பைக் மீது மோதிய திருமாவளவன் கார்:வக்கீலை நையப்புடைத்த கட்சியினர்; வி.சி., கட்சியினரால் ஐகோர்ட் அருகே பதற்றம்
பைக் மீது மோதிய திருமாவளவன் கார்:வக்கீலை நையப்புடைத்த கட்சியினர்; வி.சி., கட்சியினரால் ஐகோர்ட் அருகே பதற்றம்
UPDATED : அக் 07, 2025 10:50 PM
ADDED : அக் 07, 2025 10:40 PM

சென்னை : ஐகோர்ட் அருகே, தன் ஸ்கூட்டர் மீது, திருமாவளவனின் கார் மோதியதை தட்டி கேட்ட வழக்கறிஞரை, வி.சி.க.,வினர் விரட்டி, விரட்டி சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, நீதிமன்ற அறையில் வழக்கு விசாரணையின்போது, காலணி வீச முயற்சி நடந்தது. இதை கண்டித்து, வி.சி.க.,வின் சமத்துவ வழக்கறிஞர் சங்கம் சார்பில், சென்னை ஐகோர்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வி.சி., தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். மதியம் 2:30 மணியளவில் உயர்நீதிமன்றம் அருகே, என்.எஸ்.சி., போஸ் சாலை வழியாக, திருமாவளவன் காரில் சென்றார். அப்போது, முன்னாள் சென்ற ஸ்கூட்டர் மீது, திருமாவளவன் சென்ற கார் மோதியது.
ஸ்கூட்டரில் சென்ற வழக்கறிஞர் நிலை தடுமாறினார். அவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, கார் அருகே சென்று, 'ஏன் இப்படி காரை ஓட்டி வருகிறீர்கள்' என கேட்க, திருமாவளவன் காரிலிருந்தவர்கள் கீழே இறங்கி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதும், வி.சி.க.,வினர் அவரை தாக்கினர். அவர்களிடம் இருந்து அவர் தப்ப முயற்சித்தபோது, அவரை ஓட ஓட விரட்டி தாக்கினர். அவரது ஸ்கூட்டரை சேதப்படுத்தினர். அங்கிருந்த போலீசாரால் தடுக்க முடியவில்லை. அதன்பின் தாக்கப்பட்ட வழக்கறிஞரை, போலீசார், எஸ்பிளனேடு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் வட்டச் செயலரும், வழக்கறிஞருமான நந்தம்பாக்கத்தை சேர்ந்த ராஜிவ்காந்தி, 36, என்பது தெரிய வந்தது. அவர் தன் மீது தாக்குதல் நடத்திய, வி.சி.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் புகார் அளித்தார்.
அதை தொடர்ந்து, சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலர் பார்வேந்தன், 'வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, திட்டமிட்டு திருமாவளவன் கார் மீது மோதினார். பின் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றபோது, நான் தடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தேன். அந்த நபரின் நோக்கம், திருமாவளவனை தாக்க வேண்டும் என்பதுதான். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் அளித்தார்.
மேலும், அவரை கைது செய்யக்கோரி, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போலீசார் இருதரப்பு புகாரையும் பெற்று விசாரிக்கின்றனர். இந்நிலையில், வழக்கறிஞர் ராஜிவ்காந்தியை, வி.சி.க.,வினர் விரட்டி விரட்டி தாக்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அண்ணாமலை கண்டனம்
வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பட்டப்பகலில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், வி.சி., கட்சியினர் ஒரு வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. அவர், கார் டிரைவரை கேள்வி கேட்டதற்காக தாக்கப்பட்டுள்ளார். அந்த காரில் வி.சி., தலைவர் திருமாவளவன் இருந்தார். அவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து நடந்த போராட்டத்தில் இருந்து திரும்பி வந்த போது, அவரின் கட்சியினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இது, மோசமான செயல்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமனும், கண்டனம் தெரிவித்துள்ளார்.