தி.மு.க., ஆட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்து விட்டனர்: மத்திய இணை அமைச்சர் முருகன் கணிப்பு
தி.மு.க., ஆட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்து விட்டனர்: மத்திய இணை அமைச்சர் முருகன் கணிப்பு
ADDED : டிச 29, 2025 06:07 AM

ஊட்டி: ''திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மக்கள்இடையே எழுந்துள்ள எழுச்சி, 2026 தேர்தலின்போதும் நீடிக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழகம் முழுதும், 'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' எனும் பிரசார பயணத்தை நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி., பகுதியில், நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
இதில், மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்று பேசியதாவது: பா.ஜ.,வுக்கு ஆதரவான மக்களின் எழுச்சி அதிகரித்துள்ளது. 'தி.மு.க., ஆட்சி வேண்டாம்' என, மக்கள் முடிவு செய்து விட்டனர். நீலகிரியை சேர்ந்த வீராங்கனையோடு பிரதமர் மோடி பேசியது இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
கடந்த தேர்தலில், 511 வாக்குறுதிகளை தி.மு.க., அளித்தது. ஆனால், 51 வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், தற்போது ஒன்பது லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்து உள்ளது. கிறிஸ்துவ, இஸ்லாமிய விழாக்களுக்கு மட்டும் செல்லும் முதல்வர் ஸ்டாலின், நம்மை பார்த்து அவதுாறு பேசி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''மத்திய அமைச்சர் முருகன் நடத்திய வேல் யாத்திரை, முன்னாள் தலைவர் அண்ணாமலையின் 'என் மண்; என் மக்கள்' யாத்திரை ஆகியவற்றால், தமிழகத்தில், 18 சதவீதமாக, பா.ஜ., ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது.
''திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்றியே தீர வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமீப காலமாக, தமிழக மக்களிடையே எழுந்துள்ள எழுச்சி, வரும் தேர்தலின் போது ஓட்டுப்பதிவிலும் நீடிக்க வேண்டும்,'' என்றார்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ஊட்டி உட்பட 11 இடங்களில் மருத்துவக் கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டன.
''தற்போது, கடன்கார மாநிலமாக, குடிகார மாநிலமாக, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. ''அடுத்த ஐந்தாண்டுகளில், 60 சதவீதம் இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்க வேண்டும். ''அந்த பொறுப்பு நமக்கு உள்ளது. 2026ல், பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் போது இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

