ADDED : நவ 16, 2013 04:46 PM
7. தியானமும் சமாதியும்
மன ஒருமைப்பாடு என்ற லட்சியத்திற்கு ராஜயோகம் நம்மை அழைத்துச் செல்கிறது. அதிலுள்ள நுட்பமான விஷயங்களைத் தவிர பல்வேறு படிகளை ஓரளவிற்குப் பார்த்தோம். மானிடர் என்ற நிலையில் நமது பகுத்தறிவு எல்லாம் உணர்வைச் சார்ந்தே இருக்கிறது. இந்த மேஜையும் நீங்களும் இங்கிருப்பதை நான் உணர்வதால்தான் நீங்களும் மேஜையும் இங்கே இருப்பதை நான் அறிய முடிகிறது. அதே வேளையில் என்னில் மிகப் பெரும் பகுதியை நான் உணர்வதில்லை. உடலின் உள்ளே உள்ள பல உறுப்புகள், மூளையின் பல பகுதிகள்-இவற்றையெல்லாம் யாரும் உணர்வதில்லை.
நான் சாப்பிடும்போது, அதை உணர்ந்து உண்கிறேன். ஆனால் அது செரிக்கும்போது, அதை நான் உணராமலே செய்கிறேன். உணவு ரத்தமாக மாறும்போது நம்மை அறியாமலேயே அது நிகழ்கிறது. அந்த ரத்தத்தால் என் உடலின் பல உறுப்புகள் சக்தி பெறுகின்றன. இதுவும் என் உணர்வின்றியே நடக்கிறது. ஆனாலும் இதையெல்லாம் செய்பவன் நான்தான். இந்த ஓர் உடலில் இருபது இருபது பேர் இருக்க முடியாது. நான்தான் செய்கிறேன். வேறு யாரும் அல்ல என்பது எனக்கு எப்படித் தெரியு? உணவை உண்டு, அதைச் செரிப்பது என்னுடைய வேலை, அந்த உணவிலிருந்து உடலுக்கு வலுவைக் கொடுப்பபது வேறு ஒருவராக இருக்கலாமே என்று சொல்லலாம், அப்படி நடக்க முடியாது. ஏனெனில் இப்போது நாம் உணர்வின்றிச் செய்யும் ஒவ்வொரு செயலையும் உணர்வு நிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டலாம். இதயம் நமது கட்டுப்பாடின்றித் துடிப்பது போல்தான் தோன்றுகிறது. இங்கிருக்கின்ற நம்முள்யாராலும் இதயத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அது தன் வழியில் செயல்படுகிறது. ஆனால் பயிற்சியின் மூலம் மனிதன் இதயத்தையும் கட்டுப்படுத்த முடியும். அதை மெதுவாக அல்லது வேகமாகத் துடிக்கும்படியோ ஏறக்குறைய நிறுத்தவோ முடியும். ஏறக்குறைய உடலின் எல்லா உறுப்புகளையும் நாம் கட்டுப்படுத்தலாம். இது எதைக் காட்டுகிறது? உணர்வுக்குப் புலப்படாத செயல்களையும் நாம்தான் செய்கிறோம், ஆனால் உணர்வின்றிச் செய்கிறோம், அவ்வளவுதான்.
ஆகவே மனித மனம் இரண்டு நிலைகளில் செயல்படுவது தெரிய வருகிறது. முதலில் உணர்வு நிலை. இதில் ஒவ்வொரு செயலும் நான்- உணர்வோடு நிகழ்கின்றன. அடுத்தது உணர்வு நிலை. இங்கு எல்லா செயல்களும் நான்-உணர்வின்றி நடைபெறுகின்றன. இவ்வாறு உணர்வின்றி நடைபெறும் மனத்தின் செயல்பாடுகள், உணர்வறு செயல் என்றும், உணர்வுடன் நிகழ்பவை உணர்வுச் செயல் என்றும் அழைக்கப்படுகின்றன. கீழ்நிலைப் பிராணிகளிடம் இந்த உணர்வுறு செயல் இயல்புணர்ச்சி எனப்படுகிறது. உயர்நிலைப் பிராணிகலும் மிகவுயர்ந்த பிராணியாகிய மனிதனிலும் உணர்வுச் செயலைக் காண்கிறோம்.
விஷயம் இத்துடன் முடியவில்லை. இதைவிட உயர்ந்த ஒரு நிலையிலும் மனம் செயல்பட முடியும். அது உணர்வையும் கடந்து செல்ல முடியும். உணர்வுறும் செயல்கள் உணர்வுநிலைக்குக் கீழே இருப்பதுபோல், வேறொரு வகையான செயல் உணர்வுநிலைக்கு மேலே இருக்கிறது, இதிலும் நான்- உணர்வு இல்லை. நான்-உணர்வு இருப்பது எல்லாம் அந்த நடுநிலையில்தான். மனம் இந்த நிலைக்கு மேலோ கீழோ இறுக்கும்போது நான்-உணர்வு கிடையாது. இருப்பினும் மனம் செயல்படுகிறது. மனம் இந்தத் தண்ணுணர்வு நிலையைக் கடந்து செல்லும்போது அது சமாதி அல்லது உணர்வுகடந்த நிலை எனப்படுகிறது. சமாதி நிலையிலிருக்கும் ஒருவன் உணர்வுநிலையின் கீழே போகவில்லை அதாவது, அவன் தன்னை உயர்த்திக் கொள்ளவதற்குப் பதிலாக, தன்னைத் தாழ்த்திக் கொள்ளவில்லை என்று எப்படி நமக்குத் தெரியும்? ஏனெனில் இந்த இரண்டு நிலைகளிலும் நிகழும் செயல்கள் நான்-உணர்வுடன் சம்பந்தப்படவில்லை. இந்தக் கேள்விக்கு விடை இதுவே: அந்த் செயல்கள் தரும் பயனிலிருந்து, அதனுடைய விளைவுகளிலிருந்து, எது கீழானது எது மேலானது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். ஆழ்ந்த தூக்கத்தில் ஒருவன் உணர்வுநிலைக்குக் கீழேயுள்ள ஒரு நிலைக்குச் செல்கிறான். அப்போது அவனது உடலில் செயல்கள் நிகழ்கின்றன. அவன் மூச்சு விடுகிறான்; ஒரு வேளை உடலைக்கூட அசைப்பான். ஆனால் இலையெல்லாõம் நான்-உணர்வின்றியே நிகழ்கின்றன. அவன் உணர்வுறு நிலையில் இருக்கிறான். யார் தூங்கச் சென்றானோ, அவனே தூக்கத்திலிருந்து விழிப்புநிலைக்?குத் திரும்பியும் வருகிறான். அவன் தூங்குவதற்கு முன் அவனிடமிருந்த மொத்த அறிவும் அதன் பின்னரும் அப்படியேதான் இருக்கிறது. அது அதிகரிக்கவே இல்லை. ஆனால் ஒரு மனிதன், சமாதி நிலையை அடையும்போது, மூடனாகச் செல்கிறான். ஞானியாக வெளிவருகிறான்.
இந்த வேறுபாட்டைஉண்டாக்குவது எது? ஒரு நிலையில், உள்ளே சென்றவன் அப்படியே வெளிவருகிறான். மற்றொரு நிலையிலோ, அனுபூதி பெற்றவனாக, ஒரு முனிவராக, ஒரு தீர்க்கதரிசியாக, ஒரு ஞானியாக, வாழ்க்கையே மாறப் பெற்றவனாக, ஒளி பெற்றவனாக வெளிவருகிறான். இவைதான் இருவகையான விளைவுகள். விளைவுகள் வேறுபட்டிருந்தால் காரணங்களும் வேறுபட்டதாகவே இருக்க வேண்டும். சமாதியிலிருந்து திரும்பி வரும்போது ஒருவனுக்கு இருக்கின்ற ஞானம் உணர்வறு நிலையில் கிடைக்கும் அறிவைவிட, உணர்வு நிலையில் ஆராய்ச்சியால் பெறும் அறிவைவிட மிகவும் உயர்வானது. எனவே அந்த நிலை உணர்வைவிட உயர்ந்ததாக இருக்க வேண்டும். சமாதி நிலையே உணர்வுகடந்த நிலை எனப்படுகிறது.
இதுவே சமாதியைப் பற்றிய சுருக்கமான விளக்கம். அதனால் பெறும் பயன் என்ன? அது இதோ: ஆராய்ச்சி அறிவு ஆகட்டும், மனத்தின் உணர்வுச் செயல்கள் ஆகட்டும், அது குறுகிய எல்லைக்குட்பட்டது. மனித அறிவு சிறு வட்டத்திற்குள்ளேயே செயல்பட முடிகிறது; அதைக் கடந்து போக முடியாது; அதைக் கடந்து செல்வதற்கான ஒவ்வொரு முயற்சியும் பயனற்றுப் போகிறது. ஆனால் அறிவாகிய இந்த வட்டத்திற்கு அப்பால்தான் மனித குலத்திற்கு மிகவும் பிரியமானவை எல்லாம் உள்ளன. அழிவற்ற ஆன்மா உள்ளதா? கடவுள் இருக்கிறாரா? இந்தப் பிரபஞ்சத்தை வழிநடத்திச் செல்கின்ற மேலான சக்தி ஏதேனும் உண்டா? இத்தகைய கேள்விகள் எல்லாமே பகுத்தறிவு வட்டத்திற்கு அப்பாற்பட்டது. நமது சாதாரண அறிவால் இந்தக் கேள்விகளுக்கு விடை காண முடியாது. அறிவு என்ன சொல்கிறது? நான் நம்பிக்கையற்றவன் ஆம் என்றோ இல்லை இல்லை என்றோ எனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறது அது.. ஆனால் இந்தக் கேள்விகள் நமக்கு மிகவும் முக்கியமானவை. இவற்றிற்குச் சரியான விடை கிடைக்காவிட்டால் மனித வாழ்க்கை பயனற்றதாக ஆகிவிடும். நமது நீதிநெறிக் கொள்கைகள், நல்லொழுக்கங்கள் மட்டுமல்ல, மானிட வாழ்வில் நல்லதாக, சிறந்ததாக உள்ள அனைத்துமே அந்த அறிவு வட்டத்திற்கு அப்பால் இருந்து கிடைத்த விடைகளிலிருந்து உருவாக்கப்பட்டவையே. எனவே இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பது மிகவும் அவசியம்.
வாழ்வு ஒரு சிறு நாடகமாகவோ அல்லது இந்தப் பிரபஞ்சம் அணுக்களின் எதிர்பாராத சேர்க்கையால் உண்டானதாகவோ மட்டும் இருக்குமானால், நான் ஏன் மற்றவனுக்கு நன்மை செய்ய வேண்டும்? கருணை, நியாயம், சகோதர மனப்பான்மை இவையெல்லாம் ஏன் இருக்க வேண்டும்? இந்த உலகில் மிகவும் நல்ல காரியம் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது அல்லவா! ஒவ்வொருவனும் தனக்காக வாழ்வதுதான் சிறந்தது. எந்தப் பயனும் இல்லாவிட்டால் நான் ஏன் என் சகோதரனை நேசிக்க வேண்டும்? ஏன் அவனது கழுத்தை வெட்டக் கூடாது? அப்பால் எதுவும் இல்லையானால், சுதந்திரம் என்ற ஒன்று இல்லையானால், இருப்பதெல்லாம் உயிரற்ற கடினமான நியதிகளே என்றால் இவ்வுலகில் நான் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவே பாடுபட வேண்டும். ஒழுக்கத்தின் அடிப்படை? பயன் கருதும் கொள்கையே என்று தற்காலத்தில் பலர் கூறுவதைக் காணலாம். அது என்ன அடிப்படை? அதிக மக்களுக்கு மிக அதிக இன்பம் கிடைக்கும்படிச் செய்வதே. ஆனால் இதை நான் ஏன் செய்ய வேண்டும்? அதிக மக்களுக்கு அதிகத் துன்பத்தை விளைவிப்பதன் மூலம் என் காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடியுமானால் நான் ஏன் அதைச் செய்யக் கூடாது? பயன் கருதும் கூட்டத்தினர் இதற்கு என்ன விடை கொடுப்பார்கள்? எது சரி, எது தவறு என்று உனக்கு எப்படித் தெரியும்? இன்பம் வேண்டும் என்ற ஆசை என்னைத் தூண்டுகிறது. நான் அதை நிறைவேற்றிக் கொள்கிறேன். அது என் இயல்பு. அதற்குமேல் எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு இந்த ஆசைகள் இருக்கின்றன. அதை நான் நிறைவேற்றுகிறேன். அதற்கு என்னை ஏன் குற்றம் சொல்கிறீர்கள்? மனத வாழ்வு, ஒழுக்கம், அழிவற்ற ஆன்மா, இறைவன், அன்பு, இரக்கம், நன்னை செய்தல், இவற்றிற்கெல்லாம் மேலாக சுயநலமின்மை போன்ற உண்மைகளெல்லாம் எங்கிருந்து வந்தன?
