'எம்.ஜி.ஆர்.,போல உதயநிதியை தமிழக மக்கள் பார்க்கின்றனர்' : ஆர்.எஸ்.பாரதி
'எம்.ஜி.ஆர்.,போல உதயநிதியை தமிழக மக்கள் பார்க்கின்றனர்' : ஆர்.எஸ்.பாரதி
ADDED : பிப் 14, 2024 07:26 AM

சென்னை: ''எம்.ஜி.ஆர்., காரில் வருவதை மக்கள் வீதிகளில் நின்று பார்த்தது போல, அமைச்சர் உதயநிதியை மக்கள் ஆர்வமாக பார்க்கின்றனர்,'' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
புதுக்கோட்டை நகர தி.மு.க., சார்பில், அமைச்சர் உதயநிதி பிறந்த நாளை ஒட்டி, திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடந்தது.
அக்கூட்டத்தில், ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தல், 2021ல் நடந்த சட்டசபை தேர்தல்களில், அமைச்சர் உதயநிதி, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரை முன்னிலைப்படுத்திய தேர்தலில், தி.மு.க., மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அந்த காலத்தில் எம்.ஜி.ஆர்., காரில் வரும்போது, மக்கள் வீதிகளில் நின்று பார்த்தது போல, தற்போது உதயநிதி வருவதை மக்கள் பார்க்கின்றனர்.
உதயநிதி அரசியலுக்கு வந்தபின், விஜய் உள்ளிட்ட சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவது அதிகமாக உள்ளது. அதேசமயம், செஞ்சிக்கோட்டை ஏறுபவர்கள் அனைவரும் தேசிங்கு ராஜாவாக முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

