ஓராண்டாகியும் முடியாத 'ஆன்லைன்' பணி ஒப்பந்ததாரர்கள் பதிவில் சிக்கல்
ஓராண்டாகியும் முடியாத 'ஆன்லைன்' பணி ஒப்பந்ததாரர்கள் பதிவில் சிக்கல்
ADDED : நவ 12, 2025 01:50 AM
சென்னை :ஒப்பந்ததாரர் பதிவுக்கான, 'ஆன்லைன்' முறை இன்னும் அமலுக்கு வராத நிலையில், பழைய பதிவு அடிப்படையில், 'டெண்டர்' பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய, பொதுப் பணித் துறை அறிவுறுத்தி உள்ளது.
அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் சார்ந்த கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப் படுகிறது.
கட்டாயம் இதற்கான டெண்டரில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்கள், பொதுப்பணித் துறையில் பதிவு செய்தவர்களாக இருப்பது கட்டாயம்.
அதன் அடிப்படையில், ஒப்பந்ததாரர்களை பதிவு செய்வதற்கான நடை முறையை, பொதுப் பணித் துறை பின்பற்றி வருகிறது.
பொதுப்பணித் துறை வரையறுத்துள்ள தகுதிகள் உடைய ஒப்பந்த தாரர்கள் மட்டுமே பதிவு செய்யப்படுவர்.
இந்நிலையில், ஒப்பந்ததாரர்கள் பதிவு பணிகளை, ஆன்லைன் முறைக்கு மாற்ற, பொதுப் பணித் துறை முடிவு செய்தது.
இதற்கான வசதியை ஏற்படுத்துமாறு, தமிழக மின் ஆளுமை முகமையிடம் கேட்டுள்ளது.
இதுதொடர்பான பணிகள், 2024ல் துவங்கின. இ - சேவை மையங்கள் வாயிலாக பதிவு செய்ய திட்டமிடப்பட்டது. இந்த வசதி அமலுக்கு வருவதில், சில தாமதங்கள் ஏற்பட்டன.
இதில், பொதுப்பணித் துறை கேட்டுக்கொண்ட சிறப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகளில், மின் ஆளுமை முகமை ஈடுபட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இழுபறி இதனால், பதிவை புதுப்பிக்காத ஒப்பந்ததாரர்கள், அரசு துறை டெண்டர்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்து உள்ளது.
எனவே, ஆன்லைன் வசதி செயல்பாட்டுக்கு வரும் வரை, தற்போதுள்ள நடைமுறை அடிப்படையில், ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யலாம் என, அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு, பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் கடிதம் எழுதி உள்ளார்.
இதன் வாயிலாக, பதிவு பிரச்னையால் ஒப்பந்த தாரர்கள் தேர்வில் ஏற்பட்ட இழுபறிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