எல்லா நீதிநெறிகளும், எல்லா மனிதச் செயல்களும், எல்லா எண்ணங்களும் சுயநலமின்மை என்ற ஒரே கருத்தைத்தான் சார்ந்திருக்கின்றன. மனித வாழ்வு முழுவதையுமே சுயநலமின்மை என்ற ஒரு வார்த்தையில் அடக்கிவிடலாம். நாம் ஏன் சுயநலமில்லாதிருக்க வேண்டும்? நான் தன்னலமற்று இருக்கவேண்டிய தேøண்ண்ண்ண்ண்ண்வ, அதற்கான ஆற்றல், வலிமை இவை எங்கிருந்து வருகின்றன? உங்களைப் பகுத்தறிவுவாதிகள்,பயன் கருதுவோர் என்றெல்லாம் கூறிக்கொள்கிறீர்கள். நான் தன்னலமற்று இருப்பதால் என்ன பயன் என்பதை எனக்குக் காட்டா விடில் நீங்கள் பகுத்தறிவுவாதிகள் அல்ல என்றுதான் சொல்வேன். நான் ஏன் சுயநலக்காரனாக இருக்கக் கூடாது என்பதற்குக் காரணம் காட்டுங்கள். நீங்கள் சுயநலமற்று இருங்கள் என்று ஒருவரிடம் கூறுவது கவிதை காரணம் ஆகாது. எனக்கு ஒரு காரணத்தைக் காட்டுங்கள். நான் ஏன் சுயநலமற்றவனாக இருக்க வேண்டும்? நான் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்? இன்னாரும் இன்னாரும் அப்படிக் கூறியிருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வதை நான் பொருட்படுத்தமாட்டேன். நான் சுயநலமற்று இருப்பதால் என்ன பயன்? பயன் என்ற சொல்லுக்கு அதிக இன்பம் பெறுவது என்பதுதான் பொருளானால் சுயநலத்துடன் இருப்பது தான் நான் அடையும் பயன். இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? பயன்கருதுவோர் இதற்குப் பதில் தர முடியாது. ஆனால் இதற்குப் பதில் இருக்கிறது. இந்த உலகம் என்பது எல்லையற்ற கடலில் ஒரே ஒரு துளி மட்டுமே, எல்லையற்ற சங்கிலியில் ஒரு வளையம் மட்டுமே. இதுதான் பதில். சுயநலமின்மை என்பதை விளக்கி மனித குலத்திற்கு உபதேசித்தவர்கள் அந்தக் கருத்தை எங்கிருந்து பெற்றனர்? இது இயல்புணர்ச்சியாக இருக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் இயல்புணர்ச்சி உள்ளவையான விலங்களுக்கு இது தெரியாது. இது தர்க்க அறிவுக்கு உட்பட்டதும் அல்ல. தர்க்க அறிவுக்கு இத்தகைய கருத்துக்களைப்பற்றி எதுவும் தெரியாது. பின்னர் இவை எங்கிருந்து வந்தன?
வரலாற்றைப் படிக்கும்போது உலகின் மத ஆச்சாரியர்கள் அனைவரும் பொதுவான ஓர் உண்மையை ஒப்புக் கொள்வதைக் காண்கிறோம். அவர்கள் எல்லோருமே உண்மைகளை எங்கோ அப்பாலிருந்து பெற்றதாகவே கூறுகின்றனர்; பலர் அவை எங்கிருந்து வருகின்றன என்பதை மட்டுமே அறியவில்லை. உதாரணமாக, சிறகுகளுடன் கூடிய ஒரு தேவதை மானிட உருவில் கீழே இறங்கி வந்து, ஓ மனிதா! கேள், இதுதான் செய்தி என்று சொன்னதாக ஒருவர் கூறுவார். மற்றொருவர் ஒளிபொருந்திய ஒரு தேவன் தன் முன் தோன்றியதாகக் கூறுவார். மூன்றாமவரோ, முன்னோர் ஒருவர் தன் கனவில் தோன்றிச் சில விவரங்களைக் கூறினார் என்பார். அதற்கு மேல் வேறொன்றும் தெரியாது. ஆனால் இந்த அறிவு அப்பாலிருந்தே வந்தது, தங்கள் ஆராய்ச்சி அறிவினால் வந்ததல்ல என்பதை மட்டும் எல்லோரும் கூறுகின்ஞூறனர். யோக விஞ்ஞானம் என்ன கூறுகிறது? இந்த அறிவு தர்க்க அறிவு மூலம் அல்ல, அதற்கு அப்பாலிருந்து வருகிறது என்று ஆச்சாரியர்கள் கூறியது சரி; ஆனால் வந்தது எங்கிருந்தோ அல்ல, உள்ளிருந்தே வந்தது என்கிறது யோக சாஸ்திரம்.
மனத்திற்கே ஓர் உயர்ந்த நிலை உண்டு; அது பகுத்தறிவைக் கடந்த உணர்வுகடந்த நிலை. மனம் அந்த உயர்ந்த நிலையை அடையும்போது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட இந்த அறிவு, மனிதனை வந்தடைகிறது என்கிறான் யோகி. தத்துவ அறிவும் அனைத்தையும் கடந்த அறிவும் அவனை வந்தடையும். இவ்வாறு பகுத்தறிவைக் கடந்துசக செல்கின்ற, சாதாரண மனித இயற்கையைக் கடந்து செல்கின்ற நிலை, சிலவேளைகளில் அதன் அடிப்படை உண்மையை அறியாதவனுக்கும் எதிர்பாராத விதமாகக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தடுக்கி விழுவதுபோல், திடீரென்று அந்த நிலை அவனுக்கு வாய்க்கிறது. அப்படி எதிர்பாராமல் கிடைக்கின்ற அந்த அறிவை அவன் எங்கேயோ வெளியிலிருந்து வந்தது என்றுதான் சாதாரணமாகக் கூறுகிறான். அக விழிப்புணர்வு அல்து அனைத்தையும் கடந்த அறிவு எல்லா நாடுகளிலும் ஒன்றாகவே இருந்தாலும் ஒருநாட்டில் அது தேவதைகள் மூலமாக வந்ததாகவும், மற்றொரு நாட்டில் ஒரு தேவனிடமிருந்து வந்ததாகவும், மூன்றாவது நாட்டில் அது கடவுளிடமிருந்து வந்ததாகவும் கருதப்படுவது ஏன் என்பதையே இது விளக்குகிறது. இதன் பொருள் என்ன? மனம் இந்த அறிவைத் தன் இயற்கையிலிருந்தே கொண்டு வந்தது. ஆனால் யார் மூலமாக அது வெளிவந்ததோ அவர் தன்னுடைய நம்பிக்கை, கல்வி இவற்றிற்கு ஏற்ப அதற்கு விளக்கம் கொடுத்தார். உண்மை என்னவென்றால் இவர்கள் எல்லோருமே அந்த உணர்வுகடந்த நிலையின்மீது தடுக்கி விழுந்தனர். அதாவது எதிர்பாராமல் அடைந்தனர் என்பதுதான்.
இவ்வாறு எதிர்பாராத விதமாக இந்த நிலையை அடைவதில் பேராபத்து உள்ளது என்கிறான். யோகி பலரது விஷயத்தில், மூளை கலங்கிவிடக்கூடிய அபாயம் கூட உள்ளது. இந்த உணர்வுடகடந்த நிலையில், அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலே தடுக்கி விழுந்தவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சரி, இருட்டில் தடுமாறியவர்களாக, பொதுவாகத் தங்கள் அறிவுடன் சில மூடநம்பிக்கைகளையும் சேர்த்தே வெளிப்படுத்தியிருப்பதைத் தவறாமல் காண முடிகிறது. அவர்கள் மனமயக்கக் காட்சிகளுக்கு இடமளித்தனர். தாம் ஒரு குகையில் இருந்தபோது தேவதூதனான கப்ரியேல் ஒருநாள் வந்து, தம்மை ஹாரக் என்ற ஒரு தேவலோகக் குதிரைமீது ஏற்றி தேவலோகங்களுக்கு அழைத்துச் சென்றதாக முகமது நபி கூறினார். ஆனால் இவை எல்லாவற்றுடனும் அவர் சில பேருண்மைகளையும் கூறியுள்ளார். நீங்கள் குரானைப் படித்தால், பேருண்மைகள் மூட நம்பிக்கைகளுடன் கலந்திருப்பதைக் காணலாம். இதை எவ்வாறு விளக்குவது? அவர் அக விழிப்புணர்வு பெற்றவர்தான், அதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் அந்த விழிப்புணர்வின்மீது தடுக்கி விழுந்தவர். அவர் பயிற்சி பெற்ற யோகி அல்ல. தான் என்ன செய்கிறோம் என்பதன் பொருள் அவருக்குத் தெரியவில்லை. முகமது நபி உலகுக்குசக செய்த நன்மையையும், அதே சமயத்தில் அவரது மதவெறியால் ஏற்பட்ட பெரும் தீமையையும் நினைத்துப் பாருங்கள். அவருடைய தவறான உபதேசங்களின் காரணமாக எத்தனை லட்சக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்! அன்னையர் குழந்தைகளை இழந்தனர், குழந்தைகள் அனாதைகளாயின, தேசங்கள் அழிக்கப்பட்னை. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்!
முகமது நபி போன்ற மகான்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது இத்தகைய அபாயங்களைக் காண்கிறோம். அதேவேளையில் அவர்கள் எல்லாருமே அக விழிப்புணர்வு பெற்றவர்களாக இருந்ததையும் காண்கிறோம். ஒரு மகான் உணர்ச்சிவசப்படுகின்ற தன் இயல்பை உயர்நிலைக்குக் கொண்டு செல்வதன் மூலம் உணர்வுகடந்த நிலையை அடைந்திருந்தாரானால், அவர் அந்த நிலையிலிருந்து சில உண்மைகøளை மட்டும் கொண்டு வருவதில்லை, அவற்றுடன் கொள்கைவெறியைக் கொண்டு வருகிறார்; அவருடைய உபதேசங்கள் உலகிற்கு எவ்வளவு நன்மை செய்ததோ அந்த அளவிற்குப் பெரும் தீங்கையும் விளைவிக்கின்ற மூட நம்பிக்கையையும் கொண்டு வருகிறார்.
மனித வாழ்வு என்று நாம் அழைக்கின்ற இந்தப் பொருந்தாதவற்றின் கூட்டத்தில் பகுத்தறிவு என்று ஏதாவது வேண்டுமானால் நமது தர்க்க அறிவைக் கடந்தேயாக வேண்டும்; ஆனால் அதை விஞ்ஞானபூர்வமாகச் செய்ய வேண்டும்; மெதுவாக, ஒழுங்கான பயிற்சியின் மூலம் செய்ய வேண்டும் மூட நம்பிக்கைகளையெல்லாம் விட்டொழிக்க வேண்டும். மற்ற விஞ்ஞானத்தைப் போலவே இந்த உணர்வுகடந்த நிலையைப் பற்றிய படிப்பையும் அணுக வேண்டும். பகுத்தறிவின்மீது நமது அடிப்படை அமைய வேண்டும். எவ்வளவு தூரம் முடியுமோ அதுவரை அறிவின் துணையுடன் போக வேண்டும். மேற்கொண்டு செல்ல முடியாத நிலை வரும்போது அந்த அறிவே உயர்ந்த நிலைக்கு வழிக் காட்டும். நான் அக விழிப்புணர்வு பெற்றவன் என்று கூறிக்கொண்டு, அதே வேளையில் அறிவுக்குப் பொருந்தாத வண்ணம் ஒருவன் பேசுவானானால் அதைப் புறக்கணித்து விடு. ஏன்? ஏனெனில் இயல்புணர்ச்சி, பகுத்தறிவு, உணர்வுகடந்த நிலை, அல்லது உணர்வுறுநிலை, உணர்வுநிலை, உணர்வுகடந்தநிலை- இந்த மூன்று வகை மனங்கள் உள்ளன. என்பதல்ல; மனத்தின் ஒருநிலை மற்றொரு நிலையைப் பரிணமிக்கிறது. இயல்புணர்ச்சி பகுத்தறிவாகிறது, பகுத்தறிவு அனைத்தையும் கடந்த உணர்வாகப் பரிணமிக்கிறது. எனவே இவற்றுள் எந்த நிலையும் மற்ற நிலையுடன் முரண்பாடாக இருக்க முடியாது. உண்மையான அக விழிப்புணர்வு பகுத்தறிவுக்கு விரோதமாக இருக்க முடியாது, மாறாக அதன் நிறைவாகவே அமைகிறது. நான் எதையும் அழிக்க வரவில்லை. நிறைவு செய்யவே வந்துள்ளேன் என்று மாபெரும் தீர்க்கதரிசிகள் கூறுவது போல், அக விழிப்புணர்வு எப்போதும் பகுத்தறிவை நிறைவு செய்கிறது, அதனுடன் இயைந்திருக்கிறது. யோகத்திலுள்ள பல படிகளின் நோக்கம் நம்மை உணர்வுகடந்த நிலைக்கு அதாவது சமாதி நிலைக்கு விஞ்ஞான பூர்வமாக இட்டுச் செல்வதே. மேலும் அக விழிப்புணர்வு என்பது மகான்களிடம் இருந்தது. போலவே ஒவ்வொருவரின் இயற்கையிலும் அமைந்துள்ளது என்பது நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை. இந்த மகான்கள் ஏதோ தனிவகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதில்லை. அவர்களும் உங்களையும் என்னையும் போன்ற மனிதர்களே. அவர்கள் சிறந்த யோகிகளாக இருந்தனர். அவர்கள் சமாதிநிலையை அடைந்தது போல் நீங்களும் நானும் அடைய முடியும் அவர்கள் தனி வகுப்பினர் அல்ல. ஒருவன் அந்த நிலையை அடைந்துள்ளான் என்ற உண்மையே மற்றவர்களும் அதனை அடைய முடியும் என்பதை நீருபிக்கிறது. அடைய முடியும் என்பது மட்டுமல்ல ஒவ்வொருவரும் கடைசியாக அந்த நிலையை அடைந்தே தீர வேண்டும். அதுதான் மதம். அனுபவம் மட்டுமே நமக்குள்ளே ஒரே ஆசிரியர்.
நாம் வாழ்நாள் முழுவதும் பேசி வாதம் செய்யலாம். ஆனால் நாமே அனுபவிக்காதவரை உண்மையைப் பற்றிய எந்த அறிவும் நமக்கு விளங்காது. வெறுமானே சில புத்தகங்களைக் கொடுப்பதால் மட்டும் ஒருவனை டாக்டராக்க முடியாது. ஒரு தேசத்தைக் காண வேண்டும் என்ற எனது ஆவலை, தேசப்படத்தைக் காட்டி நீங்கள் தணிக்க முடியாது. எனக்கு உண்மையான அனுபவம் வேண்டும். இன்னும் மேலான நிறைவான அறிவு வேண்டும் என்ற ஆவலையே தேசப்படம் தூண்ட முடியும். அதற்குமேல் அதனால் எந்தப் பயனும் இல்லை. புத்தகங்களை மட்டும் நம்பியிருப்பது மனித மனத்தைத் தாழ்த்திவிடுகிறது. இறைவனைப் பற்றிய அறிவு அனைத்துமே இந்தப் புத்தகத்திலோ அந்தப் புத்தகத்திலோ அடங்கியுள்ளது. என்று கூறுவதைவிட தெய்வநிந்தனை வேறு ஏதாவது இருக்க முடியுமா? இறைவனை எல்லையற்றவன் என்று கூறிக்கொண்டு அதே சமயம் அவனைச் சிறு நூலின் அட்டைகளுக்கிடையில் அடைத்து வைக்கத் துணிந்த மனிதனின் அறிவீனத்தை என்னவென்று சொல்வது? நூல்கள் கூறியதில் நம்பிக்கை வைக்காததன் காரணமாக, இறையறிவு முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட நூலில் உள்ளது என்பதை நம்பாததன் காரணமாக எத்தனை லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்! இன்று இந்தக் கொலையும் கொடூரங்களும் ஓய்ந்துவிட்டன, உண்மைதான். ஆனால் உலகம் இன்னும் புத்தகங்களில்தான் பயங்கரமாகக் கட்டுண்டு கிடக்கிறது.
