ADDED : பிப் 29, 2024 01:12 AM
சென்னை:'மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி, தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதாக, பிரதமர் பொய் சொல்கிறார்' என, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு முறைப் பயணமாக தமிழகம் வந்து, அரசியல் கூட்டங்களில் பங்கேற்று, பிரதமர் என்பதை மறந்து, அரசியல் அவதுாறுகளை அள்ளி இறைத்து விட்டு போயிருக்கிறார் மோடி.
தமிழகத்துக்கு 10 ஆண்டு காலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டிருந்தால், அவரை பாராட்டலாம். இந்தியாவுக்கு செய்து காட்டிய வளர்ச்சியை சொல்லி இருந்தால் வரவேற்கலாம்.
அப்படி எதுவும் இல்லாததால், திருப்பூர் கூட்டத்தில், ஜெயலலிதாவை வானளாவ புகழ்ந்தும், திருநெல்வேலி கூட்டத்தில், தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தும், பிரதமர் பேசிவிட்டு போயிருக்கிறார்.
பா.ஜ., ஆட்சியை கவிழ்த்தவர் ஜெயலலிதா. கடந்த 2016 சட்டசபை தேர்தலில், 'ஜெயலலிதா ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது' என, ஓசூரில் கடுமையாக விமர்சித்த மோடி, பல்லடத்தில் பல்டி அடித்திருக்கிறார். ஜெயலலிதாவை வைத்து, தமிழகத்தில் ஓட்டு வாங்க நினைக்கிறார்.
பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, தமிழகத்திற்கு ஒரு பைசா கூட தரவில்லை. நிதி தர மறுத்துவிட்டு, துாத்துக்குடிக்கும், திருநெல்வேலிக்கும் எப்படி வருகிறீர்கள்?
தமிழகத்துக்கு பிரதமர் கொடுத்தது என்ன... சில திருக்குறள்களும், பாரதியார் கவிதைகளும் மட்டும்தான்.
பேரிடர் நிதியை கூட தராமல், அல்வா கொடுக்கும் மோடி ஆட்சிக்கு, இந்த தேர்தலில் தமிழக மக்கள் நிச்சயம் அல்வா கொடுப்பர். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி, தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்ற பொய்யை சொல்லி இருக்கிறார் பிரதமர்.
'தி.மு.க.,வை இனி பார்க்க முடியாது; இனி தி.மு.க., எங்கு தேடினாலும் கிடைக்காது' என, பிரதமர் கூறி உள்ளார்.
தி.மு.க.,வையே இல்லாமல் ஆக்கி விடுவாராம்; சவால் விட்டுள்ளார். இப்படி சொன்னவர்கள் எல்லாம், வரலாற்றில் காணாமல் போய் விட்டனர். அந்த வரிசையில், அவரும் விரைவில் இணைந்து விடத்தான் போகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

