லட்சத்தீவில் பிரதமர் மோடி: தமிழக போலீஸ் பாதுகாப்பு
லட்சத்தீவில் பிரதமர் மோடி: தமிழக போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஜன 04, 2024 04:42 AM

சென்னை : லட்சத்தீவில் நலத்திட்டப் பணிகளை துவக்கிய பிரதமர் மோடிக்கு, தமிழக காவல் துறையைச் சேர்ந்த, இரண்டு எஸ்.பி.,க்கள் தலைமையில், பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜன.,2ல் தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருச்சியில் விமான நிலைய புது முனையம் திறப்பு மற்றும் பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அவர், லட்சத்தீவு தலைநகரான, 7 கி.மீ., பரப்பளவில் உள்ள கவரத்தி தீவில், பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
பிரதமருக்கான பாதுகாப்பு பணியில், மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக காவல் துறையில், கமாண்டோ படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழு உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'பிரதமருக்கான பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசாரும் ஈடுபடுவர். தமிழகம் வந்த பிரதமருக்கு எவ்வித குளறுபடியும் இன்றி சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
'அந்த அனுபவத்தின் அடிப்படையில், லட்சத்தீவிலும் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது பரஸ்பரமான நடவடிக்கை தான்' என்றனர்.