விஞ்ஞானபூர்வமாக சமாதி நிலையை அடைவதற்கு நான் கற்பித்து வருகின்ற நாஜயோகத்தின் பல படிகளைக் கடந்து செல்வது அவசியம். பிரத்யாஹாரம், தாரணை என்ற படிகளை அடுத்தது தியானம். வெளியிலோ உள்ளேயோ மனத்தை ஓரிடத்தில் நிலைநிறுத்திப் பயிற்சி அளித்துவிட்டால், இடையீடற்றுப் பாயும் நீரோட்டம் போல் அது அந்த இடத்தை நோக்கித் தொடர்ந்து செல்லும் ஆற்றல் பெறுகிறது. இந்த நிலைதான் தியானம். தியானிக்கப்படும் பொருளின் புறப்பொருளை விட்டு அகப்பொருளாகிய கருத்தை மட்டும் தியானிக்கத் தக்க வண்ணம் தியான சக்தியைத் தீவிரமாக்கினால் அந்த நிலைதான் சமாதி. தாரதண, தியானம், சமாதி- இந்த மூன்றும் சேர்ந்தால் சம்யமம். அதாவது முதலில் மனம் ஒருபொருளின்மீது குவிய வேண்டும், பிறகு குவிந்த அந்த நிலையிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும். அதை அடுத்து, இவ்வாறு தொடர்ந்த ஒருமைபப்பாட்டின் காரணமாக, அந்தப் பொருளின் உள்ளே ஊடுரவ, அது காரியமாக இருப்பதற்குள்ள காரணத்தில் மட்டும் நிலைத்து நிற்க வேண்டும். அப்போது, அத்தகைய மனத்திற்கு எல்லாம் வசமாகிறது
இத்தகைய தியான நிலைதான் வாழ்வில் மிகவுயர்ந்த நிலை. ஆசை இருக்கும்வரை உண்மையான இன்பம் வர முடியாது. தியான நிலையில் இருப்பவர்களே, சாட்சி நிலையில் இருந்து பொருட்களின் உண்மையை உணர்பவர்களே உண்மையான ஆனந்தத்தையும் இன்பத்தையும் பெறுகின்றனர். விலங்குகளுக்குப் புலன்களில் இன்பம். மனிதனுக்கு அறிவில் இன்பம். தேவர்களுக்கு ஆன்மீக தியானத்தில் இன்பம். இந்தத் தியான நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் உண்மையிலேயே அழகாக இருக்கும். எதையும் விரும்பாமல் எதனுடனும் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும் ஒருவனுக்கு இயற்கையின் பல்வேறு மாற்றங்களும் அழகு மற்றும் நுண்மையின் ஓர் அற்புத வெளிப்பாடாகவே இருக்கும்.
இவையெல்லாம் தியானத்தில் அறியப்பட வேண்டியவை. நாம் ஓர் ஒலியைக் கேட்கிறோம். முதலில் புற அதிர்வு உண்டாகிறது. இரண்டாவதாக மனத்திற்கு அதை எடுத்துச் செல்கின்ற நரம்பியக்கம். மூன்றாவதாக மனத்தின் எதிர்ச்செயல்; அதனுடன் கூடவே அந்தப் பொருளைப் பற்றிய அறிவும் பளிச்சிடுகிறது. அதிர்வுகளில் தொடங்கி மனத்தின் எதிர்ச்செயல் வரையிலான பல்வேறு மாறுதல்களின் புறக்காரணமே அந்தப் பொருளைப் பற்றிய அறிவாகும். இந்த மூன்றும் யோக நெறியில் சப்தம்(ஒலி), அர்த்தம்(கருத்து) ஞானம்(அறிவு) என்று கூறப்படுகிறது. இயற்பியலிலும் உடலியலிலும் இந்த மூன்றும் ஆகாச அதிர்வு, நரம்பியக்கம், மனத்தின் எதிர்ச்யெல் என்று அழைக்கப்படுகின்றன. இவை தனித்தனியாக நடைபெற்றாலும், பிரித்தறிய முடியாதபடிபிணைந்துள்ளன. உண்மையில் இப்போது நாம் இவற்றைத் தனித்தனியாக அறிவதில்லை. அவற்றின் ஒன்றுசேர்ந்த விளைவைத்தான் வெளிப்பொருளாக உணர்கிறோம். ஒவ்வொன்றை உணர்வதிலும் இந்த மூன்றும் கலந்தே உள்ளது. ஆனால் இவற்றைப் பிரித்தறிய முடியாது என்று சொல்வதற்குக் காரணம் இல்லை.
முந்தைய பயிற்சிகளின் மூலம் மனம் வலிமையுடையதாகவும் வசப்பட்டதாகவும் ஆகி நுண்ணியவற்றைக் காணும் ஆற்றல் பெற்ற பின்னர் அதனை தியானத்தில் செலுத்த வேண்டும். தியானத்தை முதலில் சாதாரண தூலப் பொருட்களில் ஆரம்பித்து, மெள்ளமெள்ள நுண்ணிய பொருட்களைத் தியானிக்க வேண்டும். இறுதியில் பொருளில்லாமல் தியானம் பழக வேண்டும். உணர்ச்சிகளின் புறக் காரணங்களை உணர்வதில் முதலில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும், பின்னர் அக இயக்கங்களில், அதன் பின்னர் அதன் எதிர்ச் செயலில் செலுத்த வேண்டும். உணர்ச்சிகளின் புறக் காரணங்களை வேறுபடுத்தி அறிவதில் மனம் வெற்றி பெறுமானால் மிக நுண்ணிய ஜடப் பொருட்களையும், எல்லா நுண்ணுடல்களையும், உருவங்களையும் காணும் ஆற்றல் பெறுகிறது. இவ்வாறு அக இயக்கங்களைப் பிரித்தறிய முடியும்போது, தன்னிடமும் பிறரிடமும் தோன்றுகின்ற எல்லா எண்ண அலைகளையும் அவை பவுதீக சக்தியாக மாறும் முன்பே கட்டுப்படுத்தும் ஆற்றலை மனம் பெறுகிறது. இனி, மனத்தின் எதிர்ச் செயலைத் தனியாக உணரும் தன்மை பெறும் போது யோகிக்கு எல்லா அறிவும் கிடைக்கும். ஏனெனில் உணர முடிந்த ஒவ்வொரு பொருளும் ஒவ்வோர் எண்ணமும் மனத்தின் எதிர்ச் செயலில் விளைவே அல்லவா? இந்த நிலையில் அவன் தனது மனத்தின் அடித்தளத்தையே காண்கிறான். அது முற்றிலுமாக அவனது கட்டுப்பாட்டில் இருக்கும். யோகிக்குப் பல சித்திகள் வந்து சேர்கிறது. இவற்றுள் ஏதேனும் ஒன்றின் கவர்ச்சிக்கு ஆட்பட்டாலும் போதும், அவனுடைய முன்னேற்றம் தடைப்பட்டுவிடும். சுகபோகங்களின் பின்னால் ஓடுவது அவ்வளவு ஆபத்தானது. ஆனால் இந்த அற்புத சித்திகளைப் புறக்கணிக்கும் வல்லமை அவனிடம் இருக்குமானால் அவன் யோகத்தின் குறிக்கோளை அடைவான். மனக் கடலின் அலைகளை அடியோடு நிறுத்திவிடுவான். அப்போது ஆன்மாவின் பெருமை, மனத்தின் அலைவுகளாலோ உடலின் காசிக்கும். அப்போது யோகி தன்னை உணர்கிறான்; தான் எப்போதுமே அறிவின் சாரமாகவும் மரமற்றவனாகவும் எங்கும் நிறைந்தவனாகவும் இருப்பதை அறிகிறான்.
சமாதி நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் உரியது, இல்லையில்லை, ஒவ்வொரு பிராணிக்கும் உரியது. மிகக் கீழான பிராணியிலிருந்து மிகவுயர்ந்த தேவதூதன்வரை அனைவரும் என்றாவது ஒருநாள் இந்த நிலைக்கு வந்தேயாக வேண்டும். அதன்பிறகு அதன்பிறகு மட்டுமே உண்மையான மதம் என்பது அவனுக்குத் தோன்றும். அதுவரை நாம் எல்லோரும் அந்த நிலையை அடையப் பாடுபடுகிறோம். அவ்வளவுதான். மத வாசனையே இல்லாதவனுக்கும் நமக்கும் இப்போது எவ்வித வேறுபாடும் இல்லை. ஏனெனில் நமக்கும் அனுபூதியில்லை. அனுபூதியைத் தராவிட்டால் ஒருமைப்பாட்டினால் என்ன பயன்? சமாதி நிலையை அடைவதற்கான ஒவ்வொரு படியும் ஆராய்ந்து, முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டு, விஞ்ஞானப்பூர்வமானதாக அமைக்கப்பட்டுள்ளது. நாம் நம்பிக்கையோடு பயிற்சி செய்தால் அவை கண்டிப்பாக நம்மை லட்சியத்திற்கு இட்டுச் செல்லும் அதன்பின் எல்லா துன்பங்களும் நீங்குகின்றன. எல்லா கவலைகளும் பறந்து விடுகின்றன. கர்மத்திற்கான விதைகள் எரிந்து விடுகின்றன. ஆன்மா, தளைகளிலிருந்து நீங்கி என்றென்றைக்குமாக முக்தி பெறுகிறது.
8. ராஜயோகச் சுருக்கம்
இங்கே காணப்படும் ராஜயோகச் சுருக்கம் கூர்ம புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது. யோகமாகிய நெருப்பு மனிதனைச் சூழ்ந்துள்ள பாவக்கூட்டை எரித்துவிடுகிறது. அப்போது அறிவு தூய்மை பெறுகிறது. நிர்வாணம் நேரடியாக வாய்க்கிறது. யோகத்திலிருந்து ஞானம் வருகிறது. ஞானம் யோகிக்கு உதவுகிறது. யார் யோகத்தையும் ஞானத்தையும் இணைத்து கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு இறைவன் அருள்புரிகிறார். மஹாயோகத்தைத் தினமும் ஒருமுறை அல்லது இரண்டுமுறை அல்லது மூன்றுமுறை அல்லது எப்போதும் கடைப்பிடிப்பவர்கள் தேவர்களே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
யோகத்தில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று அபாவம், மற்றது மஹாயோகம். தனது ஆன்மாவைச் சூன்யமாக, குணமற்றதாக தியானிப்பது அபாவம். ஆன்மாவைப் பேரானந்தம் நிறைந்ததாக, நிர்மலமானதாக, இறைவனுடன் ஒன்றுபட்டு இருப்பதாகக் காண்பது மஹாயோகம். இந்த இரண்டின் மூலமாகவும் யோகி தன் ஆன்மாவை உணர்கிறான். மஹாயோகத்தில் யோகி தன்னையும் பிர பஞ்சம் முழுவதையும் இறைவனாகக் காண்கிறான். இது யோகங்கள் அனைத்திலும் உயர்ந்தது. மேலான இதனுடன் ஒப்பிடும்போது, நாம் படித்தும் கேட்டும் உள்ள பிற யோகங்கள், யோகம் என்று கூறத் தகுதியற்றவை.
யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்பவை ராஜயோகத்தின் அங்கங்கள். அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், அபரிக்கிரகம், பிரம்மச்சரியம், ஆகியவை யமம். இவை மனத்தை அதாவது சித்தத்தைத் தூய்மையாக்கும். மனத்தாலோ வாக்காலோ உடலாலோ எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருப்பது அஹிம்சை. அஹிம்சையை விட மேலான தர்மம் ஒன்றில்லை. சத்தியத்தால் நாம் கர்ம பலன்களை அடைகிறோம். படைப்பிலுள்ள எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமலிருப்பதால் ஒருவனுக்குக் கிடைக்கின்ற ஆனந்தத்தைவிடமேலான ஆனந்தம் எதுவுமில்லை. சத்தியத்தால் அனைத்தையும் அடையலாம். சத்தியத்திலேயே அனைத்தும் நிலைபெற்றிருக்கின்றன. உள்ளதை உள்ளபடி கூறுதல்-இதுதான் சத்தியம். திருட்டுத் தனமாகவோ, வலிமையைப் பயன்படுத்தியோ பிறர் பொருளைக் கவராது இருத்தல் அஸ்தேயம். மனம், வாக்கு மற்றும் உடலால் எப்போதும் எல்லா நிலைகளிலும் தூயவனாக இருப்பது பிரம்மச்சரியம், எவ்வளவுதான் பயங்கரமாகத் துன்புற்றாலும்,பிறர் பொருளைத் தானமாக பெறாமலிருப்பது அபரிக்கிரகம். பிறரிடமிருந்து தானமாக ஒன்றைப் பெறுகின்ற ஒருவனின் உள்ளம் அசுத்தம் அடைகிறது. அவன் தாழ்ந்த நிலையை அடைகிறான். சுதந்திரத்தை இழக்கிறான். கட்டுண்டவனாகிறான், பற்றுக் கொண்டவனாகிறான்.
அடுத்து வருவது நியமம். அன்றாட ஆசாரங்களும் நியதிகளும் அடங்கியது இது. யோகத்தில் வெற்றி பெற இது உதவுகிறது. தபஸ்-தவம்; ஸ்வாத்யாயம்-கல்வி; ஸந்தோஷம்-திருப்தி; சவுசம்-தூய்மை; ஈசுவர ப்ரணி தானம்-இறைவழிபாடு-இவை நியமம். உண்ணாநோன்பின் மூலமோ வேறு வழிகளாலோ உடலை அடக்கியாள்தல் உடல் சம்பந்தமான தவம். வேதங்களையும் மற்ற மந்திரங்களையும் ஓதுவது ஸ்வாத்யாயம். இதனால் உடலில் உள்ள சத்வப் பகுதி தூய்மை அடைகிறது. மந்திரங்களை உச்சரிப்பது மூன்று வகைப்படும். வாசிகம், உபாம்சு, மானசம், வாசிகம் மிகத் தாழ்ந்தது. மானசம் மிகவுயர்ந்தது. உரக்க உச்சரித்தல் வாசிகம். உதடு அசைந்து ஒலி வராமல் உச்சரிப்பது உபாம்சு. வெளியில் கேட்காமல் மந்திரத்தை உச்சரித்து. அதனுடன் மந்திரத்தின் பொருளையும் சிந்திப்பது மானசம். இதுவே மூன்றிலும் உயர்ந்த முறை.
