UPDATED : ஏப் 30, 2024 05:26 PM
ADDED : ஏப் 29, 2024 11:58 PM

ஸ்ரீவில்லிபுத்துார்: மாணவியரை பாலியல் ரீதியாக தவறாக நடக்க துாண்டிய பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டையில் ஒரு கல்லுாரியில் பணியாற்றியவர் நிர்மலாதேவி. கணிதத் துறை பேராசிரியரான இவருக்கு மதுரை பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித் துறையிலும் செல்வாக்கு இருந்தன.
பெரிய பொறுப்பு வகிக்கும் சிலருடன் அனுசரணையாக நடந்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஒரு மாணவிக்கு இவர் மொபைல் போனில் பேசியது, 'ஆடியோ' பதிவாக வெளியே பரவியது.
தவறாக வழிகாட்டினார்
இது போல பல மாணவியருக்கு ஏற்கனவே அவர் தவறான வழிகாட்டியதாகக் கூறப்பட்டது. பெரிய புள்ளிகளுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்மலாவின் மொபைல் போன் பேச்சு அடிப்படையில், 2018ல் அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுரை பல்கலை பேராசிரியர் முருகன், அலுவலர் கருப்பசாமி ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. அப்போது எஸ்.பி.,யாக இருந்த ராஜேஸ்வரி புலனாய்வு செய்து, ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
அங்கிருந்து மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. கல்லுாரி செயலர், பாதிக்கப்பட்ட மாணவியர், பேராசிரியர்கள், பல்கலை அலுவலர்கள் உட்பட 84 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்; 192 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
'கோவிட்' பரவல் காரணமாக விசாரணையில் தடங்கல் ஏற்பட்டது. அதன் பிறகும் மந்தகதியில் தொடர்ந்ததால், ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வேகம் பிடித்தது
ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. அதையடுத்து விசாரணை வேகம் பிடித்தது. வாரத்தில் மூன்று நாட்கள் விசாரணை நடந்தது. இப்போது, ஐ.ஜி., பொறுப்பு வகிக்கும் ராஜேஸ்வரி மார்ச் 14ல் சாட்சியமளித்தார். ஏப்ரல் 1ம் தேதி இறுதிக்கட்ட வாதம் முடிந்தது. ஏப்., 26ல் தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று நிர்மலாதேவி ஆஜராகவில்லை. பேருந்தில் வந்து கொண்டிருந்த நிர்மலாவுக்கு மயக்கம் ஏற்பட்டதால் வர இயலவில்லை என வழக்கறிஞர் தெரிவித்தார். ஐகோர்ட் கெடு 30ம் தேதி முடிவதால், 29ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்து, நிர்மலாதேவி ஆஜராக தவறினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் எச்சரித்தார்.
நேற்று காலை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆஜராகினர். மதியம் 1:10 மணிக்கு நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு வாசித்தார்.
முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என்பதால், இருவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும் இவருக்கான தண்டனை இன்று (ஏப்.,30) அறிவிக்கப்படும் என நீதிபதி கூறியிருந்தார். அதன்படி, இன்று நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். மேலும், நிர்மலா தேவிக்கு ரூ.2.42 லட்சம் அபராதமும் விதித்தார்.

