை, தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்கரை ஆண்டாகியும் நிறைவேற்றாததால், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை, அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றனர்.