மதுரையில் இருந்து காசிக்கு யாத்திரை ரயில் அறிவிப்பு
மதுரையில் இருந்து காசிக்கு யாத்திரை ரயில் அறிவிப்பு
ADDED : நவ 25, 2025 02:15 AM

சென்னை: தை அமாவாசையை ஒட்டி, காசி, கயா உள்ளிட்ட இடங்களுக்கு யாத்திரை ரயில், வரும் ஜனவரி, 16ம் தேதி இயக்கப்பட உள்ளது.
இந்தியாவின் உயர்ந்த கலாசாரம் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை மக்கள் கண்டுகளிக்க, ரயில்வே, தனியார் பங்களிப்புடன் இணைந்து, 'பாரத் கவுரவ்' ரயில் திட்டத்தை செயல்படுத்துகிறது.
தை அமாவாசையை ஒட்டி, அடுத்த ஆண்டு ஜனவரி, 16ம் தேதி, மதுரையில் இருந்து புறப்பட்டு, காசி, கயா, காமாக்யா உள்ளிட்ட இடங்களை காணும் வகையில், யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாத்திரை ரயில், திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படும். உத்தர பிரதேச மாநிலம், காசி விஸ்வநாதர் கோவில், வாரணாசி, கங்கையில் புனித நீராடல், பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமம், பீஹார் மாநிலம் கயா உட்பட பல்வேறு ஆன்மிக இடங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எட்டு நாட்கள் கொண்ட யாத்திரைக்கு, 'ஏசி' பெட்டியில் 26,500 ரூபாய், ஸ்லீப்பர் கிளாஸ், 19,300 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் பெற, மொபைல் எண் 73058 58585 அல்லது www.tourtimes.in என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம்.