தூய்மை என்பது அகத் தூய்மை புறத் தூய்மை என இருவகைப்படுவதாக மகான்கள் கூறுகின்றனர். உடலை நீராலோ மண்ணாலோ வேறு பொருட்களாலோ தூய்மை செய்வது அதாவது குளித்தல் போன்றவை புறத்தூய்மை. வாய்மையாலும் மற்ற எல்லா நற்குணங்களாலும் மனத்தைத் தூய்மைப்படுத்துவது அகத்தூய்மை. இரண்டுமே தேவை. அகத்தில் தூய்மை, புறத்தில் அழுக்கு என்றால் அது சரியாகாது. இரண்டும் சேர்ந்து வாய்க்க முடியாதபோது அகத் தூய்மையை நாடுவது நல்லது. ஆனால் இருவகைத் தூய்மையும் இல்லாமல் ஒருவன் யோகியாக மாட்டான். தோத்திரம், சிந்தனை, பக்தி-இவைமூலம் இறைவனை வழிபட வேண்டும். யமம், நியமம்பற்றிக் கூறினோம். அடுத்தது ஆசனம். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் மார்பும் தோள்களும் தலையும் நேராக இருக்க வேண்டும். உடம்பு இறுக்கமின்றித் தளர்வாக இருக்க வேண்டும் என்பதுதான். அடுத்தது பிராணாயாமம், பிராணன் என்பது உடம்பில் உள்ள உயிர்ச்சக்திகள், ஆயாமம் என்றால் அடக்குதல், இதில் மூவகை உண்டு. சாதாரணமானது, நடுத்தரமானது, உயர்ந்தது, பிராணாயாமத்தில் மூன்று பகுதிகள் உண்டு. உள்ளிழுத்தல்(பூரகம்), அடக்கல்(கும்பகம்), வெளிவிடல் (ரேசகம்) பன்னிரண்டு நொடியுடன் ஆரம்பிப்பது சாதாரண வகை. இருபத்தி நான்கு நொடியுடன் ஆரம்பிப்பது நடுத்தரமானது. முப்பத்தாறு நொடியுடன் ஆரம்பிப்பது உயர்ந்த வகையானது. சாதாரண பிராணாயாமத்தில் உடல் வியர்க்கும். நடுத்தரமானதில் உடல் நடுங்கும். உயர்ந்த பிராணாயாமத்தில் உடல் ஆந்தரத்தில் மிதக்கும், பேரானந்தம் பிறக்கும்.
வேதங்களில் காயத்ரீ என்ற மந்திரம் உள்ளது. அது மிகப் புனிதமான மந்திரம். இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த பரம்பொருளின் மகிமையை நாம் தியானிப்போம். அவர் நமது மனங்களை ஒளி பெறச் செய்யட்டும். ஓங்காரத்தை இந்த மந்திரத்தின் முதலிலும் முடிவிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பிராணாயாமத்தில் மூன்று முறை காயத்ரியை உச்சரியுங்கள். பூரகம், கும்பகம், ரேசகம் என பிராணாயாமம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக எல்லா நூல்களும் கூறுகின்றன. புலன்களின் கருவிகளான இந்திரியங்கள் புறப்பொருட்களுடன் தொடர்புகொண்டு புற நாட்டம் கொள்கின்றன. அவற்றைச் சுயேச்சையால் கடடுப்படுத்துவது அல்லது அவற்றைத் தன்னை நோக்கிக் குவிப்பது பிரத்யாஹாரம்.
மனத்தை இதயக் கமலத்தில் அல்லது சஹஸ்ராரத்தில் நிறுத்தி வைப்பது தாரணை. மனம் ஓரிடத்தில் நிலைப்படும்போது அந்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட விதமான மன அலைகள் எழுகின்றன. இவை மற்ற மன அலைகளால் மூழ்கடிக்கப்படாமல் படிப்படியாக முன்னணிக்கு வருகின்றன. அப்போது மற்றவை பின்வாங்கி இறுதியில் மறைந்துவிடுகின்றன. பின்னர் இந்தப் பல்வேறு அலைகளும் ஒன்றாகி ஓர் அலை மட்டும் மனத்தில் எஞ்சும், இதுவே தியானம்.
அடிப்படை எதுவும் இல்லாமல், மனம் முழுவதும் ஒரே அலையாக, ஒரே வடிவமாக ஆவது சமாதி, சமாதியில் இடங்கள், மையங்கள் இவற்றின் எந்த உதவியும் இன்றி இடங்கள் மையங்கள் இவற்றின் எந்த உதவியும் இன்றி எண்ணத்தின் கருத்து மட்டுமே இருக்கும்.
மனத்தை ஒரு மையத்தில் பன்னிரண்டு நொடிகள் நிறுத்தினால் அது தாரணை, பன்னிரண்டு தாரணைகள் ஒரு தியானம். பன்னிரண்டு தியானங்கள் ஒரு சமாதி.
எங்கு நெருப்பு உள்ளதோ, எங்கு நீர் உள்ளதோ, எங்கு சருகுகள் சிதறிக் கிடக்கின்றனவோ, எங்கு எறும்புப் புற்றுகள் அதிகம் உள்ளனவோ, எங்கு காட்டு மிருகங்கள் உள்ளனவோ, எங்கு அபாயம் உள்ளதோ எங்கு நாற் சந்திகள் கூடுகின்றனவோ, எங்கு ஓசை மிகுந்து உள்ளதோ, எங்கு தீயவர்கள் பலர் உள்ளனரோ, அங்கு யோகம்பயிலக் கூடாது. இது குறிப்பாக இந்தியாவிற்குத்தான் பொருந்தும். உடல் மிகவும் சோம்பலாகவோ நோயுற்றோ மனம் துன்புற்றோ கவலையுற்றோ இருந்தாலும் யோகம் பழகக் கூடாது. மறைவானதும், மக்கள் வந்து உங்களைத் தொந்தரவு செய்யாததுமான இடத்திற்குச் செல்லுங்கள். அழுக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்காதீர்கள். மாறாக அழகிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடத்தையோ, உங்கள் வீட்டில் ஓர் அழகிய அறையையோ தேர்ந்தெடுங்கள். பயிற்சி செய்யும்போது முதலில் பண்டைய யோகிகள் எல்லோரையும் உங்கள் குருவையும் கடவுளையும் வணங்கிவிட்டு, அதன்பிறகு பயிற்சியைத் தொடங்குங்கள்.
இனி, தியானத்தைப்பற்றிக் கூறப்படுகிறது. தியானிப்பதற்குச் சில உதாரணங்களும் தரப்படுகின்றன. நிமிர்ந்து அமருங்கள், மூக்கின் நுனியைப் பாருங்கள். மனத்தை ஒருமுகப்படுத்த இது எவ்விதம் உதவுகிறது. காட்சி நரம்புகள் இரண்டையும் அடக்குவதால் மனத்தின் எதிர்ச் செயல்பகுதி பெருமளவிற்குக் கட்டுப்பட்டு அதன் மூலம் எவ்வாறு கயேச்சையும் கட்டுப்பாட்டில் வருகிறது என்பதையெல்லாம் போகப்போக அறிந்துகொள்ளலாம்.
தியானத்திற்கு உரிய சில வழிகள் இதோ-தலைக்கு மேல் பல அங்குல உயரத்தில் ஒரு தாமரை இருப்பதாக நினையுங்கள். தர்மம் அதன் மையம். ஞானம் அதன் தண்டு. தாமரையின் எட்டு இதழ்களும் யோகியின் அஷ்டமாசித்திகள். தாமரையின் எட்டு இதழ்களும் எட்டு சித்திகள். அதேவேளையில் உள்ளே உள்ள மகரந்த கேசரங்களும் சூல்பைகளும் தியாகம். புறத்திலிருந்து வருகின்ற சித்திகளைத் தியாகம் செய்தால் யோகி முக்தி அடைவான். தாமரையின் எட்டு இதழ்களும் எட்டு சித்திகள். அதேவேளையில் உள்ளே உள்ள மகரந்த கேசரங்களும் சூல்பைகளும் உயர்நிலை தியாகம். அதாவது இந்தச் சித்திகளைத் துறத்தல்,. தாமரையின் நடுவில் பொன்னொளி வீசுபவராக, சர்வ வல்லமை உள்ளவராக, அணுக அரியவராக, ஓங்காரம் என்னும் பெயரை உடையவராக, விளக்க முடியாதவராக, பேரொளியால் சூழப்பட்டவராக இறைவனை தியானம் செய்யுங்கள்.
மற்றொரு தியானமும் கூறப்படுகிறது. உங்கள் இதயத்தில் ஒரு வெளி இருப்பதாக நினையுங்கள். அதில் சுடர் ஒன்று ஒளிவிடுகிறது. அது உங்கள் ஆன்மா. அதனுள், உங்கள் ஆன்மாவிற்கு ஆன்மாவாகிய கடவுள் ஒரு பேரொளியாக இருப்பதாக எண்ணுங்கள். அதனை உங்கள் இதயத்தில் தியானம் செய்யுங்கள்.
பிரம்மச்சரியம், அஹிம்சை, மிகக் கொடிய எதிரியடமும் இரக்கம், உண்மை, இறை நம்பிக்கை இவை எல்லாம் வெவ்வேறான விருத்திகள், நீங்கள் இவற்றில் நிறைநிலை அடையவில்லையென்று அஞ்ச வேண்டாம். முயற்சி செய்யுங்கள் அனைத்தும் கைகூடும். எல்லா பற்றும், எல்லா பயமும், எல்லா கோபமும் விட்டவன், தன்னை முழுவதுமாக இறைவனுக்கே அர்ப்பணம் செய்து அவரிடமே சரண்புகுந்தவன். மனம் தூய்மையடையப் பெற்றவன். இவர்கள் எந்த ஆசையுடன் இறைவனை அணுகினாலுள் அதை அவர்களுக்கு அருள்கிறார் அவர். எனவே ஞானம், பக்தி அல்லது தியாகம் இவற்றால் அவரை வழிபடுங்கள்.
யாரையும் வெறுக்காதவன், அனைவரிடமும் நட்பு பூண்டவன். எல்லாவற்றிடமும் கருணை உடையவன். அகங்காரம் விட்டவன். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய்க் கருதுபவன். பொறுமையுடையவன். எப்போதும் திருப்தியுற்றவன். எப்போதும் யோகத்தில் நிலை பெற்றவனாய் செயல்புரிபவன், தன்னைக் கட்டுப்படுத்தியவன், திட சங்கல்பம் உடையவன். மனத்தையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்தவன். இத்தகையவனே எனது பக்தன்.
யார் பிறரைத் துன்புறுத்துவதில்லையோ, யாரைப் பிறரால் துன்புறுத்த முடியாதோ, யார் மகிழ்ச்சி, கோபம், பயம், மனக்கிளர்ச்சி இவற்றிலிருந்து விடுபட்டவனோ இத்தகையவனே எனக்குப் பிரியமானவன்.
எதையும் சார்ந்திருக்காதவன், தூயவன், சுறுசுறுப்பு உடையவன், துன்பமோ இன்பமோ எது வந்தாலும் பொருட்படுத்தாதவன். ஒருபோதும் துயரப்படாதவன், தனக்கான எல்லா முயற்சிகளையும் விட்டவன். புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாகக் கொள்பவன். அமைதியாக இருப்பவன். ஆழ்ந்த சிந்தனையுடையவன். சிறிதே கிடைத்தாலும் அதில் திருப்தி கொள்பவன். உலகே தன் வீடாக இருப்பதால் தனக்கென்று வீடு இல்லாதவன். தனது கொள்கைகளில் உறுதி படைத்தவன். இத்தகையவனே எனது அன்பிற்குரிய பக்தன். இத்தகையோரே யோகிகள் ஆவார்கள்.
நாரதர் என்ற தேவ முனிவர் ஒருவர் இருந்தார். மனிதர்களிடையில் பெரிய யோகிகளான முனிவர்கள் இருப்பதுபோல், தேவர்களிலும் யோகிகள் உள்ளனர், நாரதர் மிகப் பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார். ஒருநாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவனைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தியானித்து தவம் செய்ததால், அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன. அவன் நாரதரை அழைத்து எங்கே போகிறீர்? என்று கேட்டான். நான் சொர்க்கத்திற்குச் செல்கிறேன் என்றார் நாரதர். அப்படியானால், ஆண்டவன் எனக்கு எப்போது அருள்புரிவார். எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் அவன். நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரைக் கண்டு நாரதரே! எங்கு செல்கிறீர்? என்று கேட்டான். அவனது குரலும் செயலும் சாந்தமாக இல்லை. நாரதர். நான் சொர்க்கத்திற்குப் போகிறேன் என்றார். அப்படியானால் எனக்கு எப்போது முக்தி கிடைக்கும் என்று கேட்டு வாருங்கள் என்றான் அவன். நாரதர் சென்றுவிட்டார்.
சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார். உடலைச் சுற்றிப் புற்றி வளர்ந்திருந்த மனிதன், நாரதரே! என்னைப்பற்றி பகவானிடம் கேட்டீரா? என்றான், ஆம் என்றார் நாரதர். பகவான் என்ன சொன்னார்? என்று கேட்டான் அவன். நீ இன்னும் நான்கு பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று பகவான் கூறினார் என்றார் நாரதர். அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி, என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன் இன்னும் நான்கு பிறவிகளா? என்றான்.
