வரும் மார்ச்க்குள் மின் தட்டுப்பாடு தீரும் :அமைச்சர் விஸ்வநாதன் தகவல்
வரும் மார்ச்க்குள் மின் தட்டுப்பாடு தீரும் :அமைச்சர் விஸ்வநாதன் தகவல்
ADDED : ஆக 11, 2011 12:11 AM
சென்னை : ''வரும் மார்ச்க்குள் தமிழகத்தில், மின் தட்டுப்பாடு தீரும்,'' என்று மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில், 4,250 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கத் திட்டப் பணிகள் நடக்கின்றன. 1,200 மெகா வாட் திறன் கொண்ட, இரண்டு புதிய யூனிட்கள் அமைக்கப்படுகின்றன. இதன் பணிகள், 60 சதவீதம் முடிந்துள்ள நிலையில், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நேற்று பணிகளை பார்வையிட்டார். பின், எண்ணூர் துறைமுகத்திற்கு சென்று, துறைமுக சேர்மன் வேலுமணி உள்ளிட்ட அதிகாரிகளுடன் கூடுதல் நிலக்கரி இறக்குமதி குறித்து பேச்சு நடத்தினார். ஆய்வின் போது, அமைச்சர் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், மின் தட்டுப்பாட்டை போக்க, புதிய மின் நிலைய பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வட சென்னை அனல் மின் நிலையத்தில், இரண்டு யூனிட்களில், 1,200 மெகா வாட் மின்சாரம், வரும் ஜனவரியில் உற்பத்தி செய்யப்படும். மேலும், மேட்டூர் மற்றும் வல்லூர் அனல் மின் நிலைய உற்பத்தி பணிகளும் மார்ச் மாதத்தில் துவங்கும். இதனால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நீங்கி தேவையான சப்ளை வழங்கப்படும். மின் கட்டணம் உயர்த்தப்படுமா என்பது குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார் இவ்வாறு விஸ்வநாதன் கூறினார். ஆய்வின் போது, மின்வாரிய சேர்மன் ஹன்ஸ்ராஜ் வர்மா உடனிருந்தார்.

