மேலை சாளுக்கியரை வென்ற ராஜாதிராஜன்: கர்நாடகாவில் கட்டிய துாம்பு கல்வெட்டு
மேலை சாளுக்கியரை வென்ற ராஜாதிராஜன்: கர்நாடகாவில் கட்டிய துாம்பு கல்வெட்டு
ADDED : நவ 22, 2025 07:51 AM

- நமது நிருபர் -
ராஜாதிராஜன் கட்டிய துாம்பு கல்வெட்டு, மத்திய தொல்லியல் துறையினரால் கர்நாடகாவில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தியவர்கள் பிற்கால சோழர்கள். அதில், ராஜராஜ சோழன் தமிழகம் முழுவதையும் ஒருங்கிணைத்ததுடன், கடல் கடந்து சில நாடுகளையும் கைப்பற்றி, தமிழர்கள் அச்சமின்றி வணிகம், கலை, கலாசார தொடர்புகளை மேற்கொள்ள வழி வகுத்தார். அவரது படைத் தளபதியாகவும், பல போர்களை நடத்திய மாவீரராகவும் அவரது மகன் ராஜேந்திர சோழன் இருந்தார்.
ராஜேந்திர சோழன் மன்னரான போது, அவரின் மகன்களில் மூத்தவரான ராஜாதிராஜன் மிகப்பெரும் வீரனாக பல போர்க்களங்களில் வெற்றி பெற்று, தமிழகத்துக்கு புகழ் சேர்த்தார். அந்த வகையில், தற்போதைய கர்நாடக பகுதியை, அப்போது ஆண்ட மேலை சாளுக்கியர்களின் தலைநகராக, தற்போதைய மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கல்யாணி இருந்தது. மேலை சாளுக்கிய மன்னரான சோமேஸ்வரன், தமிழகத்துக்கும், வேங்கியை ஆண்ட சோழர்களுக்கும் தொல்லை தரும் வகையில் அடிக்கடி போரிட்டார்.
அப்போது, ராஜாதிராஜன் பெரும்படையுடன் கிருஷ்ணா நதிக்கரையில் நடத்திய போரில், மேலை சாளுக்கியர்களை வென்று அங்கேயே முடிசூட்டிக் கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தில், அங்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டன. அப்படி கட்டப்பட்ட துாம்பு கல்வெட்டை, தற்போது, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து, முனிரத்தினம் கூறியதாவது:
கர்நாடக மாநிலம் தேவனஹல்லி மாவட்டம்,பன்னிமங்கலா எனும் கிராமத்தில் உள்ள ஏரியில், முதலாம் ராஜாதிராஜன் எனும் சோழ மன்னரின் துாம்பு கல்வெட்டு உள்ளதை கண்டறிந்தோம். அதன் துாணின் மேல்பட்டையின் நான்கு புறங்களிலும், தமிழில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.
முன்பக்கம் அழகான கஜலட்சுமி உருவம், புடைப்பு சிற்பமாக பொறிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ராஜாதிராஜனின் பரம்பரை மற்றும் படையெடுப்புகளை குறிக்கும் மெய்கீர்த்தி கல்வெட்டு உள்ளது. ராஜாதிராஜனின், 27வது ஆட்சி ஆண்டான 1045ல், அரசரின் அதிகாரியாக இருந்த காமுண்டன் என்பவரால், இக்கட்டுமான பணி முடிக்கப்பட்டுள்ளதை, முதல்கட்ட ஆய்வில் கண்டறிந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

