பொதுநல வழக்கு தாக்கல் மனுதாரருக்கு தடை விதிக்க நேரிடும்; ஐகோர்ட் மதுரைக்கிளை எச்சரிக்கை
பொதுநல வழக்கு தாக்கல் மனுதாரருக்கு தடை விதிக்க நேரிடும்; ஐகோர்ட் மதுரைக்கிளை எச்சரிக்கை
ADDED : பிப் 12, 2026 10:10 PM

மதுரை: அரசு பஸ் டிரைவர், கன்டக்டர்கள் தொலைதுார பயணத்தின்போது இடையே ஓட்டல்களில் நிறுத்தி இலவச உணவு பெற தடை கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மனுதாரர் எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்தால், வழக்குத் தொடர தடை விதிக்க நேரிடும் என எச்சரித்தது.
திருநெல்வேலியை சேர்ந்த சுந்தரவேல் தாக்கல் செய்த பொது நல மனு: திருச்சி -மதுரை, மதுரை - திருநெல்வேலிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களின் டிரைவ ர்கள், கன்டக்டர்கள் உணவு தேவைகளை திருச்சி, மதுரை, திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள ஓட்டல்களில் மட்டுமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வழித் தடங்களில் இடைப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஓட்டல்களில் இலவச உணவு பெறு வதற்காக பஸ்களை நிறுத்திச் செல்ல தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: டிரைவர்கள், கன்டக்டர்கள், பயணிகளின் உணவு, குடிநீர், கழிவறை தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக இடையில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இம்மனு ஏற்புடையதல்ல. மனுதாரர் எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்தால், அவர் பொதுநல வழக்கு தொடர தடை விதிக்க நேரிடும். தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

