மக்கள் பாடம் புகட்டுவர்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்!
மக்கள் பாடம் புகட்டுவர்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்!
ADDED : டிச 01, 2024 03:03 PM

சென்னை: 'நிர்வாகத் திறனற்ற முதல்வரான நீங்கள், முடிந்தால் மக்கள் பணி செய்யுங்கள்; இல்லையேல், நிர்வாகத் திறனில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள்' என முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., பதில் அளித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரின் நேற்றைய குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'அவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிக்கிறதே இல்லை' என்றார். இது குறித்து, இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது. இதுமட்டுமன்றி ஆசிரியர்கள், மருத்துவர்கள், நெசவாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் தெருவில் இறங்கி போராடும் சூழலே உள்ளது. குற்றச்சாட்டு வைப்பதே எனக்கு வேலையாக போய்விட்டது என்று கூறும் முதல்வரே, தி.மு.க., ஆட்சியின் அவல நிலையை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் என்னுடைய கடமை. அதற்கு முறையான நடவடிக்கை எடுத்து செயல்படுத்துவது அரசின் கடமை. அதை செய்யாத, தனக்கு எந்த திறமையும் இல்லாத ஒரு முதல்வரிடம் இப்படிப்பட்ட மடைமாற்றும் பதிலைத்தான் எதிர்பார்க்க முடியும்.
மக்கள் பணி
தி.மு.க.,விடம் நாகரிகத்தையோ, மக்கள் மீதான அக்கறையோ எதிர்பார்க்க முடியாது தான் என்றாலும், ஸ்டாலினின் சமீபத்திய தரக்குறைவான பேச்சுகளே அதற்கான மிகப்பெரிய சான்றாக அமைகிறது. நிர்வாகத் திறனற்ற முதல்வர் முடிந்தால் மக்கள் பணி செய்யுங்கள்; இல்லையேல், நிர்வாகத் திறனில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள். ஆட்சி இருக்கிறது என்ற ஆணவச் செருக்கில் நீங்கள் பேசும் பேச்சிற்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

