பொன் மாணிக்கவேல் வழக்கு; உயர் நீதிமன்றம் முடித்துவைப்பு
பொன் மாணிக்கவேல் வழக்கு; உயர் நீதிமன்றம் முடித்துவைப்பு
ADDED : அக் 15, 2024 07:03 AM

மதுரை : சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக சி.பி.ஐ., பதிந்த வழக்கில், முன்ஜாமின் நிபந்தனையை தளர்த்தக் கோரி முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் மனு தாக்கல் செய்ததில் நிபந்தனையை நிறைவேற்றி விட்டதால், உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கை முடித்து வைத்தது
தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன்மாணிக்கவேல் பணிபுரிந்து, 2018ல் ஓய்வு பெற்றார்.
பணிக்காலத்தில் சென்னை, ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார்.
அவரது வாக்குமூலம் அடிப்படையில் பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா, கோயம்பேடு சிறப்பு எஸ்.ஐ., சுப்புராஜை, 2017ல் கைது செய்தனர். இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பின் ஜாமினில் வெளியே வந்தனர்.
'தீனதயாளனுக்கு ஆதரவாக பொன்மாணிக்கவேல் செயல்பட்டார். அவரை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க, என் மீது பொய் வழக்கு பதிந்தார்.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
சி.பி.ஐ., வழக்கு பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. டில்லி சி.பி.ஐ., போலீசார் பொன்மாணிக்கவேல் மீது வழக்கு பதிந்தனர்.
உயர் நீதிமன்ற கிளை, 'சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் நான்கு வாரங்களுக்கு தினமும் ஆஜராக வேண்டும்' உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஆக., 30ல் அவருக்கு முன்ஜாமின் அனுமதித்தது. பொன்மாணிக்கவேல், நிபந்தனையை தளர்த்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, “நிபந்தனையை ஏற்கனவே மனுதாரர் நிறைவேற்றி விட்டார். நிபந்தனைக்குரிய கால வரம்பு முடிந்துவிட்டது. இவ்வழக்கு முடிக்கப்படுகிறது,” என உத்தரவிட்டார்.