நாரதர் மற்ற மனிதனிடம் சென்றார். பகவானிடம் கேட்டீரா, நாரதரே? என்றான் அவன் ஆம் கேட்டேன். அந்தப் புளியமரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் பகவான். என்று நாரதர் கூறினார். அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே! என்று கூறனான். அப்போது ஒரு குரல்! மகனே! இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன் என்று கூறியது. அவனது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெகுமதி அது. அத்தனை பிறவிகளிலும் பாடுபட அவன் தயாராக இருந்தான். எதுவும் அவனைத் தளரச் செய்யவில்லை. ஆனால் முதல் மனிதனுக்கோ நான்கு பிறவிகள் கூட மிக நீண்ட காலமாகத் தோன்றியது. யுகயுகங்களாகவும் காத்திருக்கத் தயாராக இருந்த மனிதனிடம் இருந்தது போன்ற விடாமுயற்சி மட்டுமே பெரும் பேற்றை அளிக்கும்.
பதஞ்ஜலி யோக சூத்திரங்கள்
யோக சூத்திரங்களை விளக்குவதற்கு முன் ஒரு முக்கியமான விஷயத்தை விவாதிக்க விரும்புகிறேன். யோக நெறியின் கொள்கை முழுவதும் இதையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. நாம் இப்போது சார்பு நிலையில் உள்ளோம். ஆனால் இதற்கு முன்பு தனி நிலையில் இருந்தோம். இந்தத் தனி நிலையிலிருந்தே நாம் தோன்றியுள்ளோம். வெளிப்பட்டுள்ளோம். இப்போது மீண்டும் இந்தச் சார்பு நிலையிலிருந்து தனிநிலையை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருக்கிறோம். உலகின் மேதைகளும் பொதுவாக இதை ஒப்புக்கொள்வதாகத்தான் தோன்றுகிறது. தூல இயற்கை ஆராய்ச்சிகளும் இந்த உண்மையை ஏறக்குறைய தெளிவாக்கியுள்ளது. இதை ஒப்புக்கொண்டால் அந்தத் தனி நிலை சிறந்ததா, அல்லது இப்போதைய சார்பு நிலைதான் மிகவுயர்ந்தது என்று எண்ணுபவர்களுக்குக் குறைவில்லை. நாம் பிரிவுகளற்ற பரம்பொருளின் வெளிப்பாடுகள். பிரிவுகளுடன் கூடிய இந்த நிலையே தனி நிலையைவிட உயர்ந்தது என்று மிகச் சிறந்த சிந்தனையாளர்கள்கூடக் கருதுகிறார்கள். அந்தத் தனிநிலையில் எந்தப் பண்பும் இருக்க முடியாது; அந்த நிலை உயிரற்றதாக, உணர்ச்சியற்றதாக, மந்தமானதாகத்தான் இருக்க வேண்டும். இப்போதைய இந்த வாழ்வில்தான் நாம் சுகபோகங்களை அனுபவிக்க முடியும். எனவே அதைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள்.
முதலில் நாம் வாழ்க்கைப் பிரச்சினைக்கான மற்ற தீர்வுகளை ஆராய வேண்டியுள்ளது. பழைய தீர்வு என்ன வென்றால் மரணத்திற்குப் பின்னரும் மனிதன் அப்படியே வாழ்கிறான். அவனது தீய பக்கங்கள் ஒழிந்து நல்ல பக்கங்கள் மட்டும் என்றென்றும் நிலைநிற்கிறது என்பதுதான். தர்க்கரீதியாகச் சொல்வதானால் மனிதனின் லட்சியம் உலகமே. அதாவது இந்த உலக வாழ்வே சற்று உயர்ந்த நிலையில் அங்கும் நீட்டப்படுகிறது. தீமைகளற்ற அதைச் சொர்க்கம் என்ற பெயரால் அழைக்கிறார்கள். அவ்வளவுதான். இந்தக் கொள்கை முற்றிலும் தவறானது. சிறுபிள்ளைத்தனமானது என்பது தெளிவு. ஏனெனில் அப்படி ஒரு நிலை இருக்க முடியாது. தீமை கலவாத நன்மை இருக்க முடியாது. அதுபோல் நன்மை கலவாத தீமையும் இல்லை. தீமையே கலவாமல் நன்மையே நிறைந்துள்ள உலகில் வாழலாம் என்பது சம்ஸ்கிருத நியாயத் தத்துவவாதிகள் கூறுவதுபோல் ஆகாயக் கோட்டை தான்.
தற்காலத்தில் பல பிரிவினர் வேறொரு கொள்கையைக் கூறுகின்றனர். முன்னேறிக்கொண்டே இருப்பது, இலக்கை நோக்கிச் சென்றுகொண்டே இருப்பதுதான் மனிதனின் கதி. ஆனால் இலக்கை அடைவது என்பது மட்டும் கிடையாது. மிக நல்லதுபோல் தோன்றினாலும் இதுவும் தவறே. ஏனெனில் நேர்கோட்டு இயக்கம் என்ற ஒன்றே கிடையாது. ஒவ்வோர் இயக்கமும் வட்டத்தில்தான் நகர்கிறது. ஒரு கல்லை எடுத்து வானவெளியில் வீசுங்கள். அதற்குத் தடையொன்றும் இல்லாமலிருந்து, நீங்களும் போதிய காலம் வாழ்ந்திருந்தால் அந்தக் கல் சரியாக உங்கள் கைக்கே திரும்பி வந்துசேரும். நேர்கோடு எல்லையற்று நீட்டப்படும்போது வட்டமாகத்தான் அது நிறைவுறும். ஆகவே, முடிவின்றி முன்னேறிச் சென்று கொண்டிருப்பதுதான் மனிதனின் விதி என்ற கருத்து தவறானது.
நமது விஷயத்திற்குப் புறம்பாக இருந்தாலும் இங்கு ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். இந்தக் கருத்து, யாரையும் வெறுக்கக் கூடாது. அன்பு காட்ட வேண்டும் என்ற நீதிநெறிக் கோட்பாட்டை விளக்குவதாக உள்ளது எப்படியெனில் ஒரு டைனமோவிலிருந்து புறப்படுகின்ற மின்னோட்டம் கற்றை முடித்து முடிவில் டைனமோவை அடைகிறது என்கிறது நவீனக் கொள்கை. வெறுப்பும் அன்பும் அதுபோல்தான் புறப்பட்ட இடத்திற்கு அவை திரும்பி வந்தே தீர வேண்டும். எனவே யாரையும் வெறுக்காதீர்கள். ஏனெனில் உங்களிடமிருந்து புறப்பட்ட அந்த வெறுப்பு நாளடைவில் உங்களிடமே திரும்பி வரும். நீங்கள் அன்பு காட்டினால், அந்த அன்பும் சுற்றினை முடித்துவிட்டு உங்களிடம் திரும்பி வரும். ஒருவனது இதயத்திலிருந்து புறப்படுகின்ற வெறுப்பு முழுவேகத்தில் அவனிடம் திரும்பி வரவே செய்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது. அதுபோலவே அன்பின் ஒவ்வொரு வெளிப்பாடும் அவனிடம் வந்து சேர்கிறது.
நடைமுறைக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் முடிவற்ற முன்னேற்றக் கொள்கை ஏற்கக்கூடியதாக இல்லை. ஏனெனில் உலகில் உள்ள ஒவ்வொன்றின் இலக்கும் அழிவாகவே உள்ளது. நமது முயற்சிகளும் நம்பிக்கைகளும் அச்சங்களும் இன்பங்களும் எல்லாம் நம்மை எங்கே இட்டுச் செல்கின்றன? மரணமே நம் அனைவருக்கும் முடிவு. அதைப்போல் சர்வ நிச்சயமானது வேறு எதுவுமில்லை. ஆகவே இந்த நேர்கோட்டு இயக்கம், முடிவற்ற முன்னேற்றம் எங்கே உள்ளது? சிறிது தூரம் சென்றுவிட்டுல புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்தாக வேண்டும். அண்டப் பிழம்புகளிலிருந்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் முதலியவை உருவாகின்றன. மீண்டும் அவை கரைந்து அண்டப் பிழம்பிற்கே திரும்பிச் செல்கின்றன. எங்குமே இவ்வாறுதான் நடைபெறுகிறது. செடி, நிலத்திலிருந்து சத்தை எடுத்து வளர்கிறது. பின்னர் நிலத்திலேயே சங்கமித்து, அதைத் திருப்பிக் கொடுக்கிறது. உலகில் உள்ள உருவம் ஒவ்வொன்றும் சூழ்ந்துள்ள அணுக்களிலிருந்து ஆக்கப்பெற்று இறுதியில் அணுக்களாகவே ஆகின்றன. ஒரே விதி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகச் செயல்பட முடியாது; ஒரே விதத்தில் தான் செயல்படும். இதைவிட நிச்சயமானது வேறொன்றும் இல்லை. இயற்கைக்கு இது விதியானால் எண்ணங்களும் இந்த விதி பொருந்தும். எழுகின்ற எண்ணங்களும் மாய்ந்து, கிளம்பிய இடத்திற்கே செல்லும், நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இறைவன் அல்லது பரம்பொருள் என்று அழைக்கப்படுகின்ற நமது மூலகாரணத்திற்கு நாம் திரும்பிச் சென்றேயாக வேண்டும் நாம் கடவுளிடமிருந்து வந்தோம். நாம் அவரிடம் திரும்பிச் சென்றேயாக வேண்டும். அவரைக் கடவுள் என்றோ, சுத்தப் பிரம்மம் என்றோ இயற்கை என்றோ கூறிக்கொள்ளுங்கள், உண்மை அதுவே யாரிடம் அவை திரும்பிச் செல்லுமோ இந்த உண்மை சர்வ நிச்சயமானது. இயற்கை ஒரே நியதியில் இயங்குகிறது. ஒரு கோளத்தில் நிகழும் செயல்பாடே லட்சக்கணக்கான பிற கோளங்களிலும் நடைபெறுகிறது. கிரகங்களைப் பொறுத்தவரை எது உண்மையோ, அதுவே பூமியைப் பொறுத்தவரை மனிதனைப் பொறுத்தவரை, அனைத்தையும் பொறுத்தவரை, உண்மை. ஒரு பெரிய அலை எண்ணிறந்த சிற்றலைகளின் தொகுதியாகும். உலகத்தின் வாழ்வு என்பது லட்சக்கணக்கான சிற்றுயிர்களின் வாழ்க்கைத் தொகுதி. உலகத்தின் அழிவு என்பது இந்த லட்சக்கணக்கான சிற்றுயிர்களுடைய அழிவின் தொகுதி.
இப்பொழுது கேள்வி எழுகிறது. கடவுளிடம் திரும்பிச் செல்வது உயர்ந்த நிலையா, இல்லையா? அது உயர்நிலையே என்று யோக நெறியின் தத்துவ அறிஞர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். மனிதனின் இப்போதைய நிலை ஒரு வீழ்ச்சி என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியில்லை. மனிதனின் இப்போதைய நிலை ஓர் உயர்ச்சி என்று சொல்லக்கூடிய மதம் ஒன்று கூட உலகில் இல்லை. இதன் கருத்து என்னவென்றால் முதலில் அவன் பரிபூரணமானவனாக, தூயவனாக இருந்தான். பின்னர் வீழ்ச்சி அடையத் தொடங்கினான். இதற்குக் கீழே போக முடியாது என்ற நிலை வந்தால் மேல்நோக்கிப் படிப்படியாக முன்னேறி வட்டத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். வட்டம் பூர்த்தியாகியே தீரும். மனிதன் எவ்வளவுதான் கீழே சென்றாலும். இறுதியில் மேல்நோக்கி வந்து மூல காரணமாகிய இறைவனை அடைந்தேயாக வேண்டும். அவன் ஆரம்பத்தில் கடவுளிடமிருந்தே வந்தான். இடையில் மனிதன் ஆனான். இறுதியில் கடவுளிடமே திரும்பிப் போகிறான்,. இவ்வாறு துவைத நெறி அதனை விளக்குகிறது. அத்வைதத்தின்படி மனிதனே கடவுள் மறுபடியும் அவன் அவரை அடைகிறான்.
நமது இப்போதைய நிலை உயர்வானது என்றால், ஏன் இவ்வளவு அச்சமும் துயரமும்? அவற்றிற்கு ஏன் ஒரு முடிவு வரவில்லை? இந்த நிலை உயர்வானது என்றால் ஏன் இது முடிய வேண்டும்? நலிவதும் அழிவை நோக்கிச் செல்வதும் உயர்நிலை ஆகாது. ஏன் இந்த நிலை பயங்கரமாகவும் அதிருப்தியைத் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும்? மேல்நோக்கிச் செல்ல வேண்டுமானால் இந்த நிலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். நாம் மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு இதைக் கடந்தே தீர வேண்டும் என்ற அளவில் இதனை ஏற்றுக்கொள்ளலாம். அவ்வளவுதான். ஒரு விதையை நிலத்தில் இட்டால் அது அழுகி, சில காலத்திற்குள் கரைந்துவிடுகிறது. அந்த அழிவிலிருந்தே அழகிய புதிய மரம் உண்டாகிறது. அதுபோல் கடவுளாக வேண்டுமானால் ஒவ்வோர் உயிரும் அழிந்தே தீர வேண்டும். எனவே மானிடம் என்று நாம் அழைக்கின்ற இப்போதைய நிலையிலிருந்து எவ்வளவு விரைவாக வெளியேறுகிறோமோ அவ்வளவுக்கு நல்லது. அதற்காகத் தற்கொலை செய்துகொள்வதா? அல்லவே அல்ல. அதனால் குழப்பமே மிகும். நம்மை வருத்தவதும், உஙலகைப் பழிப்பதும், அதிலிருந்து வெளியேறும் வழிகள் அல்ல. நம்பிக்கையே இல்லாத மனத்தளர்வு என்ற சதுப்பு நிலத்தினூடே நாம் சென்றாக வேண்டும். எவ்வளவு விரைவாக அதைக் கடக்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது. மனிதநிலைதான் மிகவுயர்ந்த நிலை என்பது அல்ல இதனை எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மிகவுயர்ந்த நிலை என்று கூறப்பட்ட இந்தத் தனி நிலை. சிலர் பயப்படுவதுபோல் கடற்பஞ்சு அல்லது கல் போன்ற ஒரு நிலை அல்ல என்பதைப் புரிந்துகொள்வது தான் இதில் உண்மையில் கடினமான பகுதி. அவர்களைப் பொறுத்தவரை இரண்டு நிலைகளே உள்ளன. ஒன்று கல் நிலை; மற்றது கருத்து நிலை. வாழ்வு என்பதை இந்த இரண்டு நிலைகளுக்குள் வரையறுக்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? கருத்து அல்லது எண்ணத்தைவிட எல்லையற்ற அளவு உயர்ந்த நிலை ஒன்று இல்லையா? ஒளியின் அதிர்வுகள் மிகக் குறைவாக இருக்கும்போது நாம் ஒளியைக் காண்பதில்லை. அதிர்வுகள் சற்று அதிகரிக்கும்போது ஒளி நம் கண்களுக்குப் புலனாகிறது. அவை இன்னும் அதிகரித்தாலும் நாம் ஒளியைக் காண முடிவதில்லை. அது நமக்கு இருளாகிவிடுகிறது. இறுதியில் நிலவிய இருளும் முதலில் நிலவிய இருளும் ஒரே மாதிரி யானவையா? இல்லவே இல்லை. இரண்டும் இரு துருவங்கள். கல்லின் எண்ணமற்ற நிலையும் கடவுளின் எண்ண மற்ற நிலையும் ஒன்றா? ஒருபோதும் இல்லை. கடவுள் சிந்திப்பதில்லை. அவர் ஆராய்வதில்லை. அவர் ஏன் ஆராய வேண்டும்? ஆனால் அவர் அறியாதது ஏதாவது உண்டா? அப்படி ஏதாவது இருந்தால் அல்லவா அவர் ஆராய்ந்து அறிய வேண்டும். கல் ஆராய முடியாது. கடவுள் ஆராய்வதில்லை. இதுதான் கல்லுக்கும் கடவுளுக்கும் உள்ள வேறுபாடு. தத்துவ அறிஞர்கள் எண்ணத்திற்கு அப்பால் செல்ல பயப்படுகின்றனர். எண்ணத்திற்கு அப்பால் அவர்கள் எதையும் காண்பதில்லை.
