ADDED : செப் 12, 2026 04:08 AM

சென்னை: 'மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கையில், இன்று மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தின் ஒருசில இடங்களில் நேற்று மழை பெய்தது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை ஐ.சி.எப்., பகுதியில், 5.6 செ.மீ., மழை பதிவானது. தற்போது, தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக பகுதிகள் வழியாக, 0.9 கி.மீ., உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
அதனால், இன்று மதுரை, தேனி, திண்டுக்கல், விருது நகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருச்சி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரில், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
