ADDED : பிப் 18, 2024 06:11 AM

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, எஸ்.புதுார், திருப்புத்துார், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கு சமீபகாலமாக மொபைல் போன்களில் இருந்து ஒருவர் ஆபாசமாக பேசி தொந்தரவு செய்துள்ளார்.
சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொல்லை தொடர்ந்ததால், எஸ்.புதுார் அங்கன்வாடி பெண் ஊழியர்கள் தாமே அந்த நபரை பிடிக்க முயன்றனர். இதற்காக, ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் சித்ரா, அந்த ஜொள்ளு நபரிடம் பேசி, அவரது இருப்பிடத்தை அறிந்தார்.
நேற்று முன்தினம் இரவு, திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் கல்லல், கீழப்பூங்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன், 53, என்பது தெரியவந்தது. உலகம்பட்டி போலீசார், அவரது மொபைல் போன்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.