ஆராய்ச்சி அறிவிற்கு, தர்க்க அறிவிற்கு அப்பால் எவ்வளவோ உயர்ந்த நிலைகள் உள்ளன. உண்மையில் ஆன்மீக வாழ்க்கையின் முதற்படியே புத்திக்கு அப்பால் தான் இருக்கிறது. எண்ணத்தையும் புத்தியையும் ஆராய்ச்சியையும் கடக்கும்போதுதான் கடவுளை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள். அதுதான் வாழ்வின் ஆரம்பம். சாதாரணமாக நாம் வாழ்வு என்று கூறுவது வெறும் கருநிலையே.
எண்ணத்தையும் பகுத்தறிவையும் கடந்தநிலை தான் மிகவுயர்ந்த நிலை என்று கூறுவதற்கான நிரூபணம் எது என்ற கேள்வி எழுகிறது. முதலில், உலகின் மாமனிதர்கள் அனைவரும் வாய்ச்சொல் வீரர்களைவிட எவ்வளவோ உயர்ந்தவர்கள். அனைவரும் உலகையே அசைத்தவர்கள். அனைவரும் தன்னலத்தைக் கனவிலும் கருதாதவர்கள். அனைவரும் இந்த வாழ்வு இதற்கு அப்பாலுள்ள எல்லையற்ற நிலையை அடையும் வழியில் உள்ள ஒரு நிலை மட்டுமே என்று உறுதியாகக் கூறியுள்ளனர். இரண்டாவதாக, அவர்கள் கூறியதுடன் மட்டும் நிற்கவில்லை. தாங்கள் சென்ற வழியில் செல்வதற்கான பாதையை ஒவ்வொருவருக்கும் காட்டியுள்ளனர். தாங்கள் பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு வேண்டிய சாதனங்களை விளக்கியுள்ளனர். மூன்றாவதாக, அவர்கள் காட்டிய பாதையைத் தவிர நமக்கு வேறு வழியும் இல்லை. வேறு விளக்கமும் எதுவும் இல்லை. இந்த உலக வாழ்வைவிட உயர்நிலை இல்லை என்று வைத்துக் கொண்டாலும், இந்த வட்டத்திற்குள்ளேயே நாம் ஏன் சுழன்று கொண்டிருக்கிறோம்? இந்த உலகைப் பகுத்தறிவு விளக்க முடியுமா? இந்த உலகை நாம் கடந்து செல்லாவிட்டால், உயர்ந்த எதையும் நாம் கேட்கக் கூடாது என்றால், புலன்களால் உணரக் கூடிய இந்த உலகமே நமது அறிவின் எல்லை என்று ஆகிவிடும். இது ஆஜ்ஞேய வாதம். ஆனால் புலன்களால் வரும் அறிவு சரியானது என்பதற்கு என்ன நிரூபணம் உள்ளது? ஒருவன் நடுவீதியில் அசையாமல் நின்று உயிரைவிடத் தயாராக இருப்பானானால் அவனையே உண்மையான சந்தேகவாதி என்று நான் கூறுவேன். பகுத்தறிவே எல்லாம் என்றால் சூன்யவாதத்தின் இந்தப் பக்கத்தைப் பற்றிக்கொண்டு நாம் எங்கும் நிற்க முடியாது. ஒருவன் தேடும் பணம், பெயர், புகழ் இவற்றைத் தவிர மற்றவற்றில் உண்மையில்லை என்று கூறினால் அவன் ஓர் ஏமாற்றுக்காரன். பகுத்தறிவு என்றழைக்கப்படுகின்ற உறுதியான சுவரை நம்மால் தாண்டிச் செல்ல முடியாது என்று கான்ட் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்திருக்கிறார். ஆனால் இந்தியத் தத்துவச் சிந்தனைகள் அடிப்படையாகக் கொள்கின்ற முதல் கருத்து இதுதான். இந்த அடிப்படையில் நின்றுகொண்டுதான் பகுத்தறிவைக் கடந்த ஒன்றைத் துணிந்து தேடவும், அதை அடைவதில் வெற்றி பெறவும் செய்துள்ளனர். அதில் மட்டுமே நமது இப்போதைய நிலைக்கான விளக்கத்தைக் காண முடியும். இந்த உலகிற்கு அப்பால் நம்மை இட்டுச் செல்வதான ஒன்றைப் படிப்பதன் பலன் இதுவே. நீயே எங்கள் தந்தை! அஞ்ஞானப் பெருங்கடலைத் தாண்டி அக்கரைக்கு எங்களை எடுத்துச் செல்வாயாக இதுவே மத விஞ்ஞானம் ஆகிறது வேறெதுவுமில்லை.
1. சமாதி பாதம்
சமாதி: அதன் ஆன்மீகப் பயன்கள்
1. அத யோகானுசாஸனம்
இனி யோகம் விளக்கப்படும்
2. யோகச்சித்த வ்ருத்தி நிரோத
சித்தம் பல்வேறு உருவங்களை எடுக்காமல், அதாவது பல்வேறு விருத்திகளாக மாறாமல் தடுப்பதே யோகம்.
இங்கு விரிவான விளக்கம் தேவைப்படுகிறது. சித்தம் என்றால் என்ன, விருத்திகள் என்றால் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். எனக்குக் கண்கள் உள்ளன. ஆனால் காண்பவை அவை அல்ல. அதற்குரிய மையத்தை மூளையிலிருந்து அகற்றி விடுங்கள் கண்கள் திறந்திருக்கும், பொருட்களின் பிம்பங்கள் விழித்திரையில் விழவும் செய்யும். ஆனாலும் கண்கள் காணாது. எனவே கண்கள் காட்சிப்பொறிகள் அல்ல. அவை வெறும் இரண்டாந்தரக் கருவிகளே. காட்சிப் பொறி மூளையிலுள்ள ஒரு நரம்பு மையத்தில் உள்ளது. பார்ப்பத்தற்குக் கண்கள் மட்டுமே போதாது. சிலவேளைகளில் மனிதன் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குகிறான். ஒளி இருக்கிறது, படம் இருக்கிறது. ஆனால் மூன்றாவதாக ஒன்று தேவைப்படுகிறது. அதுதான் மனம். மனம் பார்வைக்கான பொறியுடன் இணைய வேண்டும். கண் புறக்கருவி; மூளை மையமும் அதனுடன் செயல்புரிய மனமும் தேவைப்படுகின்றன,. ஓசையுடன் ஒரு வண்டி தெரு வழியே செல்கிறது. நீங்கள் ஓசையைக் கேட்பதில்லை. ஏன்? உங்கள் மனம் கேட்கும் பொறியுடன் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. முதலில் கருவி, இரண்டாவது புலன், மூன்றாவது, மனம் இந்த இரண்டுடனும் இணைதல். மனம் பொருளின் பதிவை உள்ளே எடுத்துச் சென்று, இன்னதென்று தீர்மானிக்கின்ற புத்தியிடம் கொடுக்கிறது. புத்தியிலிருந்து எதிர்ச் செயல் வெளிப்படுகிறது. இந்த எதிர்ச் செயலுடன் கூடவே நான் உணர்வும் வெளிப்படுகிறது. பின்னர் செயல் மற்றும் எதிர்ச் செயலின் சேர்க்கை, உண்மை ஆன்மாவாகிய புருஷனிடம் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சேர்க்கையின் வழியாக ஆன்மா பொருளை உணர்கிறது.
இந்திரியங்கள், மனம், புத்தி, நான் உணர்வு-இவற்றின் தொகுதியே அந்தக்கரணம். இவை சித்தத்தின் வேறுபட்ட செயல்பாடுகள் மட்டுமே. சித்தத்தில் உள்ள எண்ண அலை விருத்தி(நேரடிப் பொருள்: சுழி) என்று அழைக்கப்படுகிறது.
எண்ணம் என்றால் என்ன? ஈர்ப்பு, சக்தி, விலக்கு சக்தி போன்ற ஓர் ஆற்றலே எண்ணம். இயற்கையின் எல்லையற்ற ஆற்றல் சேமிப்புக் கிடங்கிலிருந்து சிலவற்றைச் சித்தம் எடுத்து, தனக்குரியதாக்கி, எண்ணமாக வெளியே அனுப்புகிறது. உணவின் மூலமாக நமக்குச் சக்தி கிடைக்கிறது. உணவிலிருந்தே உடலின் இயக்கத்திற்கான சக்தி கிடைக்கிறது. மற்ற நுண் சக்திகளைச் சித்தம் எண்ணமாக வெளியே அனுப்புகிறது. இதிலிருந்து மனம் உணர்வுப் பொருளல்ல என்பது தெரிகிறது. இருப்பினும் உணர்வுடையதுபோல் தோன்றுகிறது. ஏன்? ஏனெனில் உணர்வுப் பொருளான ஆன்மா அதன் பின்னால் உள்ளது உணர்வுப் பொருள் நீங்கள் மட்டுமே. மனம் என்பது புறவுலகை அறிந்துகொள்வதற்கான ஒரு கருவி, அவ்வளவு தான். நீரில் ஒரு கல்லை எறிந்தால், அதற்கு எதிர்ச் செயலாக நீர் அலை வடிவில் எறியப்படுகிறது. அதுபோல், அறியப்பட முடியாத பொருளிலிருந்து வரும் சமிஜ்ஞை, மனத்தைத் தாக்குகிறது, மனம் புத்தகத்தின் வடிவை எதிர்ச் செயலாகத் தருகிறது. உண்மையில் பிரபஞ்சம் என்பது மனத்தில் எதிர்ச் செயலை உண்டாக்குகின்ற ஒரு நிமித்தம் மட்டுமே, புத்தக வடிவமோ, யானை வடிவமோ, மனித வடிவமோ புறத்தில் இல்லை. நாம் அறிவதெல்லாம் புறப் பொருட்களினால் மனத்தில் உண்டாகும் பிரதிச் செயலை மட்டுமே. ஜான் ஸ்டூவர்ட் மில் கூறியது போல் உணர்ச்சிகள் தருகின்ற நிரந்தர வாய்ப்பே ஜடப்பொருள் புறவுலகில் உள்ளது சமிஜ்ஞை மட்டுமே.
உதாரணத்திற்கு முத்துச் சிப்பியை எடுத்துக்கொள்ளுங்கள். முத்து எவ்வாறு உண்டாகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். நுண்ணுயிரி ஒன்று சிப்பியின் ஓட்டிற்குள் புகுந்து உறுத்தலை உண்டாக்குகிறது. உடனே சிப்பி அதைச் சுற்றி ஒரு திரவத்தைச் சொரிந்து அந்த நுண்ணுயிரியை மூடுகிறது. இந்தத் திரவமே முத்து ஆகிறது. நமது சொந்தப் பூச்சே நாம் அறிகின்ற இந்தப் பிரபஞ்சம், உள்ளே உள்ள நுண்ணுயிரி உண்மையான பிரபஞ்சம். சாதாரண மனிதன் இதைப் புரிந்துகொள்வதில்லை. ஏனெனில் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது திரவத்தால் பூசி விடுவதால் அந்தப் பூச்சையே காண்கிறான். விருத்திகள் என்றால் என்ன என்பது இப்போது நமக்குத் தெரிகிறது. உண்மை மனிதன் மனத்திற்குப் பின்னால் இருக்கிறான். மனம் அவன் வசத்தில் உள்ள ஒரு கருவி. அவனது உணர்வே மனத்தின் வழியாக ஊடுருவி வெளிப்படுகிறது. நீங்கள் பின்னால் நிற்கும்போதுதான் மனம் உணர்வு மயமாகிறது. உணர்வுப் பொருளாகிய நீங்கள் மனத்தைக் கைவிட்டீர்களானால் அது சிதறி மறைகிறது. சித்தம் என்றால் என்ன என்பது நமக்குத் தெரிகிறது. அது மனத்தின் மூலப்பொருள். புறக் காரணங்கள் தூண்டுவதால் அதில் எழும் அலைகளும் சுழிகளுமே விருத்திகள். இந்த விருத்திகளே நமது பிரபஞ்சம்.
ஒரு குளத்தின் மேற்பரப்பை அலைகள் மூடியிருந்தால் அடியை நாம் காண்பதில்லை. அலைகள் அடங்கி, நீர்ப்பரப்பு அமைதியுற்றால் மட்டுமே அடிப்பகுதியைச் சிறிதாவது காண முடியும். நீர், சேறு கலந்ததாக இருந்தாலோ கலங்கியிருந்தாலோ அடியைக் காண முடியாது. நீர் தெளிந்து அலையற்று இருந்தால்தான் அடிப்பகுதியைக் காண முடியும். குளத்தின் அடியே உண்மையான நமது சொந்த ஆன்மா, குளமே சித்தம், அலைகளே விருத்திகள்.
