மாணவிக்கு பாலியல் தொல்லை 3 மாணவர்கள் மீது 'போக்சோ'
மாணவிக்கு பாலியல் தொல்லை 3 மாணவர்கள் மீது 'போக்சோ'
ADDED : பிப் 13, 2025 07:02 AM

ஆத்துார்: ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவர்கள் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 16 வயதுடைய, மூன்று மாணவர்கள், ஜன., 22 மாலை, 7ம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
கடந்த, 10ல், மாணவியின் பெற்றோர், குழந்தைகள் உதவி எண்ணில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரிக்க, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், ஆத்துார் மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் நேற்று அளித்த புகார்படி, மூன்று மாணவர்கள் மீது போக்சோ வழக்கு பதிந்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.
போலீசார் கூறியதாவது:
பள்ளி முடிந்து கழிப்பறைக்கு சென்ற மாணவியை, அதே பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கு தகவல் தெரிந்தும், அவர்கள் போலீசுக்கு தகவல் அளிக்கவில்லை. உதவி எண்ணுக்கு புகார் சென்ற பின், போக்சோ வழக்கு பதிந்து இரு மாணவர்களிடம் விசாரித்துள்ளோம். மற்றொரு மாணவரை விசாரணைக்கு ஆஜர்படுத்த, அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளோம். விசாரணை முடிந்த பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்படுவர்.