ADDED : மார் 09, 2024 08:27 PM

சென்னை:கவிஞர் வைரமுத்து எழுதிய, 'மகா கவிதை' நுாலை, இந்த ஆண்டு ஜனவரியில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அந்த நுாலுக்கு, மலேஷிய தமிழ் இலக்கிய காப்பகமும்,தமிழ்ப் பேராயமும் இணைந்து பெருந்தமிழ் விருது வழங்கியுள்ளன.
மலேஷிய தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற விழாவில், பெருந்தமிழ் விருதாக வைரமுத்துவுக்கு 1 லட்சம் மலேஷிய வெள்ளி வழங்கப்பட்டது. இது, இந்திய மதிப்பில் 18 லட்சம் ரூபாய். நினைவு பரிசாக, மகா கவிதை அட்டை படத்தின் பளிங்குச் சிலையும் தரப்பட்டது.
மலேஷிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும், தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனும் இணைந்து விருதை வழங்கினர். நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
மகா கவிதைக்கு வழங்கப்பட்ட பெருந்தமிழ் விருது, உலகத் தமிழ் படைப்பாளிகளுக்கு எல்லாம் ஊட்டமாகவும், ஊக்கமாகவும் விளங்குகிறது. அறிவியல் வேறு; இலக்கியம் வேறு. இந்த இரண்டையும் கலந்து கலை செய்கிற போது அறிவுலகம் ஏற்குமா என்ற ஐயப்பாடு எனக்கு இருந்தது.
இந்த விருதின் வாயிலாக அந்த ஐயப்பாடு அழிந்தது. தமிழர்களின் புதிய தலைமுறையை இலக்கிய அறிவியலோடு இணைக்கும் முயற்சி தான், இந்த மகா கவிதை. அதைப் புரிந்து கொண்ட மலேஷிய தமிழ் மக்களுக்கு என் நன்றி.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