மனத்திற்கு மூன்று நிலைகள் உண்டு; ஒன்று தமஸ் என்று அழைக்கப்படும். இது விலங்குகளிடமும் மூடர்களிடமும் காணப்படுவது. தீமை செய்ய மட்டுமே இது செயல்படுகிறது. இதைத் தவிர வேறு எந்த எண்ணமும் மனத்தின் இந்த நிலையில் எழுவதில்லை. அடுத்தது மனத்தின் செயல்படு நிலை. அதாவது ரஜோ குண நிலை, அதிகாரமும் இன்ப நுகர்ச்சியுமே அதன் முக்கிய நோக்கங்கள். நான் அதிகாரம் பெற்று, மற்றவர்களை அடக்கி ஆள்வேன் என்ற எண்ணம், மூன்றாவதாக, அமைதியும் சாந்தமும் நிறைந்த சர்வ நிலை உள்ளது. இங்கே அலைகள் ஓய்ந்துவிடுகின்றன. மனமாகிய குளத்தின் நீர் தெளிவாக இருக்கிறது. இது செயலற்ற நிலையல்ல, மாறாக தீவிர செயல்படு நிலையாகும். அமைதியாயிருப்பதே ஆற்றலின் மிகப் பெரிய வெளிப்பாடு, செயலில் ஈடுபடுவது எளிது. கடிவாளங்களை விட்டுவிட்டால் குதிரைகள் அவை விரும்பிய திசையில் உங்களை இழுத்துச் செல்லும். இதை எல்லோராலும் செய்ய முடியும். ஆனால் பாய்ந்தோடும் குதிரைகளை இழுத்துப் பிடித்து நிறுத்துபவனே வலிமையுடையவன். அவற்றின் போக்கில் விடுவது, அல்லது அடக்குவது, இரண்டில் எதற்கு அதிக பலம் வேண்டும்? மந்தமாக இருப்பவன் சாந்தமானவன் அல்ல மந்த நிலையையோ சோம்பலையோ தவறாக சத்வம் என்று எண்ணிவிடக் கூடாது. மனத்தின் அலைகளை அடக்கியாள்பவனே சாந்தமானவன். வலிமையின் கீழ் நிலை வெளிப்பாடே செயல். அமைதியோ அதன் உயர் நிலை வெளிப்பாடு.
சித்தம் தன்னியல்பாகிய தூய நிலைக்குத் திரும்பிச் செல்லவே எப்போதும் முயல்கிறது. ஆனால் புலன்கள் அதைப் புறத்தே இழுக்கின்றன. அதை அடக்குவது, புறத்தே செல்வதான அதன் போக்கைத் தடுப்பது. அதை உட்புறமாகத் திருப்பி உணர்வுமயமான புருஷனை நோக்கிச் செல்லும் பாதையில் செலுத்துவது இதுவே யோகத்தின் முதற்படி, ஏனெனில் இந்த வழியில்தான் சித்தம் அதற்குரிய சரியான பாதையில் போக முடியும்.
மிகத் தாழ்ந்தது முதல் மிகவுயர்ந்ததுவரை எல்லா பிராணிகளிலும் சித்தம் உள்ளது. ஆனால் மனிதனிடம் தான் அது புத்தியாக மிளிர்கிறது. சித்தம் புத்தி வடிவம் பெறாமல் இந்தப் படிகள் வழியாகச் செயல்பட்டு ஆன்மாவிற்கு முக்தியளிக்க அதனால் இயலாது. ஒரு பசுவுக்கோ நாய்க்கோ உடனடியாக முக்தி கிடைப்பது இயலாதது. ஏனெனில் அவற்றின் சித்தம் புத்தியாக மாற முடியாது.
சித்தம் கீழ்க்காணும் ஐந்து நிலைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அவை சஞ்சல நிலை (க்ஷிப்தம்), மந்த நிலை(மூடம்), பலமுக நிலை(விக்ஷிப்தம்) ஒருமுக நிலை(ஏகாக்ரம்). மூடுநிலை(நிருத்தம்) என்பன. சஞ்சல நிலையில் அது செயலில் ஈடுபடுகிறது. இன்ப துன்பங்களை வெளிப்படுத்தும் போக்குக் கொண்டதாக இருக்கிறது. மந்த நிலையில் அது மந்தமாக உள்ளது. தீமையை நாடுவதாக உள்ளது. இவற்றுள் முந்திய நிலை தேவர்களுக்கும் வானவர்களுக்கும், பிந்திய நிலை அசுரர்களுக்கும் இயல்பானது என உரையாசிரியர் கூறுகிறார். பலமுக நிலை என்பது சித்தம் ஒரு மையத்தில் தன்னை நிலைநிறுத்த முயலும் நிலையாகும். ஒருமுக நிலையில் அது ஒருமைப்பட முயல்கிறது. மூடுநிலை நம்மைச் சமாதி நிலையில் சேர்க்கிறது.
3. ததா த்ரஷ்டு ஸ்வரூபேஷவஸ்தானம்
அப்போது (மூடு நிலையில்) காண்பவன் (புருஷன்) தனது சொந்த(மாற்றமில்லாத) நிலையில் இருக்கிறான்.
அலைகள் அடங்கி, குளத்தின் நீர் அமைதி பெற்றவுடன் அதன் அடிப்பகுதியை நாம் தெளிவாகக் காண்கிறோம். மனமும் அது போலவே. அது அமைதியாகும் போது நமது சொந்த இயல்பு என்ன என்பதை நாம் காண்கிறோம். வேறு எதனுடனும் கலவாமல் நாம் நாமாகவே இருக்கிறோம்.
4. வருத்தி ஸாரூப்யமிதரத்ர
(மூடுநிலையில் அல்லாத) மற்ற வேளைகளில் புருஷன் சித்த விருத்திகளுடன் ஒன்றுபட்டிருக்கிறான்.
உதாரணமாக, ஒருவன் என்னை நிந்திக்கிறான். அது என் மனத்தில் ஒரு விருத்தியை உண்டாக்குகிறது. நான் என்னை அதனுடன் ஒன்றுபடுத்திக் கொள்கிறேன். பலன் துன்பமே.
5. வருத்தய: பஞ்சதய்ய க்லிஷ்டாஷக்லிஷ்டா
ஐந்து வகை விருத்திகள் உள்ளன(சில)துன்பம் தருபவை. (வேறு சில) துன்பம் அற்றவை.
6. ப்ரமாண விபர்யய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய
(அவை) சரியான அறிவு, தவறான அறிவு, சொல் மயக்கம், தூக்கம், ஞாபகம் என்பவையாகும்.
7. ப்ரத்யக்ஷõனுமானாகமா ப்ரமாணானி
நேரடி அறிவு, ஊகம், தகுதியான அத்தாட்சி என்பவை நிரூபணங்கள்.
நமது நேரடி அறிவில் இரண்டு, ஒன்றுக்கொன்று முரண்படாமல் இருக்குமானால் அதனை நாம் நிரூபணம் என்கிறோம். ஒன்றைப்பற்றிக் கேள்விப்படுகிறோம். அது நாம் ஏற்கனவே கேள்விப்பட்டதிலிருந்து முரண்படுமானால் அதனுடன் போராடத் தொடங்குகிறோம். அதை நாம் நம்புவதில்லை. மூன்றுவிதமான நிரூபணங்கள் உள்ளன. முதலில் நேரடி அறிவு, பிரத்தியட்சம், புலன்களை ஏமாற்றுவதான குறைகள் எதுவும் இல்லாதிருக்குமானால் நாம் காண்பவை, உணர்பவை எல்லாமே நிரூபணம்தான். இந்த உலகை நாம் காண்கிறோம். உலகம் இருப்பதற்கு அது போதிய நிரூபணம் ஆகிறது.
இரண்டாவது, ஊகம், அனுமானம், ஓர் உடையாளத்தைக் காண்கிறோம். அந்த அடையாளத்திற்குரிய பொருளை அதிலிருந்து ஊகித்தறிதல்.
மூன்றாவது பிரமாணம் ஆபத் வாக்கியம், உண்மையைக் கண்டவர்களான யோகிகள் நேரில் கண்டுணர்ந்தவை.
நாம் எல்லோரும் அறிவைப் பெறவே போராடுகிறோம். ஆனால் நீங்களும் நானும் நீண்டகாலம் கடுமையாகப் பாடுபட்டு, சிரமம் மிக்க அறிவாராய்ச்சிப் பாதை வழியாக அறிவைப் பெற வேண்டியுள்ளது. தூயவனான யோகியோ இவற்றைக் கடந்துவிட்டான். அவனது மனத்தின் முன் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே ஒன்றுதான். அவன் படிப்பதற்கான திறந்த ஒரு புத்தகம்தான். அறிவைப் பெறுவதற்காக அவன் நம்மைப் போல் சிரமமான பாதை வழியாகச் செல்ல வேண்டியது இல்லை. அவனது வார்த்தைளே நிரூபணமாக, பிரமாணமாக ஆகிவிடுகிறது. ஏனெனில் அவன் தன்னுள்ளேயே அறிவைக் காண்கிறான். நமது புனித சாஸ்திரங்களை எழுதியவர்கள் இத்தகையவர்களே. எனவே சாஸ்திரங்கள் பிரமாணர்களாகின்றன. அத்தகையோர் இப்போது இருப்பார்களானால் அவர்களது வார்த்தைகள் பிரமாணம் ஆகும்.
வேறு சில தத்துவ அறிஞர்களோ, ஆப்த வாக்கியங்களைப்பற்றி நீண்ட விவாதம் நிகழ்த்தி, யோகிகளின் வார்த்தைக்குப் பிரமாணம் எது என்று கேட்கின்றனர். யோகிகளின் நேரடி அனுபவமே அத்தாட்சி. ஏனெனில் கடந்தகால அறிவுக்கு முரண்படாமல் இருக்குமானால் நான் காண்பவை எல்லாமே பிரமாணம், நீங்கள் காண்பவையும் எல்லாமே பிரமாணம்தான். புலன்களைக் கடந்த அறிவு உள்ளது. அது விவேக புத்திக்கும், மனித குலத்தன் கடந்தகால அனுபவத்திற்கும் முரண்படாமல் இருந்தால் அந்த அறிவு பிரமாணம், ஒரு பைத்தியக்காரன் இந்த அறைக்குள் வந்து, தன்னைச் சுற்றிலும் தேவதூதர்களைக் காண்பதாகச் சொல்லலாம். அது பிரமாணம் ஆகாது. முதலில் அது உண்மையறிவாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, அது கடந்தகால அறிவிற்கு முரண்படக் கூடாது. மூன்றாவதாக அது சொல்பவனின் குணத்தைச் சார்ந்திருக்க வேண்டும். ஒருவனது குணத்தைப்பற்றி அவ்வளவு கவலைப்பட வேண்டியதில்லை. அவன் என்ன சொல்கிறான் என்பதுதான் முக்கியம், அவன் சொல்வது என்ன என்பதைக் கவனிக்க வேண்டும் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இது மற்ற விஷயங்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கலாம், தீயவனாக இருக்கின்ற ஒருவன் வானியலில் ஓர் உண்மையைக் கண்டு பிடித்திருக்கலாம். ஆன்மீகத் துறையில் விஷயமே வேறு. தூயவன் அல்லாத ஒருவன் ஒருபோதும் ஆன்மீக உண்மைகளை அடையும் வல்லமை பெற மாட்டான்.
ஆகவே தன்னை ஆப்தன் என்று சொல்லிக் கொள்கின்ற ஒருவன் முற்றிலும் தன்னலமற்றவனாகவும் புனிதமானவனாகவும் இருக்கின்றானா என்று முதலில் பார்க்க வேண்டும். இரண்டாவதாக, அவன் புலன்களைக் கடந்தவனாக இருக்கிறானா என்று பார்க்க வேண்டும். மூன்றாவதாக, அவன் கூறுபவை மனிதகுலத்தின் கடந்தகால அறிவுடன் முரண்படாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை எதுவும் பழைய உண்மைக்கு மாறுபட்டதாக இருக்க முடியாது. மாறாக அதை அனுசரித்துப் போவதாகவே இருக்கும். நான்காவதாக, அந்த உண்மை சோதித்துப் பார்க்கத் தக்கதாக இருக்க வேண்டும். தான் ஒரு காட்சியைக் கண்டதாகவும், அந்தக் காட்சி மற்றொருவனுக்குக் கிடைக்காது என்றும் ஒருவன் கூறினால் அவனை நான் நம்ப மாட்டேன். அது ஒவ்வொருவரும் சோதிக்கத் தக்காத இருக்க வேண்டும். தன் அறிவை விற்கும் ஒருவன் ஆப்தன் அல்ல. முதலில் இந்த நிபந்தனைகள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும். முதலில் அவன் தூயவனா, சுயநல நோக்கம் எதுவும் இல்லாதவனா, பணத்திற்கோ புகழுக்கோ ஆசைப்படாதவனா என்பதைப் பார்க்கவேண்டும். இரண்டாவதாக, அவன் உணர்வுகடந்த நிலையை அடைந்தவனா என்பது தெளிவாக வேண்டும். நாம் நமது புலன்களால் அடைய முடியாததும் உலகிற்குப் பயன்படக் கூடியதாகவும் உள்ள ஒன்றை அவன் நமக்குத் தரவேண்டும். மூன்றாவதாக, அந்த உண்மை மற்ற உண்மைகளுக்கு முரண்படாததாக இருக்க வேண்டும்; விஞ்ஞான பூர்வமான மற்ற உண்மைகளுக்கு முரண்படுமானால் உடனடியாக அதனை விலக்கிவிட வேண்டும். நான்காவதாக, அவன் கூறுவது, தன் கொள்கை தனக்கு மட்டுமே சாத்தியம் என்ற ரீதியில் இருக்கக் கூடாது, எல்லோரும் பின்பற்றக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். ஆகவே நேரடியான புலனறிவு, ஊகம், ஆப்த வாக்கியம் என்பவை மூவகைப் பிரமாணங்கள்.
