தமிழக மீனவர்கள் படகுகளை மூழ்கடிக்க இலங்கை திட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை
தமிழக மீனவர்கள் படகுகளை மூழ்கடிக்க இலங்கை திட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை
ADDED : மே 05, 2025 01:53 AM

சென்னை: 'தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து, ஆழ்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ள நிலையில், மத்திய அரசு தலையிட்டு படகுகளை மீட்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
இலங்கை கடற்பகுதியில், மீன்வளத்தைப் பெருக்க வேண்டும். அதற்கு ஆழ்கடலில் செயற்கையான பவளப் பாறைகளை வளர்க்க வேண்டும்.
முதற்கட்டமாக, 34 படகுகளை உடைத்து மூழ்கடிப்பதன் வாயிலாக, பவளப் பாறைகளை எளிதாக வளர்க்க முடியும் என, இலங்கை அரசின் மீன்வளம் மற்றும் கடல்வளத் துறை சார்பில், அந்நாட்டு அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் முதன்மை நோக்கம் பவளப் பாறைகளை வளர்த்து, மீன்வளத்தைப் பெருக்குவது என்பதை விட, தமிழக மீனவர்களின் படகுகளை சிதைத்து, அவற்றை அவர்களுக்கு ஒருபோதும் கிடைக்கச் செய்யாமல் தடுப்பதன் தான்.
இதன் வாயிலாக அவர்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக ஒழிப்பது தான்.
இலங்கை அரசின் இந்தத் திட்டம் செயல் வடிவம் பெற்றால், தமிழக மீனவர்கள் வாழ வழியின்றி வாட நேரிடும்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஆண்டுக்கணக்கில் சிறை வைப்பது, கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கின்றனர்.
இப்படி பல நடவடிக்கைகளை எடுக்கும் இலங்கை அரசு, அடுத்த கட்டமாக படகுகளை சிதைத்து மூழ்கடிக்கும் திட்டத்தை செயல்படுத்த துடிக்கிறது.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்கும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.