செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது: சென்னை போலீசுக்கு பிரேமலதா பாராட்டு
செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது: சென்னை போலீசுக்கு பிரேமலதா பாராட்டு
ADDED : மார் 27, 2025 10:26 PM

சென்னை: சென்னையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை உடனடியாக கைது செய்த போலீசாருக்கு தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில் சமீபமாக ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே கைது செய்து என்கவுண்டர் செய்தது பாராட்டுக்குரிய ஒன்றாகும். சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு இந்த முயற்சி உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.
அதேபோல் தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் கட்டுக்குள் கொண்டு வந்து, மிகச்சிறந்த முறையில் காவல்துறை பணியாற்ற வேண்டும். ஸ்காட்லாண்ட் யார்டு காவல் துறைக்கு இணையாக செயல்பட்ட காவல் துறை மீண்டும் ஈரானிய கொள்ளையர்களை கைது செய்து என்கவுண்டர் செய்ததை தே.மு.தி.க., சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரேமலதா கூறியுள்ளார்.