ADDED : ஜன 19, 2024 11:16 PM
சென்னை:அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் தொகுதியில் பட்டமங்கலம் என்ற இடத்தில், தி.மு.க.,வினருக்கும், அ.தி.முக.,வினருக்கும் மோதல் நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பாக, பெரியகருப்பன் உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிராக, திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் பெரியகருப்பன் மனுத் தாக்கல் செய்தார்.
மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆஜராகி, ''சம்பவத்தின் போது, பெரியகருப்பன் அந்த இடத்தில் இல்லை. அவருக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
இதையடுத்து, சிவகங்கை நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு, நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.