பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை; செல்வப்பெருந்தகை
பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை; செல்வப்பெருந்தகை
ADDED : டிச 29, 2025 03:09 PM

சென்னை: பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுக்கும், காங்கிரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரசும், அகில இந்திய அளவில் இண்டி கூட்டணியில் இரு கட்சிகளும் இருக்கின்றன. இத்தகைய நிலையில், நடிகர் விஜய்யுடன், கட்சியின் தகவல் பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி முக்கிய பேச்சு நடத்தினார். ராகுலுக்கு நெருக்கமானதாக கருதப்படும் பிரவீன் பேச்சு நடத்தியது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
அதே பிரவீன் மீண்டும் திமுகவினரை சீண்டும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தை விட தமிழகம் அதிக கடன் வாங்குவதாக கருத்து வெளியிட இதற்கு, தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடனை மட்டுமே அடிப்படையாக கொண்டு மாநில வளர்ச்சியை மதிப்பிடுவது தவறு என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.
இந் நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுக்கும், காங்கிரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி;
பிரவீன் சக்கரவர்த்தி பேசுவது தமிழக காங்கிரசின் குரல் இல்லை. தமிழக காங்கிரஸ் சார்பாக நான் பேசுவதும், எங்களின் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தலைவர் ராகுல் பேசுவது தான் கட்சியின் குரல்.
இவர் ஏன் இப்படி பேசுகிறார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து பேசுவதற்கு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என தனி நபராக அவர்(பிரவீன் சக்கரவர்த்தி) முயற்சி செய்கிறார். காங்கிரஸ் இயக்கத்தின் குரல் இவர் கிடையாது.
காங்கிரசை பொறுத்தவரை, ஒருபோதும் கொல்லைப்புற வழியாகவோ, பின்புறமாகவோ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாது. இது தனிநபரின் வளர்ச்சிக்காகவும், விளம்பரத்திற்காகவும் இந்த முயற்சியை முன்னெடுக்கிறார்கள். இதற்கும் காங்கிரசுக்கும் துளியளவும் சம்பந்தம் இல்லை.
எப்போதுமே தேசிய தலைமைதான் கூட்டணியை முடிவு செய்யும் என்று பலமுறை சொல்லி விட்டோம். இவர் தனிநபராக இருந்து கொண்டு ராகுல் பெயரை கெடுக்கலாமா? காங்கிரஸ் பெயரை சீர்குலைக்கலாமா? என்று முயற்சி செய்பவர்களுக்கு இது ஒருபோதும் கை கொடுக்காது. பகல் கனவாக முடியும்.
இண்டி கூட்டணி பலமாக இருக்கிறது. அதை பிரிக்கமுடியாது. உத்தரப்பிரதேசத்துக்கும், தமிழகத்துக்கும் ஒப்பிட்டு பேசுவதை ஏற்க முடியாது. உத்தரப்பிரதேசத்தில் இருப்பது புல்டோசர் ஆட்சி. எந்த விதத்தில் இது நியாயம்?
உத்தரப்பிரதேச புள்ளி விவரம் பற்றி பிரவீன் சக்கரவர்த்தி கூறியது தவறு. அதை நான் மறுக்கிறேன். 2021ல் தமிழகத்தை அதிமுக ஆட்சியானது 4.61 விழுக்காடு கடனில் தள்ளிவிட்டுச் சென்றது. அதை 3 சதவீதமாக குறைத்தது இண்டி கூட்டணியை தமிழகத்தில் தலைமை தாங்கும் திமுக அரசு. இது நிதி ஆளுமை.
இந்த நிதி ஆளுமையை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமைப்பட்டுக் கொண்டு இப்படி பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று எனக்கு தெரியவில்லை.
இவ்வாறு செல்வப்பெருந்தகை பேட்டியில் கூறினார்.

