திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பிப்.28ல் பங்கேற்பு
திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பிப்.28ல் பங்கேற்பு
ADDED : பிப் 22, 2024 03:05 AM

துாத்துக்குடி:பிரதமர் மோடி பிப்.,28ல் திருநெல்வேலியில் நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். பிப்.,27ல் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மறுநாள் பிப்.,28ல் துாத்துக்குடி வ.உ.சி., துறைமுக வளாகத்தில் நடக்கும் விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கரில் மேற்கொண்டு வரும் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். துாத்துக்குடியில் வெளி துறைமுக விரிவாக்க பணிகளை துவக்கி வைக்கிறார். ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் ரூ.520 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரயில்வே துாக்கு பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி வருகிறார். ஜான்ஸ் கல்லுாரி ஹெலிபேடில் இறங்குகிறார். கார் மூலம் திருநெல்வேலி மாவட்ட கோர்ட் வளாகம் எதிரே உள்ள திடலில் நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
திருநெல்வேலியில் பிரதமர் பங்கேற்கும் விழாவுக்கான இடத்தை நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் தயா சங்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.