போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய சம்பவம்; காங்., எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய சம்பவம்; காங்., எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
ADDED : அக் 19, 2025 06:10 PM

சென்னை: போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரை அப்புறப்படுத்த கோரிய போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அண்ணா சாலை ஐஓபி வங்கி எதிரே உள்ள 'ஹீரோ' ஷோரூம் அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக 'டொயோட்டா பார்ச்சூனர்' என்ற சொகுசு கார் நேற்று மதியம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை கவனித்த போக்குவரத்து போலீஸ்காரர் பிரபாகரன்,35, காரை அங்கிருந்து அகற்றுமாறு, ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அப்போது, அதில் இருந்த காரின் உரிமையாளரான மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், 'சாலையில் நின்று பிச்சை தானே எடுக்கிறீர்கள்' என, போலீசாரை வசை பாடியுள்ளார்.
மேலும், அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பிரபாகரனை சரமாரியாக தாக்கி, அங்கிருந்து வேறு காரில் புறப்பட்டு சென்றார். கடமையை செய்த போலீஸ்காரர் மீது, பட்டப்பகலில் காங்கிரஸ் எம்எல்ஏவும், அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், போக்குவரத்து போலீசாரை தாக்கிய சம்பவத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.