ADDED : பிப் 22, 2026 01:54 AM

சென்னை: நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று பேரணி நடந்தது.
சென்னை எழும்பூர் சித்ரா திரையரங்கம் அருகிலிருந்து துவங்கிய பேரணி, எல்.ஜி., ரவுண்டானாவில் நிறைவடைந்தது.
சங்கத்தின் மாநில தலைவர் ராமு, பேரணிக்கு தலைமை வகித்தார். பேரணியில் பங்கேற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
மாணவர் பெருமன்றம் தமிழக அரசுக்கு எதிராக, கவர்னர் ரவி செயல்படுகிறார் என கூறி, அவரை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், நேற்று கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்காக, சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் இருந்து பேரணியாக புறப்பட முயன்ற, 450 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டம் ஒத்திவைப்பு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உட்பட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில், கடந்த 18ம் தேதி முதல், சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமியை நேரில் சந்தித்து, கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அவர், 'உங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்' என, உறுதி அளித்தார். அதை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக, மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

