புதுக்கோட்டையில் திடீரென சாலையில் தரையிறங்கிய விமானம்; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
புதுக்கோட்டையில் திடீரென சாலையில் தரையிறங்கிய விமானம்; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
UPDATED : நவ 13, 2025 01:39 PM
ADDED : நவ 13, 2025 01:08 PM

புதுக்கோட்டை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் சிறிய ரக விமானம் தரை இறங்கியது.
புதுக்கோட்டை அருகே கீரனூர் பகுதியில் திடீரென சாலையில் சிறிய ரக விமானம் தரையிறங்கியது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தவிர்க்க இயலாத சூழ்நிலையில், திடீரென சாலையில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கும் போது, அந்த வழியில் வாகன போக்குவரத்து எதுவும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
எனினும், விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. தற்போது விமானம் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்து மட்டுமே இருக்கும் தார் சாலையில், திடீரென விமானம் தரை இறங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பேர், விமானத்தை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். விமானி உட்பட இருவர் காயமடைந்து உள்ளனர். சிறிய ரக விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹிந்தி மொழி
விமானிகள் இருவரை அப்பகுதி மக்கள் மீட்டனர். விமானிகள் இருவரும் ஹிந்தி மொழி பேசினர். இவர்களுக்கு தமிழ் மொழி தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி விமான நிலையத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

