மிரள விடும் காளைகள்... மல்லுக்கட்டும் வீரர்கள்; அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
மிரள விடும் காளைகள்... மல்லுக்கட்டும் வீரர்கள்; அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
UPDATED : ஜன 17, 2026 11:55 AM
ADDED : ஜன 17, 2026 07:16 AM

மதுரை: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று துவங்கியது.
பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து, ஒவ்வொரு காளைகயாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. சீறிப்பாயும் காளைகளின் திமிலை பிடித்து அடக்கி வருகின்றனர். பெரும்பாலான காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து ஓடின.

முறையான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, ஜல்லிக்கட்டில் 1,100 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களம்காண உள்ளனர்.


இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு சொகுசு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. 2ம் பரிசை வெல்லும் மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு பைக் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.


