ADDED : ஜன 01, 2025 06:23 AM

சென்னை: பல்கலை வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்திய, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலை வளாகத்திற்குள், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து, சீமான் தலைமையில் அவரது கட்சியினர் நேற்று காலை 10:00 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதால், 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பஸ்களில் ஏற்றிச் சென்று, மாநகராட்சி சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
பின், சீமான் கூறியதாவது: தமிழகத்தில் பேச்சு சுதந்திரம் சிறிதுகூட இல்லை. போராட்டம் நடத்தக்கூட அனுமதி மறுக்கின்றனர்.
கைது செய்வதற்கு முன் போராட்டத்திற்கான காரணத்தை விளக்கக்கூட, அனுமதி இல்லாத இந்த நிலை என்பது கொடுமையிலும் கொடுமை. ஜனநாயக ரீதியில் போராட வந்த எங்களை காவல் துறை ஒடுக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.