ஆப்தன் என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இயலாது. அருள் ஆவேசம் என்பதல்ல அந்த வார்த்தை, ஏனெனில் அருள் ஆவேசம் வெளியிலிருந்து வருவதாக நம்பப்படுகிறது. ஆனால், இந்த ஞானமோ மனிதனின் உள்ளிருந்து வருவது, அடையப் பெற்றவன் என்பது ஆப்தன் என்ற சொல்லின் பொருளாகும்.
8. விபர்யயோ மித்யா ஞானமதத்ரூப ப்ரதிஷ்ட்டம்
தவறான அறிவு என்பது பொய்யறிவு, அது உண்மை இயல்பில் நிலைபெறாது.
முத்துச்சிப்பியை வெள்ளியென்று எண்ணுவது போல் ஒன்றை மற்றொன்றாகப் பிழைபட எண்ணுவதால் எழும் விருத்திகள் அடுத்த வகையாகும்.
9. சப்தஜ்ஞானானுபாதீ வஸ்துசூன்யோ விகல்ப:
சொற்களால் (அவை சுட்டுகின்ற) பொருள் இல்லாத நிலையில் வருவது சொல் மயக்கம்.
விகல்பம் என்ற மற்றொரு வகை விருத்திகள் உள்ளன. ஒரு சொல்லைக் கேட்கிறோம், அதன் பொருளைப்புரிந்து கொள்ளக் காத்திருக்காமல் உடனே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். இது சித்தத்தின் பலவீனத்திற்கு அறிகுறி. கட்டுப்பாடு என்பதன் உண்மையை இப்போது நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். ஒருவன் எவ்வளவுக்கு பலவீனனாக இருக்கிறானோ, அந்த அளவிற்கு கட்டுப்பாடு ஆற்றல் குறைந்தவனாக இருப்பான். எப்போதும் இந்த நியதிமூலம் உங்களைச் சோதித்துப் பாருங்கள். உங்களுக்குக் கோபம் அல்லது வருத்தம் வரும்போது, சில செய்திகள் எவ்வாறு உங்கள் மனத்தை விருத்திகளாக எழச் செய்கிறது என்பதை ஆராய்ந்து அறியுங்கள்.
10. அபாவப்ரத்யயாலம்பனா வ்ருத்திர்நித்ரா
சூன்ய உணர்ச்சியைத் தழுவி நிற்கும் விருத்தி தூக்கம்.
தூக்கமும் கனவும் அடுத்த வகை விருத்திகள். நாம் தூங்கினோம் என்பதை விழிக்கும்போது அறிகிறோம். அனுபவித்ததிலிருந்தே நினைவு வர முடியும். நாம் அனுபவிக்காததை நினைவிற்குக் கொண்டுவர முடியாது. ஒவ்வோர் எதிர்ச் செயலும் சித்தக் குளத்தில் எழும் ஒரு விருத்தியே. தூக்கத்தின்போது மனத்தில் விருத்திகள் எதுவும் இல்லையென்றால் அங்கு உடன்பாடாகவோ எதிர் மறையாகவோ எந்த அனுபவமும் இருக்காது. பின்னர் அவற்றை நாம் நினைவுகூரவும் மாட்டோம். தூங்கும்போது மனத்தில் ஒருவகை விருத்தி எழுவதன் காரணத்தால்தான் பின்னால் நாம் நினைவுகூர முடிகிறது. நினைவு மற்றொரு வகை விருத்தி. அதற்கு ஸ்மிருதி என்று பெயர்.
11. அனுபூத விஷயாஸம்ப்ரமோஷ: ஸ்ம்ருதி:
அபவித்த விஷயங்கள் (அதாவது விஷயங்களின் விருத்திகள்) நழுவிவிடாதிருப்பது (அத்துடன் சம்ஸ்காரங்களின் மூலம் திரும்ப உணர்வுக்கு வருவதும்) நினைவு ஆகிறது.
நேரடி அனுபவம், தவறான அறிவு, சொல் மயக்கம், தூக்கம் இவற்றிலிருந்தெல்லாம் நினைவு வர முடியும். சான்றாக ஒரு வார்த்தையை நீங்கள் கேட்கிறீர்கள். அந்தச் சொல் சித்தமாகிய குளத்தில் எறிந்த கல்லைப் போன்றது. அது ஓர் அலையை உண்டாக்குகிறது. அந்த அலை பல அடுக்குத் தொடர்களை எழுப்புகிறது. இதுவே நினைவு. தூக்கத்திலும் அவ்வாறே. தூக்கம் என்ற அலை சித்தத்தில் ஒரு நினைவு அலையை எழுப்புகிறது. இது கனவு. நனவு நிலையில் நினைவு எனப்படுகின்ற அலையின் மற்றோர் உருவமே கனவு.
12. அப்யாஸ வைராக்யாப்யாம் தன்னிரோத:
பயிற்சியாலும் பற்றின்மையாலும் அவற்றை அடக்கலாம்.
பற்றின்மை வேண்டுமானால் மனம் தெளிவாக, நன்மை நிறைந்ததாக, விவேகம் உடையதாக இருக்க வேண்டும். பயிற்சி ஏன் வேண்டும்? ஒவ்வொரு செயலும் நீர்ப்பரப்பில் எழுகின்ற அலைகளைப் போன்றவை. அலைகள் ஓய்ந்தபின் என்ன எஞ்சியிருக்கிறது? சம்ஸ்காரங்கள், பதிவுகள். இத்தகைய பல பதிவுகள் மனத்தில் ஏற்படும் போது அவை ஒருங்கிணைந்து பழக்கம் ஆகிறது. பழக்கம் என்பது இரண்டாம் இயல்பு என்பர், முதல் இயல்பும் அதுதான், மனிதனின் முழு இயல்பும் அதுதான். நாம் இப்போது எதுவெல்லாமாக இருக்கிறோமோ அது பழக்கத்தின் விளைவுதான். இது நமக்கு ஆறுதலாக இருக்கிறது. ஏனெனில் அது வெறும் பழக்கம் மட்டுமே என்றால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும், அதை உருவாக்கலாம் இல்லாமலும் செய்யலாம்.
மனத்தைக் கடந்து செல்கின்ற ஒவ்வொரு விருத்தியும் அதில் விட்டுச் செல்கின்ற விளைவே சம்ஸ்காரம். இந்தப் பதிவுகளின் ஒட்டுமொத்தமே நமது குணம். இதில் ஏதாவது ஒரு விருத்தி மேலோங்கும்போது அதற்கேற்ப ஒருவனது குணம் அமைகிறது. நல்லவை மேலோங்கினால் நல்லவன் ஆகிறான்; தீயவை மேலோங்கினால் தீயவன் ஆகிறான். மகிழ்ச்சியானவை மேலோங்கினால் மகிழ்ச்சி அடைகிறான். தீய பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்வதுதான். தீய சம்ஸ்காரங்கள் விட்டுச் சென்றுள்ள தீயபழக்கங்களை நல்ல பழக்கங்களால்தான் கட்டுப்படுத்த வேண்டும். தொடர்ந்து நற்செயல்களைச் செய்யுங்கள் ! புனித எண்ணங்களை எப்போதும் எண்ணுங்கள் ! தீய சம்ஸ்காரங்களை அடக்க இது ஒன்றுதான் வழி. திருந்தவே முடியாதவன் என்று ஒருவனை ஒருபோதும் கூறாதீர்கள். ஏனெனில் பல பழக்கங்களின் மொத்தமான ஒரு குணத்தையே அவன் வெளிப்படுத்துகிறான். இதனைப் புதிய நல்ல பழக்கங்களால் மாற்றிவிட முடியும். தொடர்ந்த பழக்கம் குணத்தை உருவாக்குகிறது. தொடர்ந்த பழக்கங்கள் மட்டுமே குணத்தை மாற்றியமைக்க முடியும்.
13. தத்ர ஸ்திதௌ யத்னோஷப்யாஸ:
அவற்றை (விருத்திகளை) முற்றிலுமாக அடக்கி வைப்பதற்கான தொடர்ந்த முயற்சியே பயிற்சி எனப்படுகிறது.
பயிற்சி என்பது என்ன? மனத்தை அலை வடிவமாக வெளியே போகவிடாமல் தடுத்து, சித்தவடிவமாக நிலை பெறவைக்கும் முயற்சியே.
14. ஸ து தீர்க கால நைரந்தர்ய ஸத்கார ஸேவிதோ த்ருடபூமி:
(அடைய வேண்டிய லட்சியத்தில் அன்புபூண்டு) நீண்ட காலமாக முயற்சிகள் செய்தால் அது உறுதியாக நடைபெறும்.
கட்டுப்பாடு என்பது ஒரே நாளில் வருவதில்லை. நீண்ட தொடர்ந்த பயிற்சியால் அது முடியும்.
15. த்ருஷ்டானுச்ரவிகவிஷயவித்ருஷ்ணஸ்ய வசீகார ஸம்ஜ்ஞா வைராக்யம்
பார்த்த அல்லது கேட்ட விஷயங்களின் மீதுள்ள ஆசையை விட்டவர்களிடம் எந்த மனநிலை வந்து சேர்கிறதோ, எந்த மனநிலையில் பொருட்களின் மீதுள்ள ஆசையெல்லாம் அவர்கள் அடக்க முடியுமோ அதுவே பற்றின்மை.
நமது செயல்களைத் தூண்டுவதற்கு இரு சக்திகள் உள்ளன: (1) நாமே காண்பது, (2) பிறரது அனுபவம். இந்த இரண்டு சக்திகளும் நமது மனமாகிய குளத்தில் பல்வேறு அலைகளை எழுப்புகின்றன. இந்தச் சக்திகளை எதிர்த்துப் போராடி, மனத்தை அடக்கி வைக்கும் ஆற்றல் பற்றின்மைக்கு உண்டு. அத்தகைய பற்றின்மையே நமக்கு வேண்டும். நான் ஒரு தெரு வழியே சென்று கொண்டிருக்கிறேன், ஒருவன் வந்து என் கைக்கடிகாரத்தைப் பிடுங்கிச் சென்றுவிடுகிறான். இது எனது சொந்த அனுபவம். நான் அதைப் பார்க்கிறேன். உடனே அது என் சித்தத்தைக் கோப வடிவ அலையாக எழுப்புகிறது. அதனை எழவிடாதீர்கள். அதை உங்களால் தடுக்க முடியாவிட்டால் நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், தடுக்க முடியுமானால் உங்களிடம் வைராக்கியம் உள்ளது, பற்றின்மை உள்ளது. இனி, உலகியல் மனிதர்களைப் பார்க்கும்போது, புலனின்பங்களே மிகவுயர்ந்த லட்சியம் என்று நமக்குப்படுகிறது. இவை பலமான கவர்ச்சிகள். இவற்றை மறுத்துவிட்டு, மனம் அந்த ஆசை வடிவான விருத்தியாக எழாமல் அடக்குவது வைராக்கியம். நமது அனுபவங்கள் மற்றும் பிறரது அனுபவங்களால் வரும் இரண்டுவிதத் தூண்டுசக்திகளையும் அடக்கி, அவை சித்தத்தை அடக்கியாளதபடி செய்வது பற்றின்மை. நாம் அடக்கவேண்டுமே தவிர, அவை நம்மை அடக்கக் கூடாது. இத்தகைய மன வலிமையே பற்றின்மை. பற்றின்மை ஒன்றே முக்திக்கு வழி.
16. தத்பரம் புருஷக்யாதேர்குணவைத்ருஷ்ண்யம்
தீவிரப் பற்றின்மை என்பது பண்புகளில்கூடப் பற்றற்று இருத்தலாகும். இது புருஷனை (அதாவது புருஷனின் உண்மை இயல்பை) அறிவதால் ஏற்படுகிறது.
பண்புகளின் மீதுள்ள நமது கவர்ச்சியையும் அகற்ற வல்லதாகும்போது, அது வைராக்கிய ஆற்றலின் மிக உயர்ந்த வெளிப்பாடாகும். புருஷன் அல்லது ஆன்மா யார், குணங்கள் என்பவை என்ன என்பதை முதலில் அறிய வேண்டும். யோகத் தத்துவத்தின்படி, இயற்கை முழுவதும் மூன்றுவகை குணங்களால் அல்லது சக்திகளால் ஆக்கப்பட்டுள்ளன. அவை தமஸ், ரஜஸ், சத்வம் இந்த மூன்று குணங்களும் பவுதீக உலகில் இருள் அல்லது செயலற்ற நிலை, ஈர்ப்பு சக்தி அல்லது விலக்கும் சக்தி, இந்த இரண்டின் சமச்சீர் நிலை என்று மூன்று விதமாக வெளிப்படுகின்றன. இயற்கையிலுள்ள எல்லாமே இந்த மூன்று சக்திகளுடைய வெவ்வேறு விதமான சேர்க்கையின் வெளிப்பாடுகளே. சாங்கியத் தத்துவம் பிரகிருதியைப் பல்வேறு தத்துவங்களாகப் பிரிக்கிறது. ஆன்மா இவையனைத்தையும் கடந்தது, இயற்கையைக் கடந்தது. அது, தானே ஒளிர்வது, தூய்மையானது, பரிபூரணமானது. உணர்வுடையதாக இயற்கையில் காணப்படுகின்ற எல்லாமே இந்த ஆன்மாவின் மீதுள்ள பிரதிபலிப்பே. இயற்கை என்பது ஜடப்பொருள். இயற்கை என்ற சொல் மனத்தையும் உள்ளடக்கியது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மனம் இயற்கையில் உள்ளது, எண்ணம் இயற்கையில் உள்ளது. எண்ணம் முதல் மிகவும் தூலமான ஜடப்பொருட்கள் வரை அனைத்தும் இயற்கையில் உள்ளன. அனைத்தும் இயற்கையின் வெளிப்பாடே. இந்த இயற்கை, மனிதனின் ஆன்மாவை மறைத்துள்ளது. இயற்கை அந்தத் திரையை விலக்கியதும் ஆன்மா தன் மகிமையுடன் தோன்றி மிளிர்கிறது. பதினைந்தாம் சூத்திரத்தில் விளக்கியதுபோல் (பொருட்களை அல்லது இயற்கையையே அடக்குவதாகிய) பற்றின்மை தான் ஆன்மாவை வெளிப்படுவதில் மிகவும் உதவுகிறது. அடுத்த சூத்திரம் யோகியின் குறிக்கோளான சமாதியை விளக்குகிறது.
