நமது இளைஞர் சக்தி வலிமையானது: பிரதமர் மோடி பெருமிதம்
நமது இளைஞர் சக்தி வலிமையானது: பிரதமர் மோடி பெருமிதம்
UPDATED : ஜன 10, 2026 12:45 PM
ADDED : ஜன 10, 2026 12:38 PM

புதுடில்லி: நமது இளைஞர் சக்தி வலிமையானது. வளமான தேசத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், விவேகானந்தரின் பிறந்த நாளான, ஜன., 12ம் தேதி, தேசிய இளையோர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, 'வளர்ந்த இந்தியா' எனும் பொருளில், விக்சித் பாரத்' என்ற தலைப்பில், டில்லி, பாரத் மண்டபத்தில், 29வது தேசிய இளையோர் திருவிழா நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி 3 ஆயிரம் இளைஞர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த விழாவில் தமிழக இளைஞர்களும் பங்கேற்கின்றனர்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: உற்சாகமும் ஆர்வமும் நிறைந்த நமது இளைஞர் சக்தி வலிமையானது. வளமான தேசத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது. இளைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நாடு முழுவதிலும் உள்ள எனது இளைஞர்களுடன் உரையாடுவதற்கு நான் மிகுந்த ஆவலுடன் உள்ளேன். ஜனவரி 12ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

