தி.மு.க., என்னும் மூழ்கும் கப்பல் எலிகள் திருமா-வேல்முருகன் பற்றி ராஜா விமர்சனம்
தி.மு.க., என்னும் மூழ்கும் கப்பல் எலிகள் திருமா-வேல்முருகன் பற்றி ராஜா விமர்சனம்
UPDATED : டிச 18, 2024 07:52 PM
ADDED : டிச 18, 2024 07:50 PM
திருச்சி:திருச்சியில் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி:
கடந்த 1998ல் பிப்., 14ம் தேதி, அத்வானி கோயம்புத்துார் வந்தபோது, அல் - உம்மா பயங்கரவாத இயக்கத்தினரால் தொடர் வெடி குண்டுகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடந்த 1984ல், ராம கோபாலனை அரிவாளால் வெட்டிய பாஷா தான், குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமானவர். இரு நாட்களுக்கு முன் அவர் இறந்தார். அவருடைய இறுதி ஊர்வலம் கோயம்புத்துாரில் நடந்துள்ளது.
அதில் குடும்பத்தினர் 30, 40 பேர் கலந்து கொள்ளலாம் என போலீசாரோ, அரசோ சொல்லியிருந்தால், நாகரிகம் உள்ளவர்கள் என்று சொல்லலாம்.
வங்க தேசத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக, பா.ஜ., போன்ற ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழக அரசிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்தனர். அதே சமயம், ஒரு பயங்கரவாதியின் இறுதி ஊர்வலத்துக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் பங்கேற்க எப்படி அனுமதிக்கலாம்? இதற்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பளித்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை; காட்டாட்சி நடக்கிறது. இதனால், போலீஸ் துறைக்கு வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லை.
கச்சத் தீவை இலங்கைக்கு சட்ட விரோதமாக தாரை வார்த்த காங்கிரஸ் அரசை, பார்த்துக் கொண்டு சும்மா இருந்தவர் கருணாநிதி. மக்கள் இதை நுணுக்கமாக உணர்ந்து கொண்டு விட்டனர். அதனால், இனிமேலும் இரு கட்சியினரும் சேர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது.
'கடலில் மூழ்கும் கப்பலுக்குள் எலிகள் இருக்காது' என்பது ஆங்கில பழமொழி. அந்த பழமொழிக்கு ஏற்ப த.வா.க., வேல்முருகன், வி.சி., கட்சி திருமாவளவன் போன்றோர், தி.மு.க., என்ற மூழ்கும் கப்பலில் இருந்து வெளியேறும் எலிகளாகி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டு வங்கியே முக்கியம்!
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு
மூளையாகச் செயல்பட்ட பாஷாவுக்கு, தமிழக அரசு தியாகியைப் போன்று அந்தஸ்து
வழங்கி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு பயங்கரவாதியின் இறுதிச்சடங்கு
போலீஸ் பாதுகாப்போடு நடக்கிறது. தேசத்தின் பாதுகாப்பை விட, ஓட்டு வங்கி
பாதுகாப்பே, 'இண்டி' கூட்டணிக்கு முக்கியம்.
ஷெஷாத் பூனாவாலா
பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர்