யானைகள் முகாமில் நடந்த பொங்கல் விழா: சுற்றுலா பயணிகள் திரளாக பங்கேற்பு
யானைகள் முகாமில் நடந்த பொங்கல் விழா: சுற்றுலா பயணிகள் திரளாக பங்கேற்பு
ADDED : ஜன 16, 2024 08:47 PM

கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, அபாயரணம் யானைகள் முகாமில் 27 வளர்ப்பு யானைகள் பராமரித்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள், வளர்ப்பு யானைகள் பங்கேற்கும், பொங்கல் விழா சிறப்பாக நடந்து வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான பொங்கல் விழா நேற்று, மாலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்தது. இதற்காக வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைத்து அலங்கரிக்கப்பட்டன.
முகாம் வளகத்தில், வளர்ப்பு யானைகள் கிருஷ்னர், பாமா, காமாட்சி, சந்தோஷ் அணி வகுத்து நிற்க 8 மண் பானைகளில் பொங்கல் வைத்து, பூஜை செய்தனர். விழாவில் கலெக்டர் அருணா, முதுமலை கள இயக்குனா வெங்கடேஷ், எஸ்.பி., சுந்தரவடிவேல், முதுமலை துணை இயக்குனர்கள் வித்யா, அருண் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடந்த உறி அடித்த போட்டியில் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் துவக்கி வைத்தனர். வளர்ப்பு யானைக்கு, அதிகாரிகள் உணவு வழங்கினர். விழாவில், ஆதிவாசிகளின் பாரம்பரிய இசை இசைக்கப்பட்டது. விழாவில், வனச்சரகர்கள், வன ஊழியர்கள், யானைப்பாகன்கள், பழங்குடியினர் மற்றும் திரளாக சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.