தாட்கோ நிதியில் பல கோடி ரூபாய் மோசடி; வெள்ளை அறிக்கை கேட்கும் கிருஷ்ணசாமி
தாட்கோ நிதியில் பல கோடி ரூபாய் மோசடி; வெள்ளை அறிக்கை கேட்கும் கிருஷ்ணசாமி
ADDED : மார் 28, 2025 08:54 PM

சென்னை: தாட்கோ நிதியில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும், அதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி;
சவுக்கு சங்கருக்கும் எங்களுக்கும் எந்தவிதமான உறவும் கிடையாது. இன்னும் சொல்லபோனால், எங்களுக்கு எதிராக பலமுறை மிக மோசமான கருத்துகளை பதிவு செய்தவர்தான்.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் நாங்கள் பட்டியல் வெளியேற்றம் கேட்ட போது எங்களுக்கு எதிர் நிலை எடுத்தவர்தான். இருந்தாலும் கூட, அவர் ஆளும்கட்சியை விமர்சித்துவிட்டார் என்பதற்காக அவரது தாயார் தனியாக வீட்டில் இருக்கும் போது, கழிவுகளை கொண்டுபோய் கரைத்து ஊற்றுவது எந்த விதத்தில் நியாயம்?
என்ன சட்டம் ஒழுங்கை நீங்கள் பாதுகாக்கிறீர்கள்? இதெல்லாம் ஒரு நாட்டில் அனுமதிக்கக்கூடிய விஷயமா? அரசியலில் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் எது செய்தாலும் நியாயமா?
சவுக்கு சங்கர் சொன்னதில் முக்கியமான விஷயம் என்ன என்றால், தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் துப்புரவு தொழிலாளர்கள் என்ற பெயரில் வழங்கக்கூடிய லாரிகள்,போக்குவரத்து வாகனங்கள் எல்லாமே அந்த மக்களிடத்தில் இல்லை.
அவர்கள் பெயரில் மிக பெரிய அளவுக்கு மோசடி நடைபெறுகிறது. இன்னும் சொல்ல போனால், மிக பெரிய விசாரணை நடத்த வேண்டும். 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, பட்டியல் இனத்தில் உள்ள 76 ஜாதி மக்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு நிதி எல்லாம் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பெயரில், ஒருசில அரசியல் கட்சிகள் மட்டுமே அபகரித்துக் கொள்கிறார்கள்.
இந்த மூன்றரை ஆண்டுகளில் தாட்கோ மூலமாக கிடைக்கக்கூடிய நிதியில் மிக பெரிய அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருக்கிறது. அது குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். முழு விசாரணை நடத்த வேண்டும்.
எப்படி ஒரு ஜாதிக்கு மட்டுமே தாட்கோ மூலம் ரூ.500 கோடி நிதி கொடுப்பீர்கள்? அந்த ஜாதி மக்களுக்கும் போகாமல் சில அரசியல்வாதிகள் விழுங்கிக் கொள்கிறார்கள். அதற்கு இந்த அரசு துணை போகக்கூடாது. அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

