தாராளமாக கொடி நாள் நிதி தாருங்கள்! முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
தாராளமாக கொடி நாள் நிதி தாருங்கள்! முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
ADDED : டிச 08, 2024 01:16 AM

சென்னை: 'முன்னாள் படைவீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நம் நன்றியையும், நல்வணக்கத்தையும் காணிக்கையாக்கும் வகையில், பெருமளவில் கொடி நாள் நிதி வழங்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஒவ்வொரு ஆண்டும் கொடி நாள், டிசம்பர் 7ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் எல்லைகளையும், நம் சுதந்திரத்தையும் காக்கும் பணியில், எண்ணற்ற படைவீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கின்றனர்; எத்தனையோ ஆயிரம் வீரர்கள் தங்கள் உடல் உறுப்புகளை இழந்திருக்கின்றனர்.
தனிமனிதரல்ல
எப்போதும் எத்தகைய துன்பம் வந்தாலும், சிறிதும் அஞ்சாமல் தங்கள் கடமையே பெரிதென்று எண்ணி பலர் பணியாற்றுகின்றனர். இவர்கள் தனி மனிதர்கள் அல்ல. தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றும் பொறுப்பு ராணுவ வீரர்களுக்கும் உண்டு.
அந்த பொறுப்பை, நாட்டு மக்கள் தங்கள் கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ராணுவ வீரர்களின் குடும்ப நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும், பொருள் உதவியும், பிற உதவிகளும் செய்ய வேண்டும். இதை, கொடி நாள் அனைவருக்கும் நினைவூட்டுகிறது.
பல திட்டங்களை வழங்கி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலன் காப்பதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.
எனவே, நடப்பாண்டு கொடி நாளிலும் பெருமளவில் நிதி வழங்கி, முன்னாள் படைவீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நம் நன்றியையும், நல்வணக்கத்தையும் காணிக்கையாக்குவோம்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம், கொடி நாள் நிதிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்கொடை வழங்கி, கொடி நாள் வசூலை துவக்கி வைத்தார்.
ரூ.67 கோடி வசூல்
மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, தலைமை செயலர் முருகானந்தம், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், முன்னாள் படைவீரர் நல இணை இயக்குனர் மேஜர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் கொடி நாள் நிதியாக, கடந்தாண்டு டிசம்பர் 7 முதல், நடப்பாண்டு டிசம்பர் 7 வரை, 67 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று நடந்த கொடி நாள் நிகழ்ச்சியில், முப்படைகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதில், இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார், முன்னாள் படை வீரர் நலத்துறை இயக்குனர் பவன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கவர்னர் ரூ.5 லட்சம்
கொடி நாளை முன்னிட்டு, கவர்னரின் விருப்ப நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, கவர்னர் ரவி நேற்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த்திடம் வழங்கினார்.