4 நாட்கள் அரசு முறை பயணமாக ஊட்டி வந்தார் ஜனாதிபதி; உற்சாக வரவேற்பு
4 நாட்கள் அரசு முறை பயணமாக ஊட்டி வந்தார் ஜனாதிபதி; உற்சாக வரவேற்பு
ADDED : நவ 27, 2024 12:40 PM

நீலகிரி: குன்னுார் வெலிங்டனில், உள்ள ராணுவ கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவை வந்தார். அவர், சாலை வழியாக, கோவையில் இருந்து ஊட்டி சென்றார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நம்நாடு மட்டுமின்றி நட்பு நாடுகளின் முப்படை அதிகாரிகளும் பயிற்சி பெறுகின்றனர். இந்த கல்லுாரியில், நாளை (நவ.,28) முப்படை பயிற்சி அதிகாரிகள் முன்னிலையில் நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதில் பங்கேற்க, அவர் இன்று (நவ.,27) காலை கோவை விமானம் நிலையம் வந்து இறங்கினார்.
அவரை விமான நிலையத்தில் கலெக்டர் கிராந்தி குமார் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர், கோவை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக நீலகிரி புறப்பட்டார். மதியம் 12.30 மணிக்கு ஊட்டி ராஜ் பவன் வந்து சேர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை, தமிழக கவர்னர் ரவி, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இன்று ராஜ் பவனில் தங்கும் ஜனாதிபதி, நாளை வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளையும், பழங்குடி மக்களையும் சந்திக்கிறார். தொடர்ந்து, 30ம் தேதி திருவாரூர் மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்க இருக்கிறார்.