ADDED : பிப் 04, 2024 05:26 AM
சென்னை,: அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, அவரது உருவப் படத்திற்கு, அரசியல் கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் 55வது நினைவு தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, அவரது நினைவிடத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
எனவே, அவரது நினைவு தினத்தில், அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்துவதற்காக, நினைவிடம் அருகே அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தி.மு.க.,வினர் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து, பொதுச்செயலர் துரைமுருகன் தலைமையில் ஊர்வலமாக சென்று, அண்ணாதுரை படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி உள்ளிட்ட எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.,வினர் பொதுச் செயலர் பழனிசாமி தலைமையில், அண்ணாதுரை படத்திற்கு மலர் வளையம் வைத்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர். கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலர்கள் கே.பி.முனுசாமி, விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று மரியாதை செலுத்தினர். ம.தி.மு.க., அ.ம.மு.க., புதிய நீதிக்கட்சி உட்பட பல்வேறு கட்சியினரும், அண்ணாதுரை நினைவிடம் வந்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் தமிழகம் முழுதும், அரசியல் கட்சிகள் சார்பில், அண்ணாதுரை நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர், அங்கு அண்ணாதுரை படத்திற்கு மரியாதை செலுத்தினார். அவர் தனது 'எக்ஸ்' பதிவில்,''அமைதி பேரணி சென்ற கட்சியினர், அண்ணாதுரை கூறிய கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு உழைத்து, மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு, மத்தியில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.