திருச்சி வந்தார் பிரதமர் மோடி: கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
திருச்சி வந்தார் பிரதமர் மோடி: கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
UPDATED : ஜன 02, 2024 10:36 AM
ADDED : ஜன 02, 2024 10:05 AM

திருச்சி: பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வந்தார். பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலின் வரவேற்றனர்.
உற்சாக வரவேற்பு
திருச்சி பாரதிதாசன் பல்கலை மாணவர்கள் பட்டமளிப்பு விழாவிலும், திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவிலும் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை 10:௦௦ மணிக்கு, விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை கவர்னர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலின் வரவேற்றனர். பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் பா.ஜ., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற மோடிக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்ற பா.ஜ., தொண்டர்களை பார்த்து பிரதமர் மோடி கை அசைத்தார்.
10:30 மணிக்கு, பாரதிதாசன் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, அங்கு 1528 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். பின், மதியம் 12:01 மணிக்கு, திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.
பின் 12:30 மணிக்கு விமான நிலைய வளாகத்தில் பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். பின் 1:10 மணிக்கு திருச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு விமானம் மூலம் செல்கிறார்.
பாதுகாப்பு
பிரதமரின் வருகையையொட்டி திருச்சி விமான நிலையம் பகுதி, பாரதிதாசன் பல்கலை வளாகம் ஆகியவை, மத்திய, மாநில போலீசாரின் முழு கட்டுப்பாட்டில், நான்கு அடுக்கு பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.

