ADDED : செப் 09, 2026 12:26 AM
மதுரை: மதுரையில், பிளஸ் 1 மாணவர் தமிழ்ச்செல்வன், 16, ஆணவ கொலை செய்யப்பட்டதாக, குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மதுரை, கூடல்நகர் கருப்பசாமி - யோகலட்சுமி தம்பதியின் -மகன் தமிழ்ச்செல்வன், அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். செப்., 6ம் தேதி காலை கிரிக்கெட் விளையாட சென்றவர், வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம், ஆனையூர் கழிவுநீரேற்று நிலையம் அருகே, குட்டையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது, காதல் விவகாரத்தில் நடந்த ஆணவ படுகொலை. சம்பந்தப்பட்டோரை கைது செய்ய வேண்டும் என, குடும்பத்தினர் நேற்று உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்ச்செல்வனும், வீட்டின் அருகே வசிக்கும், 10ம் வகுப்பு மாணவியும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
காதல் விவகாரம் மாணவி பெற்றோருக்கு தெரிந்ததை தொடர்ந்து, தமிழ்ச்செல்வனை எச்சரித்துள்ளனர். இருவரும் பரஸ்பரம் எழுதிய காதல் கடிதங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. விசாரணை நடக்கிறது.
குடும்பத்தினர் கூறுகையில், 'குட்டையில் மூழ்கி இறந்திருந்தால் நுரையீரலில் தண்ணீர் இருந்திருக்கும். ஆனால், அவர் உடலில் இல்லை. வயிற்றில், 100 மில்லி அளவுக்கு வெளிர் பழுப்பு நிற திரவம் இருந்துள்ளது. இதனால், விஷம் கொடுத்து ஆணவ கொலை செய்யப்பட்டிருக்கலாம்' என, தெரிவித்தனர்.
