தயாரிப்பாளர் சங்கம் 'பெப்சி' பிரச்னை: சுமூக தீர்வு
தயாரிப்பாளர் சங்கம் 'பெப்சி' பிரச்னை: சுமூக தீர்வு
ADDED : செப் 13, 2025 01:57 AM
சென்னை,:தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான, 'பெப்சி'க்கு எதிராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற, புதிய சங்கம் துவக்கப்பட்டு உள்ளது. இந்த சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில், 'பெப்சி' அமைப்பினர் பணிபுரிவதை நிறுத்த வேண்டும் என தங்களின் உறுப்பினர்களுக்கு, ஏப்., 2ல் 'பெப்சி' கடிதம் அனுப்பியது.
இதனால், படப்பிடிப்பு, படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,- பெப்சி இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்தது.
இந்நிலையில் இந்த மனு, நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஸ்தர் நடத்திய பேச்சில், இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

