பொன்மாணிக்கவேல் வழக்கு தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் மனு
பொன்மாணிக்கவேல் வழக்கு தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் மனு
ADDED : ஏப் 17, 2025 06:23 AM

மதுரை: சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் மீது சி.பி.ஐ., பதிந்த வழக்கின் மேல் விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்தது. இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்ததையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்தார் (2018ல் ஓய்வு பெற்றார்). சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர்பாஷா மீது பொன்மாணிக்கவேல் வழக்கு பதிந்தார்.
'தீனதயாளனை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,' என சென்னை உயர்நீதிமன்றத்தில் காதர்பாஷா மனு செய்தார். அந்நீதிமன்றம்,'சி.பி.ஐ.,விசாரித்து முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. பொன்மாணிக்கவேல் மீது சி.பி.ஐ.,போலீசார் வழக்கு பதிந்தனர். ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். சி.பி.ஐ.,பதிந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என பொன்மாணிக்கவேல் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அவருக்கு எதிரான வழக்கின் மீது மேல் விசாரணை மேற்கொள்ள, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதித்து மார்ச் 13 ல் தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து காதர்பாஷா உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அது உயர்நீதிமன்றக் கிளையின் தடை உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது.
மார்ச் 28 ல் உயர்நீதிமன்றக் கிளை விசாரணையின்போது நீதிபதி பி.புகழேந்தி:
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் இங்கு இறுதி விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. ஏற்கனவே இங்கு விசாரணை நடந்தபோது காதர்பாஷா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. அவருக்கு உயர்நீதிமன்ற பதிவுத்துறை, மனுதாரர் மற்றும் சி.பி.ஐ.,தரப்பில் வழக்கு ஆவணங்கள் வழங்கப்படவில்லை. இச்சூழலில் உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்கால உத்தரவு பெற்றது புதுமையாக உள்ளது. விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி நேற்று விசாரித்தார்.
காதர்பாஷா தரப்பு வழக்கறிஞர்:
இவ்வழக்கின் ஆவணங்களை உயர்நீதிமன்றக் கிளை மூலம் சட்டவிரோதமாக எங்கள் தரப்பில் பெறவில்லை.
மார்ச் 13ல் உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்த உத்தரவின் நகலை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்தோம். அதன் நகல் மற்றும்
இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். அதனடிப்படையில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
காதர்பாஷா 2007ல் தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். சிலை கடத்தலில் தொடர்புடைய சுபாஷ் கபூர் மற்றும் அவரது உதவியாளர் தீனதயாளனை காதர்பாஷாதான் கைது செய்தார்.
சுபாஷ் கபூர் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பொன்மாணிக்கவேல் இ-மெயிலில் கடிதம் அனுப்பினார்.
பொன்மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர்:
தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்தவாரம் விசாரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.
சி.பி.ஐ.,தரப்பு,'விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை பொன்மாணிக்கவேலுக்கு வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்கக்கூடும். அது விசாரணையை பாதிக்கும்,' என பதில் மனு தாக்கல் செய்தது. நீதிபதி ஜூன் 25 க்கு விசாரணையை ஒத்திவைத்தார்.