இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் உறுதி செய்துள்ளார்: அண்ணாமலை
இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் உறுதி செய்துள்ளார்: அண்ணாமலை
ADDED : மார் 29, 2024 03:19 PM

ஸ்ரீபெரும்புதூர்: ‛‛ இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்்
ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்த போது பேசுகையில், சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியனவே தி.மு.க., அரசின் சாதனை. சிப்காட் விவகாரம்- விவசாய நிலத்தை கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது.
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், எந்தவித அறிவிப்பும் இன்றி பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்துவிட்டார். பொருளாதாரத்தில்11வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இது தான் பா.ஜ., அரசின் சாதனை.
மோடி ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பை நாம் உறுதி செய்துள்ளோம். சீனாவாக இருக்கட்டும், பாகிஸ்தானாக இருக்கட்டும், எந்த பிரச்னையும் இல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
திருவள்ளூரில் பா.ஜ., வேட்பாளர் பொன்.பாலகணபதியை ஆதரித்து அண்ணாமலை பேசுகையில், பிரதமர் மோடியால் இந்திய பொருளாதாரம் வெகுவாக உயர்ந்துள்ளது. 33 மாதங்களில், தி.மு.க., 3.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. மத்திய அமைச்சரவையில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 72 பேர் அமைச்சர்களாக உள்ளனர். 45 லட்சம் விவசாயிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் கொடுக்கும் ஆட்சி தான் பாஜ.,. இவ்வாறு அவர் பேசினார்.

